பண்டாரகம - கல்துடே பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இரு தடவைகள் ஒரே பாணியில் திருடிய திருடனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தவறிய அழைப்பாக தொலைபேசி அழைப்பெடுத்து அதனூடாக காதல் வலை விரித்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வர்த்தக நிலையத்தில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பான விசாரணை பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி மஹேந்திர பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் விசாரணை செய்த பொலிஸாருக்கு களவு போன வர்த்தக நிலையம் முன்பாக வீடொன்றில் சிறு வர்த்தகம் ஒன்றினை முன்னெடுத்து வந்த நபர் ஒருவர், களவு இடம்பெற்ற தினத்தில் இருந்து காணாமல்போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த நபர் சிறு வயதில் தனது தாயை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவராவார்.
சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தினர். இதன்போது அந்த நபர் தங்கியிருந்த வீட்டின் பகுதி பூட்டப்பட்டிருந்த போதும் அதில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபரினுடையது என்பதை தெரிந்துகொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, அதனை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து இரவில் அழைப்பை ஏற்படுத்தச் செய்துள்ளார்.
அழைப்பை ஏற்படுத்தியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளான பெண், அண்ணா நீங்கள் யார்? உங்களிடம் இருந்து தவறிய அழைப்பொன்று வந்திருந்தது என கதையை ஆரம்பித்துள்ளார்.
அதற்கு சந்தேக நபர் இல்லை தங்கச்சி, நான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. நீங்கள் யார் தங்கச்சி என கேட்டுள்ளார்.
நான் பொலன்னறுவை அண்ணா. பாணந்துறையில் அறை எடுத்து தங்கி இருக்கின்றேன். அழைக்கவில்லை எனின் பரவாயில்லை எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
மறுகணமே மீளவும் சந்தேக நபர் அழைப்பை ஏற்படுத்தி, எனக்கு உன்னுடன் பேச பிடித்திருக்கின்றது. உன்னைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?' எனக் கோரியுள்ளார்.
அதன்படி திட்டத்தின் பிரகாரம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபருடன் பேச ஆரம்பித்துள்ளார். தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டதாகவும் தான் தொழில் செய்துகொண்டு பாணந்துறையில் தங்கி இருப்பதாகவும், தனிமையாக இருப்பது கொடுமையாக உள்ளதாகவும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கூறியுள்ளார்.
'உனக்காக கெசட் ரெக்கோர்டர் ஒன்றினை வாங்கிக்கொண்டு பாணந்துறை வருகின்றேன் தங்கமே' என கூறியுள்ள சந்தேக நபர் தன்னை ஒரு பணக்காரனாக காட்டிக் கொண்டு தான் ஜீப்பில் வருவதாகவும் இரவு உணவினை ஹோட்டல் ஒன்றுக்கு போய் இருவரும் சேர்ந்து உண்ணலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.
சந்தேக நபர் பாணந்துறை வருவதை உறுதி செய்த பொலிஸார் அவனை கைது செய்ய தயாராக இருந்தனர். மீள பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் வரும் வழியில் ஜீப் வண்டி பழுதடைந்துவிட்டதாகவும், பஸ் வண்டியில் வருவதாகவும் கூறியுள்ளார். பரிசுப் பொருட்களுடன் பஸ்ஸில் வந்து இறங்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அந்த வர்த்தக நிலையத் தில் திருடிய பணம் பொருட்கள் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை திரட்டியதாகவும், அதன் பின்னர் அளுத் கம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவருடன் மஹியங் கனைக்கு சென்றதாகவும் அவர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.