அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை அடக்க முடியாது ; முஜிபுர் ரஹ்மான்

16 Dec, 2025 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொலிஸார் என தெரிவித்துக்கொண்டு எனது வீட்டுக்குவந்து  விசாரணை மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்க்க முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை அடக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம்  முறைப்பாடு கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், காவிந்த ஜயவர்த்தன, காெழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நுகேகொடை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் என தெரிவித்துக்கொண்டு கடந்த மாதம் முதல்வாரத்தில் நான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு வந்த சிலர், என்னைப்பற்றியும் எனது பதிவு தொடர்பாகவும் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.

அதுதொடர்பில் நான் அறிந்துகொண்டபோது, மிரிஹான பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு கேட்டபோது, அதுதொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்டு கேட்க பலதடவைகள் முயற்சித்தபோதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

அதேபோன்று இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பொரிளையில் உள்ள எனது மனைவியின் வீட்டுக்கு சென்று, அங்கும் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்து, என்னைப்பற்றியும் எனது பதிவு பற்றியும் வேறு தகவல்கள் தொடர்பாகவும் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கதைக்கப்பட்டு வருவதால், அதுதொடர்பில் தேடிப்பார்க்க வந்திருக்கலாம் என நினைத்து அதுதொடர்பில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

என்றாலும் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸையில் உள்ள எனது தாய் வீட்டுக்கு,  குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தில் என தெரிவித்துக்கொண்டு இரண்டு பேர் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த எனது சகோதரி எதற்காக வந்துள்ளீர்கள் என கேட்டடுள்ளார். அதற்கு அவர்கள், சிம் அட்டை ஒன்று காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே வந்ததாக தெரிவித்துள்ளனர். என்னுடன் தொலைபேசியில் உரையாட வசதி செய்துதரவா என கேட்டபோது, தேவையில்லை என தெரிவித்துவிட்டு அவர்கள் சென்றுள்ளனர்.

சிம் அட்டை காணாமல் போயுள்ளதாக நான் ஒருபோதும் பொலிஸில் முறைப்பாடு செய்ததில்லை. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில், என்னுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது. இவ்வாறு இருக்கையில், நான் இல்லாத சந்தர்ப்பத்தில், எனது வீட்டுக்கும் எனது உறவினர்களின் வீட்டுக்கும் சென்று, இவ்வாறு செயற்பட்டிருப்பது, அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட அடக்குமுறை செயற்பாடா என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, விமர்சனம் செய்துவருவதை மெளனிக்கச் செய்வதற்கு பயமுறுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கையா என்ற பிரச்சினை இருக்கிறது.

அதனாலே பொலிஸ்மா அதிபரை சந்தித்து, இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு எனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு தெரிவித்து முறைப்பாடு ஒன்றை கையளித்தேன். ஏனெனில் வந்தவர்கள் அனைவரும் பொலிஸார் என்றே தெரிவித்திருக்கின்றனர்.

அதனால் இதுதொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு, எனக்கு அறிக்கை ஒன்றை வழங்கும் என நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக நாட்டில் தற்போது குண்டர்களுக்கிடை இடம்பெற்றுவரும் துப்பாக்கி சூட்டு நடவடிக்கையால், அப்பாவிகளும் மரணத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனது வீட்டுக்கு சென்ற பொலிஸார் தொடர்பில் குற்றப்புலனாய்வுக்கு  பொறுப்பான சானி அபேசேகரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அதுதொடர்பில் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுமாக இருந்தால், அது வேறு யாருடைய தேவைக்காக மேற்கொள்ளப்படுகின்ற விடயம் என்பது உறுதியாகி இருக்கிறது. சிலவேளை, அது பெலவத்தையில் இருந்து மேற்கொள்ளப்பட்டதா என்றும் தோன்றுகிறது.

ஏனெில் கல்வி அமைச்சுக்குள்ளும் தற்போது பிரதமர் தொடர்பில் தேடிப்பார்க்க பெலவத்தையில் இருந்து சிலர்  இணைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே இதுதொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொண்டு, தகவல்களை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13