(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், ஆகிய இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடி 9.10 என்ற சராசரியுடனும் 3.26 என்ற கட்டுப்பாடான பந்துவீச்சுடனும் விக்னேஸ்வரன் ஆகாஷ் 20 விக்கெட்களைக் கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்தத் தொடரில் இரண்டு அணிகளையும் சேர்ந்த வேறு எவரும் 10 விக்கெட்களை எட்டவில்லை.
இரண்டாவது அதிகூடிய 9 விக்கெட்களை இலங்கையைச் சேர்ந்த செத்மிக்க செனவிரட்ன வீழ்த்தியிருந்தார்.
யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளரான ஆகாஷ், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்திலும் சிறப்பாக பந்துவீசுவார் என நம்பப்படுகிறது.

குகதாஸ் மாதுளன் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளனுக்கு இந்தத் தொடரில் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சாரவும் உப தலைவராக கிங்ஸ்வூட் வீரர் கவிஜ கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற ரமிரு பேரேரா, புலிஷ குணதிலக்க, சேனுஜ வேக்குனகொட, ஜேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் ஆசிய கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
அவர்களுக்கு பதிலாக சமரிந்து நெத்சர, துல்னித் சிகேரா, கித்ம விதானபத்திரன ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களைத் தயார் படுத்தும் களமாக 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அமையவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் நேபாளத்தை துபாய், செவன்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (13) எதிர்த்தாடவுள்ளது.
தொடர்ந்து ஆப்கானிஸ்தானை 15ஆம் திகதியும் பங்களாதேஷை 17ஆம் திகதியும் இலங்கை சந்திக்கும். இந்த இரண்டு போட்டிகளும் துபாய், ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நடைபெறும்.
ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன இடம்பெறுகின்றன.
இந்த இரண்டு குழுக்களிலும் முதல் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். அவற்றில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்
விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல்), கவிஜ கமகே (கண்டி, கிங்ஸ்வூட் - உப தலைவர்), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவம்), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சர (இருவரும் மாத்தறை, புனித சேர்வேஷியஸ்), சாமிக்க ஹீனட்டிகல, துல்னித் சிகேரா (இருவரும் மஹாநாம), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி), சனுஜ நிந்துவர (குருநாகல் புனித ஆனாள்), ரசித் நிம்சார (வத்தளை லைசியம்), தருஷ நவோத்ய (மருதானை ஸாஹிரா), கித்ம விதானபத்திரன (ஆனந்த),











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM