இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுவது என்பது அடிப்படையற்றது. கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடைக்கால நிர்வாக சபையே காணப்பட்டது. நான்வந்த பின்னர் தான் தேர்தல் நடத்தி ஒருவரை தெரிவு செய்தேன். அந்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்க போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இனி மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு எம்மால் செல்ல முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு பதவிகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து அறிக்கை கோரியிருக்கின்றேன். அதுமட்டுமன்றி கிரிக்கெட் வீரர்களுக்கான வசதிகள் மற்றும் தெரிவு முறைகள் தொடர்பிலும் அறிக்கை கோரியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் கிரிக்கெட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நான் என்ன செய்ய முடியும்? எனது தலையீட்டுக்கு ஒரு வரையறை இருக்கிறது. அதனைத் தாண்டி நான் இவற்றில் தலையிட மாட்டேன். எவ்வாறெனினும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடரின் பின்னர் எமது கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேச்சு நடத்த எண்ணியிருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டுக்கு என்னதான் நடந்திருக்கிறது?
பதில்: இதுதொடர்பில் நான் ஆராய்ந்து பார்க்கவுள்ளேன். குறிப்பாக வீரர்களுக்கான வசதிகள் மற்றும் தெரிவுகள் தொடர்பில் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருக்கின்றேன். துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு இதனைவிட ஒரு சிறந்த குழாமை நாம் தெரிவு செய்ய முடியாது. எனினும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயவேண்டும். எனினும் நாம் பதற்றமடையவேண்டியதில்லை. குறிப்பாக மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனைகளை வழங்குவத்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: தோல்விகள், வெற்றிகள் வரலாம் போகலாம். ஆனால் தற்போது நாம் பாரியதொரு பின்னடைவுக்கு சென்றுவிட்டோமே?
பதில்: இந்த இடத்தில் ஏனைய விடயங்களையும் நாம் பார்க்கவேண்டும். இந்திய அணி மிகவும் திறமையான வீரர்களைக் கொண்டது. அவுஸ்திரேலியாவின் காலநிலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் காலநிலை இந்திய வீரர்களுக்கு பாரிய சாதகநிலையைக் கொண்டதாக உள்ளது. எனவே அவர்கள் தமது திறமையை நன்றாக வெளிக்காட்டியுள்ளனர்.
கேள்வி: கிரிக்கெட் வீரர்களுக்கும் தியானம் செய்யும் படி கூறினால் எப்படியிருக்கும்?
பதில்: (சிரிக்கிறார்)
கேள்வி: இந்தப் பின்னடைவுக்கு நிர்வாகத்தை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுகின்றதே?
பதில்: நிர்வாகத்தை மாற்றுவது என்பது அடிப்படையற்றது. கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடைக்கால நிர்வாக சபையே காணப்பட்டது. நான்வந்த பின்னர் தான் தேர்தல் நடத்தி ஒருவரை தெரிவு செய்தேன். அந்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்க போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இனி மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு எம்மால் செல்ல முடியாது.
கேள்வி: இங்கு பிரச்சினை அதுவல்ல. கிரிக்கெட் சபையில் வழங்கப்படும் பதவிகள் நிரந்தரமற்றவையாக இருக்கின்றன. அனைத்து வகையான பயிற்சியாளர்களும் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். முகாமையாளர்கள் மாற்றப்படுகின்றனர். அசங்க குருசிங்கவின் நியமனம் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. இவ்வாறு எதுவும் நிரந்தரமானதாக இல்லை. இந்தப் போக்கு எமது கிரிக்கெட்டை ஒரு ஸ்திரமற்றநிலைக்கு கொண்டுசெல்லும் அல்லவா?
பதில்: இவ்வாறு அடிக்கடி பதவிகளில் மாற்றம் செய்வது தொடர்பில் நான் அறிக்கை கோரியிருக்கின்றேன். குறிப்பாக அண்மையில் நான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுதொடர்பில் ஆராயப்பட்டது.
நான் அமைச்சராக இருக்கின்றேன். இந்த விடயங்களில் தலையிடுவதற்கு எனக்கும் ஒரு வரையறை இருக்கின்றது. ஒரு அரசியல்வாதியாக அனைத்து விடயங்களிலும் மூக்கை நுழைப்பதற்கு நான் தயாரில்லை. நாங்கள் விரைவாக முன்னேற்றத்தை காணவேண்டியுள்ளது. நான் என்ன செய்ய முடியும்.
ஏதாவது யோசனைகள் இருந்தால் கூறுங்கள். வீரர்களில் மாற்றங்கள் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் கூறுங்கள். நான் அதனை செவிமடுக்க தயாராக இருக்கின்றேன். இந்த அணியை பலப்படுத்தி முன்கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் முன்னாள் அணித்தலைவர்கள் அனைவரும் உறுதியாக இருக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM