(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வரலாறு ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றதே தவிர மாணவர்கள் மத்தியில் சிங்கள வரலாறு, தமிழ் வரலாறு என்று வேறுபடுத்தவில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பின் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் மன்னர்களின் வரலாறுகள் பாடப்பரப்பில் உள்ளடக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் எழுப்பிய நிலையியற் கட்டளையின் கீழ்,
இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா?, கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?,தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா?,சங்கிலியன், பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ்,வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்,
10 ஆம் தரத்தில் 7 ஆவது பாடத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியர்கள் தொடர்பில் பந்தி பிரிக்கப்பட்டும் ,அதேபோல் 10 ஆம் தரத்தில் 10 ஆவது பாடத்தில் யாழ்ப்பாண இராஜதானி தொடர்பான பந்தி வேறுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதில் சங்கிலி மன்னன் இராஜ்ஜியம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வி சீர்திருத்தத்தில் தரம் 6 க்கான பாடப்பரப்பில் சங்கிலி மன்னன் தொடர்பான வரலாறு மற்றும் மன்னனின் அரச மாளிகை தொடர்பான படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாறு ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றதே தவிர மாணவர்கள் மத்தியில் சிங்கள வரலாறு, தமிழ் வரலாறு என்று வேறுபடுத்தி கற்பிக்கப்படவில்லை.
இலங்கையின் வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் காட்சிப்படுத்துவதற்காக தேசிய தொல்லியல் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது அதற்கமைய தமிழில் வரலாறு மேம்பாட்டுக்கான விசேட நடவடிக்கைகளை இத்திணைக்களம் மேற்கொண்டுள்ளது கொழும்பு தேசிய நூதன சாலையில் தமிழ் வரலாறுதொடர்பான் காட்சிப்படுத்தலும் உள்ளன. வட இந்திய மன்னர்களான இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், உட்பட தமிழ் அரசர்களின் வரலாறுகளையும் இவை பிரதிபலிக்கின்றன .
அதேபோல் இந்து மதத்திற்குரிய சிவன், பார்வதி, நடராஜர், சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட பெரும்பாலான மூர்த்திகளின் உருவச் சிலைகள் கொழும்பு நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் யாழ்ப்பாண இராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தேசிய நூதன சாலையில் பாதுகாக்கப்படுகின்றன.
சங்க காலம், மற்றும் சோழ, பாண்டிய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தொடர்பில் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, செனரத் விக்கிரமசிங்க ஆகியோரினால் படைக்கப்பட்ட நூலும் தேசிய நூதனசாலையில் பாதுகாக்கப்படுகின்றது.
அதேபோல் சித்திரம்,கலை, கலாசாரம் தொடர்பில் புதிய கல்வி மறுசீரமைப்பில் விசேட முன்னுரிமை வழங்கப்படும். விடய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பல்லின சமூகம், மதம் கலை,கலாசாரங்களை உள்ளடக்கிய வகையில் சர்வதேச தரப்படுத்தலுக்கு அமையவே அவை தயாரிக்கப்படுகின்றன. இதற்கமைய சித்திரக்கலை கல்வி மறு சீரமைப்பின்போது குறிப்பிடத்தக்க விடயங்கள் குறித்து விசேட கரிசனை கொள்ளப்படும்.
குறிப்பாக கலைக்கல்வியில் பாரம்பரிய மற்றும் நவீன கலை, கலாசாரங்கள் குறித்து விசேட முன்னுரிமை வழங்கப்படும். பாரம்பரிய கலை நிர்மாணிப்புக்களினால் இலங்கை,இந்தியா மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறுபட்ட காலகட்டத்திலும் படைக்கப்பட்ட கலைப்படைப்புக்கள் மற்றும் மரபுரிமைகள் தொடர்பான இலட்சினைகள் புதிய கல்வி மறு சீரமைப்பில் உள்ளடக்கப்படும்.
உதாரணமாக இந்தியாவில் இந்து நாகரீகத்திலிருந்து குப்த,பல்லவ ,சோழ, மொகாலய மற்றும் எகிப்து உள்ளிட்ட காலகட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட கலை, கலாசாரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை புதிய கல்வி மறு சீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தென்னிந்தியாவின் கலைப்படைப்புகளுடன் ஒத்த பொலநறுவை சிவன் கோவில் இந்துக்கடவுள் சிலை நிர்மாண வடிவமைப்பு அதனை ஒத்த பௌத்த மத கலை நிர்மாணிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மாறுபட்ட கலை அம்ஸங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
பிரதான கலை படைப்புக்களை ஆய்வு செய்கையில் கலை சிற்பிகளாக கருதப்படும் தாவடி முத்தையா துரைசாமி ,பெரியநம்பி சுப்பிரமணியம்,கே. கனகசபாபதி,ம.சிவஞானசுந்தரம் (ரமணி ) உள்ளிட்ட கலைஞர்களின் நிர்வாண படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ்,சிங்களம், முஸ்லிம், கிறிஸ்தவம் என்று வேறுபடுத்தாமல் இலங்கை கலை நிர்மாணம் மற்றும் கலைஞர்கள் என்று விரிவுபடுத்துவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் நோக்கம்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் தயாரிக்கப்படும் சித்திரக்கலை பாடப்பரப்பில் (பாடப்பரப்பு, விடயதானங்கள், ஆசிரிய வழிகாட்டல்கள்)மீள் பரிசீலனை செய்ய மீளாய்வு சபைக்காக சித்திர பாடத்திற்குரிய நிபுணர்களை உள்ளடக்கம் செய்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM