(டானியல் மாக்ரட் மேரி )
இலங்கையின் தாவர வாழ்வியல் ஆராய்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, “Discovery Additions to the Flora of Ceylon” என்ற புதிய நூல் செவ்வாய்க்கிழமை (22) வெளியிடப்பட்டது.
இந்த நூல், தாவர அறிவியலின் வரலாற்றில் நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இந்நூல் மூலம் 200 க்கும் மேற்பட்ட புதிய தாவர இனங்கள் மற்றும் 100 வகை தாவரங்கள் உலகில் மறைந்து பின்னர் மறுபடியும் கண்டறியப்பட்டவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட துல்லியமான ஆய்வுகளின் பயன்தரும் விளைவாகும்.
இந் நிகழ்வில், கருத்துத் தெரிவித்த டில்மா தேயிலை நிறுவனத்தின் தலைவர், டில்ஹான் சி. பெர்னாண்டோ,
"இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். ஒரு மிக முக்கியமான நிகழ்வுக்காக, Discovery Additions to the Flora of Ceylon எனும் இந்நூல், இலங்கையின் தாவர உலகைச் சித்தரிக்கும் ஒரு மாபெரும் ஆவணமாகும். இது வெறும் ஒரு புத்தகம் அல்ல. இது நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் தாவர அறிவியல் மைல்கல்லாகும்.
இந்த நூலில், இலங்கையின் தாவர உலகில் 100க்கும் மேற்பட்ட மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், மற்றும் முழுமையாக புதியதாகக் கண்டறியப்பட்ட 200 தாவர வகைகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தும், பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்த விஞ்ஞான ஆய்வுப் பணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பலன்களாகும்.
இலங்கையின் பசுமை மற்றும் தாவர வளம் உலகளாவிய ரீதியில் பெருமைப்படத்தக்கது. ஒவ்வொரு தாவரமும், இலங்கையின் உயிரியல் சமநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
டில்மா நிறுவனத்தில், எப்போதும் நாங்கள் நம்புவது ஒன்றே – வணிகம் என்பது மனித சேவையின் ஒரு வடிவம்.
இயற்கையையும், சமூக நலனையும் இணைத்து நோக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இந்த நூல், மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டமாக அமையட்டும்.
இது பாடசாலைகள்,நூலகங்கள், வீடுகள் மற்றும் இதயங்களுக்குள் சென்று, தாவரங்களை பாதுகாக்கும் உணர்வை வளர்க்கட்டும்.
இந்த அருமையான முயற்சிக்காக உழைத்த அனைத்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்" என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நூலின் தலைமை ஆய்வாளரும் ஆசிரியரும் தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி நிபுணருமான கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க,
"இலங்கையின் தாவர உலகு என்பது உலகின் உயிரியல் ரீதியான கோட்பாடுகளுக்கே சவாலாக இருக்கும் அளவுக்குத் தனித்துவமானது. இந்நூலை உருவாக்க பத்து ஆண்டுகளாக கடினமான பயணம் முன்னெடுக்கப்பட்டது.
மலையடிவாரங்கள், வனங்கள், இடர்பாடுகள் அனைத்தையும் கடந்து, ஆய்வுகளின் அடிப்படையில் நாம் இப்போது 200 புதிய தாவர வகைகளை அறிமுகம் செய்ய முடிந்துள்ளது.
அதே நேரத்தில், உலகில் இருந்து மறைந்த நிலையில் இருந்த 100 தாவர வகைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், இலங்கையின் சூழல் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற உறுதிப்பாட்டோடு தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூல், வெறும் தாவர விபரங்களை தருவதோடு முடியவில்லை. இது ஒரு அழைப்பு;பசுமையைப் பாதுகாக்க, ஒவ்வொருவரும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இயற்கையின் மீது நம் பாசத்தைக் காட்ட வேண்டும்.
இந்த ஆய்வின் முன்னேற்றத்திற்கும் தொடர்ச்சிக்கும் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட தன்னார்வ அமைப்புகள் முக்கிய பங்களிப்பாளர்களாக இருந்தனர்.
நீண்ட பயணத்திற்குப் பின் இன்று இந்நூலை கையகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன். எனது குழுவினர் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் உயிர் கொடுத்தார்கள்.
அவர்களுக்கும், இந்த முயற்சிக்கு ஆதரவளித்த டில்மா நிறுவனத்திற்கும் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி" என்றார்.
ஹிமேஷ் ஜயசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மரபணு வரிசைப்படுத்தல் (DNA sequencing) மற்றும் கிளாடிஸ்டிக்ஸ் (Cladistics) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.
Diospyros இனங்களை துல்லியமாகவும் எளிதாகவும் அடையாளம் காணும் வகையில், தெளிவான இருவழிக் குறிப்பு முறைகள் (Dichotomous Key) இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆய்வாளர்கள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தாவர உயிரினங்களை மிக துல்லியமாக மற்றும் நம்பகமாக அடையாளம் காண முடியும்.
மேலும், இந்த ஆய்வுக்காக இலங்கையின் வட பகுதி, மத்திய புல்வெளி மற்றும் தென் மலைநாடு உள்ளிட்ட மூன்று முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்பரப்பியல் மற்றும் தாவர வகைகள் தொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாவர இனங்களை துல்லியமாக வகைப்படுத்தும் நோக்கில், உருவவியல் அம்சங்களை ஆராய்வது இவ்வாய்வின் முக்கியமான கூறாகும்.
இவை மூலம் இனங்களின் வெளிப்படையான குணாதிசயங்கள், விதவிதமான கூறுகள் மற்றும் வடிவமைப்புகளை அடையாளம் கண்டு, ஒரே குடும்பத்திற்குள் இருந்தும் ஒவ்வொரு இனத்தையும் தெளிவாக வேறுபடுத்த முடிகிறது.
இந்த ஆய்வில், குறிப்பாக தாவர இனங்களின் உருவவியல் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப்பட வேண்டியதாக வலியுறுத்தப்பட்டுள்ளது : அந்த வகையில் வேறுபடுத்தப்பட்ட சில தாவர வகைகள்,
Psychotria இன வகைகளில், Psychotria gardneri மற்றும் பிற Psychotria இனங்களை Strobilanthes lupulina போன்றவைகளிலிருந்து வேறுபடுத்த, இவைகளின் இலைகள், பூக்கள் , போன்ற உருவவியல் அம்சங்களை கவனிக்க வேண்டும்.
Kokoona இன வகைகளில், Kokoona zeylanica மற்றும் மற்ற Kokoona இனங்களை தெளிவாக அடையாளம் காண, இவற்றின் மரம் வளர்ச்சி முறை, இலை வடிவம், பழங்கள் போன்ற உருவவியல் பண்புகளை ஆராய்ந்து வேறுபடுத்தல் அவசியம்.
Zanthoxylum இன வகைகளில், Zanthoxylum asiaticum மற்றும் பிற Zanthoxylum இனங்களை வேறுபடுத்த, இவற்றின் தண்டு அமைப்பு, இலை வடிவம் மற்றும் பூக்கள் போன்ற morphological அம்சங்களை ஆழமாக ஆராய வேண்டும்.
Dipterocarpaceae குடும்பத்தை சேர்ந்த Stemonoporus, Dipterocarpus, Hopea, Anthoshorea, Shorea மற்றும் Doona போன்ற இனங்களை துல்லியமாக வகைப்படுத்த, இவைகளின் மர வளர்ச்சி, இலை வடிவம், பூவின் அமைப்பின் வேறுபாட்டை அவதானித்தல் வேண்டும்.
மொத்தமாக, இந்த இனங்களை துல்லியமாக அடையாளம் காண மற்றும் உயிரியல் வகைப்படுத்தலில் முழுமையான நம்பகத்தன்மையை உருவாக்க, உருவவியல் அம்சங்களை சிக்கலான அளவில் ஆராய்வது அவசியமாகும்.
இவ்வாறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பெரும் பங்களிப்பாக வெளிவந்த இந்த புத்தகம், இலங்கையின் இயற்கை வளங்களை நேசிக்கும் அனைவருக்கும் ஓர் பரிசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM