காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல்போனோருக்கு பதிலளிப்பதற்கான கடப்பாட்டை அரசாங்கம் புறக்கணித்து செயற்படமுடியாது என்று காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகள், வேதனைக்குரியவையாகும். அந்த மக்களின் துயரங்களுக்கு விடிவுகாணவேண்டியது அவசியம். மேலும் காலத்தை கடத்திக்கொண்டிருக்காமல் ஒரு பொறிமுறையை அவசரமாக முன்னெடுக்கவேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மெக்ஸ்வல் பரணமகம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்:-
நாம் எமது ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை நடத்தியபோது ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் வந்தன. அந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக எமது ஆணைக்குழுவானது ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. அந்த விசாரணைக்குழு பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணைகளை நடத்தியது.
எனினும் எமக்கு கால அவகாசம் போதுமானதாக இல்லாமையினால் இந்த செயற்பாட்டை பூரணப்படுத்த முடியவில்லை. எமது பரிந்துரைகளில் நாம் பல்வேறு முக்கியமான விடயங்களை முன்வைத்திருந்தோம். அதில் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டுமென்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டுமென்றும் பரிந்துரை செய்திருந்தோம்.
தற்போது காணாமல்போனோர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. எனினும் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டியது அவசியமாகும். காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கு பதிலளிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
காணாமல் போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே அந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பை புறக்கணித்து செயற்படமுடியாது. காணாமல்போனோருக்கு என்ன நடந்தது அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலக முடியாது. மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஒருவர் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட குடும்பம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும். ஆனால் காணாமல்போனோர் ஒருவர் தொடர்பில் இவ்வாறு எதுவும் செய்ய முடியாது. உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் உறவினர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதுதொடர்பில் அரசாங்கம் கவனத்தில்கொள்ளவேண்டும். காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. மக்களின் வேதனையை உணர்ந்துகொள்ளவேண்டும். காணாமல் போன தமது உறவுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருப்பதானது கொடூரமான நிலையாகும். எனவே ஒரு முறையான விசாரணை பொறிமுறை அவசியமாகும்.
அதனூடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வரவேண்டும். மாறாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடிக்கொண்டு இருப்பது முறையானதல்ல. எமது ஆணைக்குழு முடியுமானவரை நடவடிக்கைகளை மேற்கொண்டது. எமக்கு ஆயிரக்கணக்கான எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால் எமக்கு காலம் போதுமானதாக இருக்கவில்லை. இன்னும் ஒருவருடகாலம் எமக்கு வழங்கப்பட்டிருந்தால் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எம்மால் கண்டுபிடித்திருக்கலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM