ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர் காயம்

Published By: Digital Desk 3

09 Dec, 2025 | 12:19 PM
image

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டது.

திங்கட்கிழமை இரவு அந்நாட்டு நேரப்படி 11.15 க்கு ஜப்பானின் வடக்கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 10 அடி உயரத்திற்கு இராட்சத சுனாமி அலைகள் எழலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்தது.

அதன்படி, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.  மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ (7 முதல் 27 அங்குலம்) உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின.

நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில், 50 கிலோ மீற்றர் (30 மைல்) ஆழத்தில் பதிவாகியது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர்  காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உடைந்து விழுந்த பொருட்களாலே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹச்சினோஹேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன்,  டோஹோகுவில் கார் குழி ஒன்றுக்குள் விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

"ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோரங்களில், கொக்கைடோ நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (620 மைல்) தொலைவில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை விரைவாக வெறியேறுமாறு பிரதமர் சானே தகைச்சி வலியுறுத்தினார்.

சுமார் 2,700  வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 480 குடியிருப்பாளர்கள் ஹச்சினோஹே விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.

சேத மதிப்பீட்டிற்காக 18 பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.

ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் 200 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு கரையோர பகுதிகளில் சில ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

புகுஷிமா அணு மின் நிலையத்தில் எந்தவொரு அசாதாரண சம்பவங்களும் இடம்பெறவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் மேலும் வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்.எச்.கே செய்திச் சேவை அறிக்கைகளின்படி, குறைந்தது ஒரு வாரமாவது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நில அதிர்வு மிகுந்த நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகளாவிய ரீதியில் அதிகளவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும்.

உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவில் சுமார் 20 சதவீதமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் பதிவாகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில்...

2026-01-13 15:36:39
news-image

பாப்பரசர் லியோவை சந்தித்தார் வெனிசுவெலா எதிர்க்கட்சித்...

2026-01-13 14:43:17
news-image

டெல்லியில் வளி மாசு அதிகரிப்பு ;...

2026-01-13 12:14:31
news-image

ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச...

2026-01-13 11:18:56
news-image

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது...

2026-01-13 11:38:59
news-image

அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்:...

2026-01-13 11:36:24
news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50