இரண்டு அடுக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமை நிராகரிப்பு; சர்வதேச ஒருநாள் சுப்பர் லீக் புதுப்பிக்கப்படலாம்

12 Nov, 2025 | 04:31 PM
image

(நெவில் அன்தனி)

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இரண்டு அடுக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறையை அறிமுகப்படுத்த முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளை இரண்டு அடுக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றச் செய்யும் திட்டங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் நான்காவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்வரை 9 அணிகளே பங்குபற்றி வருகின்றன.

ஆனால், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துபெற்ற 12 நாடுகளும் 2027இல் ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரே அடுக்கில் பங்குபற்ற வாய்ப்புள்ளது.

இதற்கு அமைய நடப்பு சம்பயின் தென்  ஆபிரிக்கா, உப சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஸிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் 2027 - 2029 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகள் குறித்த அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நியூஸிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொஜர் ட்வோஸ் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் துபாயில் நடத்திய காலாண்டு கூட்டங்களின்போது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவுக்கும் பரிந்துரைகளை வழங்கினர்.

ஐசிசியின் வருடாந்த மாநாடு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றபோது இந்தக் குழு நியமிக்கபட்டது. அப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரண்டு அடுக்கு தொடர்பாக ஆராயப்பட்டு வந்த இந்த விடயம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் இரண்டு அடுக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்களுக்கு நிதி பங்கீடு செய்வது சாத்தியப்படாது என்ற காரணத்தினால் இந்த யோசனை கைவிடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இரண்டு அடுக்கு முறைமையை கிரிக்கெட்டின் முப்பெரும் சக்திகளான  இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நிதி பங்கீட்டு முறைமை மூலம் ஆதரிக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அது தொடர்பான கலந்துரையாடல்கள் நீடிக்கவில்லை.

அதேவேளை, பலசாலிகளுடன் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால் இரண்டாம் அடுக்குக்கு தள்ளப்படவிருந்த இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன இந்த யோசனைக்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந் நிலையில் ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகயவற்றையும் இணைத்து  12 அணிகளைக் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான யோசனையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயற்குழு முன்வைத்துள்ளது.

ஐந்தாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் சுழற்சி முறை 2027இல்  ஆரம்பமாகிறது.

இந்த யோசனை நிறைவெற்றப்படும் பட்சத்தில் டெஸ்ட் விளையாடும் சகல அணிகளும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுவது உறுதிசெய்யப்படும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுப்பர் லீக்

மட்டுப்படுத்தப்பட்ட ஒவர் கிரிக்கெட்டிலும் புதியவற்றை புகுத்த ஆலோசிக்கப்படுகிறது.

குறிப்பாக 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நீக்கப்பட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுப்பர் லீக் முறையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

2020 ஜூலை மாதத்தில் 13 அணிகளைக் கொண்ட லீக் முறை ஆரம்பமானது. ஆனால், அளவுக்கு அதிகமான போட்டிகள் காரணமாக அது இடையில் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும் சுப்பர் லீக் முறையை 2028ஆம் ஆண்டிலேயே மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அதில் எத்தனை அணிகளை இணைப்பது என்பது குறித்த யோசனை இன்னும் முன்வைக்கப்படவில்லை.

2027 உலகக் கிண்ணப் போட்டியில் 14 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இது இவ்வாறிருக்க, ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 20ஆக வைத்திருப்பதென்ற நிலைப்பாட்டில் செயற்குழு இருக்கிறது.

எனினும் சில நிருவாகிகள் அந்த எண்ணிக்கையை 24 அணிகளாக அதிகரிக்கவேண்டும் என கூறிவருகின்றனர். இந்த எண்ணிக்கை 32 அணிகள் வரை அதிகரிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

இதேவேளை, ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை புதுப்பிக்குமாறு இணை அங்கத்துவ நாடுகள் யோசனை முன்வைத்துள்ளன. அத்துடன் ஏனைய பிரதான விளையாட்டுப் போட்டிகளில் போன்று ஆடவர் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு முறையான தகுதிகாண் சுற்றை நடத்துவது பொருத்தமானது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டங்ககளில் பணிப்பாளர்கள் சபை விவாதிக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வுபெற்றார் WWE ஜாம்பவான் ஜோன்சினா!

2025-12-14 13:48:40
news-image

மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரகளை...

2025-12-13 16:30:55
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின்...

2025-12-13 15:19:36
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய...

2025-12-12 19:13:18
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2025-12-12 18:02:03
news-image

19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை...

2025-12-12 15:12:17
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட்...

2025-12-12 14:05:24
news-image

குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்...

2025-12-12 12:42:07
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) புதிய...

2025-12-11 18:39:16
news-image

19 வயதுக்குட்பட்டோர் இலங்கை கிரிக்கெட் அணி...

2025-12-10 12:47:26
news-image

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ரி20 இல்...

2025-12-09 23:12:13
news-image

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச்...

2025-12-09 18:18:08