(நமது நிருபர்)
அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், இந்தியாவிற்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகளினால் 2026ஆம் ஆண்டிலும் நாட்டு மக்கள் சொல்லமுடியாத துயரங்களையே எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் போராட்ட இயக்கம் எச்சரித்துள்ளது.
மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம் நேற்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினர் வசந்த முதலிகே கூறுகையில்,
கடந்த 2025 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் சுபமான ஆண்டாக அமையவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளினால் மக்கள் மீது பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சுகாதாரம் மாத்திரமன்றி பிள்ளைகளின் கல்வி உபகரணங்களுக்குக் கூட வரி விதிக்கப்பட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இரகசிய உடன்படிக்கைகளின் ஊடாக நாட்டின் நிலப்பரப்புகளை இந்தியாவுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் முற்படுகிறது. குறிப்பாக, எவ்வித தரப்பரிசோதனைகளும் இன்றி இந்திய மருந்துகளை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே தரமற்ற மருந்துகளினால் பல நோயாளர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் அத்தகையதொரு அபாயகரமான சூழலே உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களைச் சூறையாடுகின்றன. மறுபுறம் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்கள் என்ற பெயரில் திருகோணமலை, மூதூர் மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, இந்திய நிறுவனங்களுக்கு அவற்றை தாரைவார்ப்பது பாரிய அநீதியாகும்.
அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகவே 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு' என்ற புதிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. விமர்சனங்களை முடக்கவும், போராட்டக்காரர்களைச் சிறையிலடைக்கவுமே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்து அல்ல. ஆனால், இந்த அரசாங்கமும் பழைய ரணில் - ராஜபக்ஷக்களின் கொள்ளைக்காரப் பொருளாதாரக் கொள்கையையே நடைமுறைப்படுத்துகிறது. ஆகவே, மக்கள் இந்த நவதாராளவாத பொருளாதாரப் பொறிக்கு எதிராக அணிதிரண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM