(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
முழு நாடும் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் அடுத்த வருடத்துக்காக தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் எதுவும் செய்ய முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அனர்த்தங்களில் உயிரிழந்த, காணாமல் போயுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விவாதமொன்றை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியாவிட்டாலும் குறைந்தது இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இது தேசிய கடமையாகும். மனிதாபிமான அடிப்படையில் இதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட சகலருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச உத்தியோகத்தர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் எமது நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றிக்கொள்ளவுள்ள இருக்கிறது.. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் இந்த வரவு செலவுத்திட்டம் பிரயோசனமாக அமையுமா? இது பொருத்தமான வரவு செலவுத்திட்டமா? இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? நாட்டில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கையில் நாங்கள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்த ஏற்பாடுகளும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை.
அதனால் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடியதாகவும், அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்பும் வகையிலும் இன்னும் சில தினங்களை எடுத்துக்கொண்டு சிறிய காலத்திற்குள் புதிய வரவு செலவுத்திட்டமொன்றை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
ஆனால் வெள்ளிக்கிழமை செய்யப்போகும் வேடிக்கையான விடயம் என்ன? பெரும் சூறாவளி ஏற்பட்டு பேரனர்த்தங்கள் நடந்துள்ள நேரத்தில் அது தொடர்பில் ஒரு சதத்திற்கேனும் கண்டுகொள்ளாமல், நீங்கள் அன்று செய்த வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற எண்ணுகின்றீர்கள்.
இந்நிலையில் நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். அதாவது மேலும் சில தினங்களை எடுத்துக்கொண்டு அடுத்த வாரத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, இந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேநேரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச உதவியாளர்கள் மாநாடொன்றை கூட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் இதனை செய்ய வேண்டும். அரசாங்கத்தினால் இதனை செய்ய முடியாவிட்டால் அதற்கான அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள். அரசாங்கத்துடன் இணைந்து அந்த மாநாட்டை கூட்டி நாட்டுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வோம்.
அத்துடன் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி. புதிய உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையில், மக்களுக்கு சுமையைகளை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் எமக்கு பயணிக்க முடியுமா? இப்போதே சர்வதேச நாணய நிதியத்துடன் கதையுங்கள். உங்களுக்கு முடியாவிட்டால் கூறுங்கள்.
நாங்களும் வருகிறோம. நாங்கள் எல்லோரும் இணைந்து கதைப்போம். நாட்டில் பேரவலம் நடந்துள்ளது. மக்களின் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் வேலை செய்ய முடியுமா? இது வேடிக்கையாக இல்லையா? அதனால் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் கதைத்து இந்த நிபந்தனைகளை நீக்கிக்கொள்ளுங்கள்.
அதேபோன்று நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கடிதம் அனுப்புவோம். இதற்காக எதிர்க்கட்சியான நாங்களும் உதவுகின்றோம்.முடிந்தால் சென்று சந்திப்போம். சர்வகட்சியாக கோரிக்கை விடுத்து இலங்கை மீதான வரி விதிப்புகளை நீக்கிக்கொள்ளுமாறு கோருவோம். அதன்மூலம் கிடைக்கும் சிறியளவான பலத்தைக்கொண்டு எமது தொழில்துறையை முன்னேற்றலாம்.
எனவே அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு. புதிய திட்டங்களுடன், மேலதிக நிதியை ஒதுக்கி புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM