(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தலா 9 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி லோரா வுல்வார்ட், சுனே லூயி, மாரிஸ்ஆன் கெப், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா கணிசமான ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்தது
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் அபிரிக்கா 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களைக் குவித்தது.

இரண்டாவது ஓவரில் தஸ்மின் ப்றிட்ஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து 2 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 3.09 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
மழை ஓய்ந்த பின்னர் பிற்பகல் 5.25 மணிக்கு ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 40 ஓவர்கள் என போட்டி தீர்ப்பாளரால் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை அடுத்து லோரா வுல்வார்ட், சுனே லூயி ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 92 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த சுனே லூயி 8 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தெடாந்து ஆன்எரி டேர்க்சன் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் லோரா வுல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 64 ஓட்டங்களை வேகமாக பகிர்ந்தனர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைக் குவித்தார். அவரைத் தொடர்ந்து கராபோ மெசோ ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
எனினும் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இவரும் 6ஆவது விக்கெட்டில் 6 ஓவர்களில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்தனர்.
க்ளோ ட்ரையொன் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் நாடின் டி க்ளார்க் 16 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாடியா இக்பால் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
40 ஓவர்களில் 306 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட டக்வேர்த் லூயிஸ் முறைமையின் கீழ் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.
10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருந்தபோது இரவு 9.23 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
38 நிமிடங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 25 ஓவர்களில் 262 ஓட்டங்கள் என அறிவிக்கப்பட்டது.
மறுபக்கத்தில் குறைந்த பட்சம் 15 ஓவர்களைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வாஞ்சையுடன் விளையாடிய தென் ஆபிரிக்கா ஓவர்களை விரைவாக வீசி முடிப்பதில் குறியாக இருந்தது.
ஆனால், ஆட்டம் மீண்டும் ஆரம்பித்து தொடர்ந்தபோது தென் ஆபிரிக்கா 2 ஓவர்களை வீசிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மூன்றாவது தடவையாக இரவு 10.26 மணிக்கு தடைப்பட்டது.
ஆனால் சற்று நேரத்தில் மழை நின்றதால் இரவு 10.35 மணிக்கு போட்டி மீண்டும் தொடர்ந்ததுடன் மூன்றாவது முறையாக வெற்றி இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது.
20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்ககளைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சித்ரா நவாஸ் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் நட்டாலியா பெர்வெய்ஸ் 20 ஓட்டங்களையும் சிட் ரா ஆமின் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: மாரிஸ்ஆன் கெப்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM