புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா வின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் நேற்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து எதிரிகள் தரப்பு சாட்சி விளக்கத்திற்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்று ஏகமனதாக உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்று வியாழக்கிழமை தொடர் வழக்கு விசாரணையின் பதினொராவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தது. இதன்போது நேற்றைய தின சாட்சிப்பதிவுகள் முடிவடைந்த பின்னர் வழக்குத் தொடுநர் தரப்பில் இவ்வழக்கினை நெறிப்படுத்தும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் மன்றில் விண்ணப்பம் ஒன்றைச் செய்திருந்தார்.
இதன்படி இதுவரை இவ்வழக்கிற்காக வழக்குத் தொடுநர்தரப்பாகிய தம்மால் அழைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட சாட்சியங்களுடனும் இவ்வழக்கிற்காக சமர்ப்பிக்கப்பட்ட சான்றுப்பொருட்களான வ1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14(அ,ஆ,இ,ஈ,உ,),15,16,17,18,19,(அ,ஆ – 1,இ),20,21,22 (அ – 1,ஆ,இ,ஈ) 23,24,25,26,27 ஆகிய சான்றுப்பொருட்களுடனும் இவ்வழக்கினை முடிவிற்கு கொண்டுவருவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்றானது இதுவரை முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் சான்றுப்பொருட்கள் ஊடான முகத்தோற்றமளவில் எதிரிகளுக்கு எதிராக எண்பிக்கப்பட்டுள்ளமையால் எதிரி தரப்பு விளக்கத்திற்கு மூன்று நீதிபதிகளும் ஏகமனதாக உத்தரவிடுவதாக மன்று அறிவித்தது.
அதன் பின்னர் எதிரிகளுக்கு அவர்கள் தரப்பு விளக்கமளிப்பது தொடர்பாக விளங்கப்படுத்தப்பட்டது. அதாவது, எதிரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சாட்சிக்கூண்டில் நின்று சத்தியப்பிரமாணம் அல்லது உறுதி செய்து சாட்சியமளிக்க உரிமை உண்டு. அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து சாட்சிக்கூண்டில் நின்று சாட்சியம் அளித்தால் அச்சாட்சியம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு பதிவு செய்யப்படும்.
அதேபோன்று எதிரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக எதிரிக்கூண்டில் நின்று கூண்டு வாக்குமூலம் வழங்குவதாயின் அதற்கு சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்யத் தேவையில்லை என்பதுடன் குறுக்கு விசாரணையும் செய்யப்பட மாட்டாது. இச் சாட்சியமும் சாட்சியமாக பதிவு செய்யப்படும். அல்லது எதிரிகள் மௌனமாக இருக்கமுடியும். அவ்வாறு இல்லாதுவிடின் எதிரிகள் தங்கள் சார்பில் சாட்சியங்களை அழைப்பதற்கும் உரிமை உண்டு என எதிரிகள் தரப்பு விளக்கம் தொடர்பாக மன்று விளங்கப்படுத்தியது.
இதன்பின்னர் எதிரிகள் தமது நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதற்காக மன்றினால் பத்து நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இக் கால அவகாசத்தின் பின்னர் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 1 இன் கீழ் எதிரிகள் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் தங்கள் சார்பில் சாட்சியங்களை அழைத்து நெறிப்படுத்தவுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைக்கு கால அவகாசம் வழங்குமாறும் மன்றை கோரினார்கள்.
இந்த எதிரிகள் தரப்பு கோரிக்கையை ஏற்ற மன்றானது எதிரிகள் தரப்பு விளக்கத்திற்காக இம் மாதம் 28 ஆம் 29 ஆம் 30 ஆம் ( 30 ஆம் திகதி மாத்திரம் பிற்பகல் 2 மணி வரை) செப்ரெம்பர் மாதம் 4ஆம் 11 ஆம் 12 ஆம் 13 ஆம் 14 ஆம் 15 ஆம் ஆகிய திகதிகளை தவணையிட்டு உத்தரவிட்டிருந்தது.
மேலும் எதிரி தரப்பு சாட்சிப் பட்டியலாக இணைக்கப்படவுள்ளமை தொடர்பான விபரங்களை 11.08.2017 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு அவை இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் வழக்கில் திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பின் அவை 28.08.2017 அன்று எதிரி தரப்பு விளக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டது.
அத்துடன் அடுத்த வழங்குத்தவணையான 28.08.2017 அன்று வரை எதிரிகள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் ர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM