வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ''நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்''

Published By: Priyatharshan

10 Aug, 2017 | 06:23 AM
image

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்' என  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளான்.

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ள விக்டர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களிடமும், ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழங்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் மூவரைக் கைதுசெய்ய தொடர்ச்சியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை நடாத்துவதாகவும் அவர்களை விரைவில் கைதுசெய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ஆவா குழுவின் உறுப்பினரும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியவர் என அடையாளம் காணப்பட்டவருமான யாழ். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவரை மட்டக்குளியில் வைத்து பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் இரு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை  கோட்டையில் உள்ள பயங்கரவாத  புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழு விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்போதே ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறியப்படும் யாழ். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சத்தியவேல் நாதன் நிஷாந்தன் என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே நேற்று முன்தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொண்ட பயங்கரவாத புலனயவுப்பிரிவினர் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து அவரையும், அவருடன் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத் எனப்படும்  ராஜ்குமார் ஜெயகுமாரையும், மனோஜ் எனப்படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.

அத்துடன் யாழில் வைத்து, இணுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த  அர்ஜுனன் பிரசன்ன ஆகியோரையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி அறுவரிடமும் பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில், தற்போது இயங்கும் ஆவா குழுவினை விக்டரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியமை, 2015 ஆம் ஆண்டு கோப்பாயில் வீடொன்றினை சேதப்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. 

அத்துடன்  2016 ஆம் ஆண்டு பொலிஸ் உளவுப் பிரிவினர் மீது வாள்வெட்டு தககுதல் நடாத்திய சம்பவம் தொடர்பிலும் விக்டர் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு சுன்னாகம் பகுதியில் கடை ஒன்றினையும் இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார் இந்த ஆண்டு அரசடி பகுதியில் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனை வாளால் வெட்டியமை தொடர்பிலும் இந்த குழுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவா குழுவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைதுசெய்த நிலையில் அதன் தலைவனாக செயற்பட்ட தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப்போன்ற பாதாள உலகக் குழுக்களை வழி நடத்தி யாழ். மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் ஞானசேகரம் தேவசுதன் எனப்படும் தேவா, நல்லலிங்கம் பிரசன்னா எனப்படும் சன்ன மற்றும் டேனியல் குனசீலன் எனப்படும் பிரகாஷ் ஆகியோர் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் சென்றிருந்தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் வைத்து கைதும் செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே வெற்றிடமான ஆவா குழு தலைமை பொறுப்பை விக்டர் ஏற்று வழி நடாத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னதாக யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில்  முறைப்­பாடு  ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் சத்தியானந்தன வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மதூ எனப்படும் சிவராஷா மதுஷன் மற்றும் 23 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ், 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து  என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­ஸ்,  கொக்குவில் மேற்கை சேர்ந்த 18 வயதுடைய  புஷ்பராசா டக்ஷன் ஆகியோரே இதுவரைக் கைது செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் ஐந்தாவது சந்தேக நபர் யாழ். பிராந்திய பயங்கரவாத புலனய்வுப் பிரிவினராலும் ஏனையோர் சிறப்பு பொலிஸ் குழுவினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையில் தற்போது கைதாகியுள்ள 6 பேருடன் சேர்த்து மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ ஆகியோரின் கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸின் ஆலோசனைக்கு அமைய யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான சிறப்புக் குழு தடுப்பில் உள்ள அறுவரிடமும்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19