மேல் மாகாண கலாசார அமைச்சினூடாக வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான “விஷ்வாபினந்தன” விருதினைப் பெற்ற தமிழ்ப் பெண்மணியாக பரதநாட்டியக் கலைஞர் “கலாசூரி” திவ்யா சுஜேன் விளங்குகிறார்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற இவ்விருது வழங்கல் வைபவத்தில், விருதுகளைப் பெற்ற 100 கலைஞர்களில் இவர் மட்டுமே தமிழர் என்பது சிறப்பம்சம்.
கண்டிய நடனம், நடனம், இசை, சினிமா, புகைப்பட படப்பிடிப்பு உட்பட 12 கலைத்துறைகளில் சிறந்து விளங்கி, அத்துறையினூடாக நாட்டுக்கும் பெரும் பங்களிப்பு ஆற்றிவரும் 100 கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அக்கலைஞர்களுக்கு “விஷ்வாபினந்தன” விருது வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் சிரேஷ்ட கண்டிய நடன, இசை, சினிமா முதலான துறைகளில் கலைச் சேவையாற்றி வரும் 99 சிங்களக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற திவ்யா சுஜேன் பரதநாட்டியத்துறையில் தனித்துவமான இடத்தினைக் கொண்டு விளங்குவதோடு, 20 வருடங்களாக அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியினை நடத்தி, அதனூடாக பல இளம் நடனக் கலைஞர்களை நாட்டுக்கு அளித்து வருகிறார்.
பத்மபூஷண் பேராசிரியர் C.V. சந்திரசேகரின் மாணவியான இவர், இலங்கையில் முன்னணி பரதநாட்டியக் கலைஞராக மட்டுமன்றி, நாட்டியக் குருவாகவும், தமிழ்க் கவிதைகள், பாடல் புனைதல், நெறியாள்கை செய்தல், உருப்படிகள் அமைத்தல், லயம், அபிநயம், நட்டுவாங்கம் என்பவற்றில் வித்துவம் பெற்றவராகவும் திகழ்கிறார்.
இந்தியாவில் தஞ்சை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துடன் கூட்டிணைவு உடன்படிக்கை செய்துகொண்ட நடனப்பள்ளியாக தனது அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியினை இயக்கி வருகிறார்.
இவர் நடத்தும் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி, இணையவழியினூடாக நட்டுவாங்க பட்டையக் கற்கைநெறியை வழங்கும் முதல் நடனப்பள்ளியாக புகழப்படுவதோடு, சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இக்கற்கைநெறியால் பயன்பெற்றுள்ளனர்.
புத்தாக்க நிகழ்வுகள், நாட்டிய நாடகங்கள், கருப்பொருளுடன் கூடிய மார்க்கங்கள் என தொடர்ந்து புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திவ்யாவின் படைப்புக்கள் அனைத்தும் உலகளாவிய ரீதியில் பாராட்டுப் பெற்றதோடு மட்டுமின்றி இலங்கை - இந்திய கலை உறவுப் பாலமாகவும் விளங்கி வருகின்றன.

கலாநிதி ராஜ்குமார் பாரதி, சங்கீத கலாநிதி லால்குடி கிருஷ்ணன் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் நடன இசையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி புதிய நடன உருப்படிகளை வடிவமைக்கும் பெருமையும் இவருக்கு உண்டு.
ராவண ராஜ்ஜியம், விவேகானந்த வழக்கை வரலாறு, சீரடி பாபா சத் சரிதம், ஔவையார், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம் போன்ற நாட்டிய நாடகங்களையும், ஞாலவெளியினிலே - பாரதி மார்க்கம், போற்றிதாய், நிறை ஓதம் நீர் நின்று - ஐம்பெரும் காப்பிய மார்க்கம், மதங்கமொடு தமிழ் முழங்கவே - தமிழ் மரபு மார்க்கம், தொன்மாவிலங்கை மார்க்கம், நாயகி, அறிவாகிய கோயிலிலே, எல்லாம் தானாகி போன்ற கருப்பொருளுடன் கூடிய அரங்கேற்றங்களையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார்.
உலகெங்கும் உள்ள இலங்கை நடன கலைஞர்களை இணைத்து உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தினை உருவாக்கியுள்ளார். இதனூடாக இலங்கையைச் சேர்ந்த மூத்த நடன ஆசிரியர்களின் கலைப் பயணத்தைப் பதிவாக்கும் செயற்றிட்டத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்து, மூன்று தலைமுறைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து செயற்படவும் வழிவகுத்துள்ளார்.
உலக ஐயை மகளிர் குழுமம், திகடசக்கர, திருக்குறள் இளையோர் மன்றம் போன்ற பல அமைப்புகளிலும் இணைந்து சமூகப் பணியாற்றி வருகிறார். 200க்கும் மேற்பட்ட இந்தியக் கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்.
கலாபிமானி, கலைச்சுடர், சிறந்த இளங்கலைஞர் விருது, சிறந்த கலைப்பணி விருது போன்ற இலங்கை அரசின் விருதுகள் உட்பட ஆர்யபட்டா சர்வதேச விருது, அகில உலக பத்மா சுப்ரமணியம் விருது, மயூர நாட்டிய தாரகை, சாதனை பெண்கள் விருது, கலைச்சுடர், முத்தமிழ் செம்மல், கனடா விழித்தெழு பெண்ணே விருது என எண்ணற்ற சர்வதேச விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
பரத கலாவித்தகர், மிருதங்க கலாவித்தகர் என்னும் ஆசிரிய தர பட்டங்களுடன் நடனத்துறையில் முதுநிலை பட்டம் முதல் தரச் சித்தியடைந்து, முனைவர் பட்ட ஆய்வினை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM