புதிய மின்சாரசபைச் சட்டமூலம் மோசடிகளுக்கே வழிவகுக்கும் - கபீர் ஹாசிம் தெரிவிப்பு

06 Aug, 2025 | 05:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை முழுமையாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீர்மானம் எடுக்கும் உரிமை தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மக்கள் விடுதலை முன்னணி தமது தலைவரான ரோஹன விஜேவீர வின் கொள்கையை மாற்றி விட்டது. மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தவைலராக  ஏற்றுக்கொண்டு அவரது கொள்கையை    முழுமையாக பின்பற்றுகிறது. இதன் பிரகாரமே இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும்  மின்சாரத்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு   புதிய கருத்திட்டங்களை மேற்கொண்டன.இந்த திட்டங்கள் அனைத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

மக்கள் விடுதலை முன்னணி  1987 மற்றும்  1988 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொண்ட வன்முறைகளினால் அரச சொத்துக்கள் பல சேதமடைந்தன.இவற்றில் மின்பிறப்பாக்கிகளை பிரதானவொன்றாக குறிப்பிட வேண்டும். மின்பிறப்பாக்கிகளை வெடிக்கச் சென்று முழு நாட்டையும் இருளுக்கு தள்ளினார்கள்.

மின்சாரத்துறை கட்டமைப்பை புதுப்பிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி 2004 ஆம் ஆண்டு வந்த கருத்திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணியின்  எதிர்ப்பினால் இலங்கையின் மின்சாரத்துறை கட்டமைப்பு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது.

மின்சாரதுறையின் பின்னடைவு கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதிபலனாக வெளிப்பட்டது. பல மணித்தியால மின்விநியோக தடை நாட்டில் சமூக கட்டமைப்பில் மிக மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.இவ்வாறான பின்னணியில் தான் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர 2024 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபை சட்டத்தை சமர்ப்பித்தார்.

முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த சட்டத்தில்  பல குறைப்பாடுகள் காணப்பட்டாலும் அப்போதைய சூழ்நிலைக்கு அவசியமானதாக அமைந்தது.இதில் மின்சார சட்டத்தின் உரிமத்தின் ஒரு பகுதியை 4 நிறுவனங்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பரிந்துரைக்கவும், தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கும் உரித்தாக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை முழுமையாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீர்மானம் எடுக்கும் உரிமை தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்