சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில்

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 05:34 PM
image

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம்தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2009,2010,2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். 

அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! 

மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. 

சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 

2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. 

சுகாதார அமைச்சர் அவர்களே! 

சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன.  வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. 

எனது முதலாவது கேள்வி! 

இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கைநெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். 

மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன? 

படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? 

படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? 

அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார். 

இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், 

கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது. 

அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். 

இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம். 

மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். 

இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 

எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம். 

அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசுக்கு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

2026-03-06 17:31:52
news-image

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில்...

2026-03-06 20:18:05
news-image

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான்...

2026-03-06 19:59:13
news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34