(நெவில் அன்தனி)
துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார்.
எவ்வாறாயினும்,,இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது.
வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
இன்றைய போட்டியில் சூரியவன்ஷியை விட ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் தலா 69 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 38 ஓட்டங்களையும் அபிக்யான் குண்டு 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனிடையே வைபவப் சூரியவன்ஷி, ஆரோன் ஜோர்ஜ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 212 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர்.
அத்துடன் விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் த்ரிவேதி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் யுக் ஷர்மா 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதிஷ் சூரி 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஐக்கிய அரபு இராச்சியம் 14ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கியது.
ஆனால், ப்ரித்வி மது, உதிஷ் சூரி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை கௌரவமான நிலையில் இட்டனர்.
அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய இளையோர் அணி கடுமையாக முயற்சித்தது.
இறுதியில் 9ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட விஹான் மல்ஹோத்ரா ப்ரித்வி மதுவை ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
தொடர்ந்து உதிஷ் சூரி, சாலே ஆமின் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 50ஆவது ஓவர் வரை இந்தியாவை வெற்றிக்காக காக்க வைத்தனர்.
உதிஷ் சூரி 78 ஓட்டங்களுடனும் சாலே ஆமிக் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் தீப்பேஷ் தேவெந்த்ரன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM