‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும், அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தெளிவான தகவல் தொடர்பாடல் அவசியம்
பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தற்போது முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் தங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கான நிவாரணம், மீள்குடியேற்றம், நிரந்தரத் தீர்வுகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், மக்களிடையே அச்சம் மற்றும் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் ”தமிழ் மொழியில், உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வெளியிடப்பட வேண்டும்“ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக ஆளணி நியமனம் தேவை
தோட்டப்பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் மிக அதிகமான சனத்தொகையை கொண்டுள்ள நிலையில், ஒரே கிராம சேவையாளருக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொறுப்பாக இருப்பது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் பேசும் மேலதிக அரச உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமித்து, நிவாரண விண்ணப்பங்கள், சேத மதிப்பீடு மற்றும் சிபாரிசு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணத் தகுதிகளில் நெகிழ்வு அவசியம்
காணி உரிமை இல்லாமை காரணமாக தோட்ட மக்களுக்குப் பயிர் சேதம், கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான இழப்பீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.
இதனால், மலையக மக்களின் தனித்துவமான நிலைமைகளை கருத்தில் கொண்டு விசேட சுற்றுநிருபங்கள் மற்றும் நெகிழ்வான தகுதி நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு – அரச பொறுப்பு
டிட்வா பேரிடரால் தோட்டப் பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள், பாலங்கள், வடிகால்கள், பாதுகாப்புச் சுவர்கள், முன்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சமூக உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவை பெரும்பாலும் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால், மீள்கட்டமைப்பு தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும், இப்பணிகளை நேரடியாக அரச பொறுப்பில் எடுத்துக் கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும்** என கோரப்பட்டுள்ளது.
காணி மற்றும் வீட்டு உரிமைக்கு நிரந்தரத் தீர்வு
மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடு நிர்மாணத்தில் காணி உரிமை இல்லாமை முக்கிய தடையாக இருப்பதாகவும், இதற்கான தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடி தீர்மானங்களைப் பெற அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கேட்டுக்கொண்டுள்ளது











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM