பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் – பாதுகாப்பு வீரர்களுக்கு பிரதமர் நன்றி

Published By: Vishnu

04 Dec, 2025 | 05:28 AM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் உயிரை பாதுகாக்க தமது உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு தரப்பினரின் வீரத்தை ஒருபோதும் மறக்க முடியாது. பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும்  தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து சாத்தியமான ஆதரவுகளையும் வழங்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவதாக, இந்த பேரழிவால் உயிர் இழந்த, இடம்பெயர்ந்த, சொத்து சேதத்தை சந்தித்த மற்றும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பேரிடரால் வீடுகள், தொழில்கள் மற்றும் சொத்துக்களை இழந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு அரசாங்கமாக நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்,கடந்த சில நாட்களாக, குறிப்பாக, நமது நாட்டின் அரச  அதிகாரிகள் மற்றும் பொது பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட நமது சொந்த சகோதர மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.அரச   அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பணியை மேற்கொண்ட அனைத்து பொது பிரதிநிதிகளுக்கும் (அரசாங்கக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள்) எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த சவாலை எதிர்கொள்வதில், நமது மக்களிடையே ஒற்றுமை, தைரியம், கருணை, இரக்கம் மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றைக் கண்டோம். இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல இது எங்களுக்கு இன்னும் பலத்தை அளிக்கிறது.

இந்த பேரிடரில் ஆபத்தில் இருந்த நமது சகோதர சகோதரிகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அயராது உழைத்த இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார்  மற்றும் பிற அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து அவசரகால நிவாரணக் குழுக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களுக்கு கௌரவமளிக்கிறேன்.

மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த நிகழ்வுகளும் உள்ளன. இது எளிதில் காண முடியாத ஒரு வீரம். அவர்கள் அனைவரையும் நான் மீண்டும் மீண்டும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். மீட்பு நடவடிக்கையின் போது வென்னப்புவ, லுனுவில, ஜின் ஓயாவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியவிற்கும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் போது காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற அவர்கள் வெளிப்படுத்திய  வீரத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

மேலும்,ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களும் இந்த கடினமான நேரத்தில் நேரடியாக களத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சேவையும் குறிப்பாக பாராட்டத்தக்கது.

இந்த நேரத்தில் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வக் குழுக்கள்,இளைஞர் குழுக்கள்,மகளிர் குழுக்கள், பல்வேறு இளைஞர் குழுக்கள் மற்றும் அமைப்புகள், மத நிறுவனங்கள் ஆகியவற்றையும் நான் குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரும் எந்த லாபத்தையும் கருத்தில் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்களிக்கின்றனர். அவர்கள் பல நாட்களாக இந்த நடவடிக்கைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர்.

ஒரு நாடாக, ஒரு இலங்கை தேசமாக, நமக்கு இருக்கும் மிகவும் மதிப்புமிக்க பலம் இந்த மனிதநேயத்தை அறிந்த, மற்றவர்களிடம் இரக்கமுள்ள நமது மனித இதயங்கள்தான். இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

மேலும், இந்த சவாலான நேரத்தில் நம்முடன் இணைந்து,நமக்கு பலமாக இருந்த நமது நட்பு வெளிநாடுகளை நான் குறிப்பாக நினைவுகூர விரும்புகிறேன். பல்வேறு வழிகளில் நமக்கு உதவிய, நமது தேவைகளைக் கவனித்த, தேவையான நிவாரண சேவைகளை வழங்க இராஜதந்திர மட்டத்தில் தலையிட்ட அனைத்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு தூதரகத் தலைவர்கள் மற்றும் அந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இலங்கையர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவ முன்வந்துள்ள பல சர்வதேச அமைப்புகளின் இருப்பும் இந்த நேரத்தில் எங்களுக்கு பலத்தை அளிக்கிறது. அவர்களை நான் குறிப்பாக நினைவில் கொள்கிறேன்.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் பல்வேறு அமைப்புகள். இந்த நேரத்தில் தங்கள் தாய்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு,இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும்,பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும்  முன்னேற உதவவும் அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். உலகில் எங்கிருந்தாலும், இலங்கை சகோதர மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு மத்தியில் அவர்களின் தலையீடு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29