லோகா - அத்தியாயம் 1 : சந்திரா - திரைப்பட விமர்சனம்

01 Sep, 2025 | 03:17 PM
image

லோகா - அத்தியாயம் 1 : சந்திரா - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வேஃபரர் ஃபிலிம்ஸ்

நடிகர்கள் : கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன், சந்து சலீம் குமார், அருண் குரியன், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர்.

சிறப்பு தோற்றம் : துல்கர் சல்மான் - டொவினோ தோமஸ்

இயக்கம் : டொமினிக் அருண்

மதிப்பீடு: 2.5/5

சுப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடிகை ஒருவர் நடித்திருக்கிறார் என்ற விளம்பரம்-  'லோகா அத்தியாயம் 1 சந்திரா' எனும் படத்தை படமாளிகையில் காண்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆர்வத்துடன் படமாளிகைக்குள் சென்றவர்களை படக்குழுவினர் திருப்தியை அளித்தனரா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். 

விசேட ஆற்றல் கொண்ட இளம் பெண் சந்திரா ( கல்யாணி பிரியதர்ஷன்) இவர் காரணத்தை விவரிக்காமல் பெங்களூரு எனும் தென்னிந்திய நகரத்திற்கு வருகை தருகிறார். அங்குள்ள வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றும் சன்னி( நஸ்லன் ) - வேணு ( சந்து சலீம் குமார் - நைஜில்( அருண் குரியன்) - ஆகிய மூன்று இளைஞர்களுடனும் அறிமுகம் கிடைக்கிறது. அந்த மூன்று இளைஞர்களுள் ஸன்னி - சந்திரா மீது காதல் கொள்கிறார்.

இந்தத் தருணத்தில் நகரத்தில் காவல்துறையில் பணியாற்றும் நாச்சியப்ப கௌடா ( சாண்டி மாஸ்டர்) என்ற அதிகாரியின் உடந்தையுடன் ஒரு கும்பல் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்கிறது. ஒரு சூழலில் சந்திரா-  காவல்துறை அதிகாரியான நாச்சியப்ப கவுடாவுடன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்போதுதான் சந்திரா இயல்பான மனித ஆற்றலை விட.. விசேடமான சக்திகளை பெற்ற பெண் என தெரிய வருகிறது. சந்திரா யார்? அவரைப் பற்றிய பின்னணி என்ன?  என்பதனை கேரள மாநிலத்தில் தொன்மையாக செவி வழி செய்தியாக சொல்லப்பட்டு வரும் 'யக்ஷி ' என்ற சிறு  தெய்வத்துடன் ஒப்பீடு செய்து சுப்பர் ஹீரோ திரைக்கதையாக பயணிக்கிறது இப்படத்தின் கதை.

முதல் பாதியில் கதாபாத்திர அறிமுகமும், கலகலப்பும், சுவாரசியமான திருப்பமும்,  ரசிகர்களை வசப்படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சுப்பர் ஹீரோ கதாபாத்திரமான சந்திராவின் பராக்கிரமங்களை விவரிப்பதை விட... மேலும் சந்திராவை விட வலிமையான இரண்டு சுப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என இயக்குநர் மேலும் இரண்டு சுப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்துகிறார். இது இந்த கதையின் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவரும் என யூகிக்க முடிகிறது.

இயக்குநர் இன்றைய இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல் - நகைச்சுவை- எக்சன் - ஃபேண்டஸி-  வி எஃப் எக்ஸ் - என கலந்து கட்டி சொல்லி ரசிகர்களை  கவர்கிறார். ஆனால் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைவு என்பதால் பார்வையாளர்களிடத்தில் சோர்வு எட்டிப் பார்க்கிறது.

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு சுப்பர் ஹீரோவான சந்திரா எங்கிருந்து... எதற்காக... பெங்களூருக்கு வருகிறார்? என்ற வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. சந்திராவின் அசலான வில்லன் யார்? என்ற வினாவிற்கும் விடை கிடைக்கவில்லை.... இப்படி பல கேள்விகளுக்கு நேரடியாக விடையை இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் வழங்கவில்லை.

இருப்பினும் சுப்பர் ஹீரோ சந்திரா கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் - அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் தன்னுடைய அசத்தலான கண் அசைவாலும் ...அளவான உச்சரிப்பாலும்... நேர்த்தியான உடல் மொழியாலும்...எளிதாக கடத்துகிறார்.

சன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பிரேமலு' புகழ் நாயகன் நஸ்லன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவருடைய நண்பர்களாக வரும் நடிகர் சந்து சலீம் குமார் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.

நாச்சியப்ப கவுடா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் அற்புதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை நடிப்பால் மிரட்டுகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் மட்டுமல்ல சுப்பர் ஹீரோக்களாக துல்கர் சல்மான் மற்றும் டொவினோ தோமஸ் தோன்றுகிறார்கள். இவையும் ரசனைக்குரியதாகவே இருக்கிறது.

படத்தில் ஒளிப்பதிவாளரையும், வி எஃப் எக்ஸ் குழுவினரையும், இசையமைப்பாளரையும்... தாராளமாக பாராட்டலாம். ஹொலிவுட் தரத்திற்கு நிகராக ஒரு தென்னிந்திய திரைப்படத்தை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.

லோகோ - அத்தியாயம் 1:  சந்திரா:  - பிரமாண்டமான டிஜிற்றல் செல்லுலாயிட் யக்ஷி

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right