bestweb

நிர்த்தனா நடனப்பள்ளியின் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா நிகழ்வு

20 Jun, 2025 | 10:19 PM
image

(மா.உஷாநந்தினி)

படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்

நிர்த்தனா நடனப்பள்ளிக்கும் அதன் இயக்குநரான சிவானந்தி ஹரிதர்ஷனின் குருசேவைக்குமான 50 ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா, கடந்த ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

வீரகேசரியின் ஊடக அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவானந்தி ஹரிதர்ஷனின் முதல் நாட்டிய குருவும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான பாலசுந்தரி பிராத்தலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

அத்துடன் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் பி­ரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், பரதநாட்டியக் கலைஞர் வாசுகி ஜெகதீஸ்வரன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புஷ்பாஞ்சலி, கணபதி நடனம், குடை நடனம், காவடி நடனம், ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், தில்லானா போன்ற நடனங்களுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவானந்தி ஹரிதர்ஷன் நட்டுவாங்கம் இசைக்க, அகிலன் சிவானந்தன், அருண் ஹரிதர்ஷன் (சிவானந்தி ஹரிதர்ஷனின் மகன்) ஆகிய இருவரும் பாட, ரட்ணம் ரட்ணதுரை (தபேலா), அபிணவ் ரட்ணதுரை (மிருதங்கம்), சுந்தரமூர்த்தி கோபிதாஸ் (வயலின்), பிரியந்த தசநாயக்க (புல்லாங்குழல்), விநாயகமூர்த்தி செந்தூரன் (கீபோர்ட்) ஆகியோர் பின்னணி இசைப் பங்களிப்பு வழங்கினர்.

கிருஷ்ணனின் பால்ய லீலைகள், சூதாட்ட களம், சகுனியின் நுட்பமான காய்நகர்த்தல், பாண்டவர்களின் தோல்வி, திரௌபதியின் துகிலுரிப்பு, கிருஷ்ணனின் அருள், போர்க்களத்தில் கையறு நிலையில் நிற்கும் கர்ணன் அர்ஜுனனின் அம்பு பட்டு மடிந்தது, கிருஷ்ணன் தோன்றிய காட்சிகள்.... என ஒவ்வொன்றும் “கானம் இசைத்து...” வர்ணத்தில் காட்டப்பட்டது.

மறைந்த இந்திய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானா ஆரம்பிக்கவிருந்த தருணத்தில், “தில்லானாவா? வேகமா, பார்க்க அழகா இருக்குமடா..” என்று பார்வையாளர் ஒருவர் ஆர்வமிகுதியில் சொல்லக் கேட்டபோது, கலை பொதுமக்களை எவ்விதம் சென்றடைந்திருக்கிறது என்பது புரிந்தது.

அத்துடன், அண்மையில் மறைந்த, இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞரான அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு அமைக்கப்பட்ட குடை நடனமும் கீர்த்தனமும், அவருக்கான சமர்ப்பணமாக மேடையேற்றப்பட்டன.

“ஒயிலாக பவனி வந்தாள்...” நடனத்தின்போது, நடன நெறியாள்கையாளரான சிவானந்தி ஹரிதர்ஷன், தனது சிரேஷ்ட மாணவிகளோடு இணைந்து மேடையில் ஆடியது முத்தாய்ப்பான நிகழ்வு. சலங்கை கட்டிய சில ஜோடிக் கால்களின் ஒலிகளுக்கு மத்தியில் “சத்தமின்றி”, ஆனால், சர்வ தாளத்தோடு சிவானந்தி ஆடினார். வயதேறிவிட்டாலும், அவரது நளினத்தையும் அங்க சுத்தத்தையும் துள்ளியாடும் வேகத்தையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர், வியந்தனர்!

“உட்கார்ந்தபடி வாயால் பாடியும் சொல்லியும் கைகளால் சைகை காட்டியும் மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுப்பதை விட, நாமே ஆடிக் காண்பித்து, நாட்டியம் கற்றுக்கொடுப்பதே சிறந்த கற்பித்தல் முறை” என்று சிவானந்தி கூறுவதுண்டு. தவிர, “மாணவர்களோடு சேர்ந்து நானும் ஆடுவதால்தான், இந்த வயதிலும் என் உடல் நாட்டியத்துக்கு வளைந்துகொடுக்கிறது” என்கிறார்.

“சுவர்ண நிருத்தியா” பொன்விழாவின் இறுதிப் படைப்பாக, அனார்கலி நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது.  

இதன் பிரதான கதாபாத்திரமான அனார்கலியாக, சிவானந்தியின் மகளும் பரதநாட்டியக் கலைஞருமான நிர்த்தனா ஹரிதர்ஷன் வேடமேற்று ஆடினார். அனார்கலியின் இணையான “சலீம்” கதாபாத்திரத்துக்கு தகுந்தாற்போல் ஆண்வேடமணிந்து, சிவானந்தியின் மாணவி நிரஞ்சனி இளங்கோவன் ஆடியிருந்தார்.

கதக் நடனத்தை தழுவிய அனார்கலியும் குழுவினரும், பாத்திரப் படைப்புக்கே உரிய அசல் ஆடை, அலங்கார  ஒப்பனையில், பரதநாட்டியம் ஆடிய காட்சிகள் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தன.

மன்னர் அரசவையில், போதை மயக்கத்தில் அனார்கலி பாடி ஆடும் காட்சியில், அனார்கலிக்கு சிவானந்தி பின்னணிக் குரல் கொடுத்த விதமும் வார்த்தை உலறலும் பாணியும் சபையை பெரிதும் ஈர்த்தன. அனார்கலியை உயிரோடு வைத்து கல்லறை கட்டப்பட்ட காட்சியும் கல்லறைக்கு முன்னால் சலீம் அழுது துவண்ட காட்சியும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டன.

சரித்திரங்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டுவரும் ஒரு காலகட்டத்தில், வேறு நாடு, வேறு சமூகம், வேறு பண்பாடு என்ற பாகுபாடின்றி சகல வரலாறுகளையும் உள்வாங்கி, சகல இன, மத, சமூகத்தினரோடும் அவர்தம் பண்பாடுகளோடும் கைகோர்த்துப் பயணிக்கின்ற பெருமை கலைகளுக்கு மட்டுமே உண்டு. அதன் உண்மைத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ‘அனார்கலி நாட்டிய நாடகம்’ என்றால், அதை மறுக்க இடமில்லை. 

இதையும் பார்க்க...

பரதத்தோடு இணைந்த “அனார்கலி!”

https://www.virakesari.lk/article/217953

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அன்பையும் ஒருமைப்பாட்டையும் தாங்கி நிற்கிறது கதிரைவேலன்...

2025-07-07 19:19:29
news-image

சிங்கை வாழ் தமிழ் குடும்பத்தின் 3...

2025-06-29 07:32:57
news-image

நிர்த்தனா நடனப்பள்ளியின் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா...

2025-06-20 22:19:04
news-image

பரதத்தோடு இணைந்த “அனார்கலி!”

2025-06-20 22:27:56
news-image

சீதா எலிய : இலங்கையின் ஆன்மிக...

2025-06-16 12:05:58
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்....

2025-06-09 09:14:33
news-image

"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" -...

2025-06-11 17:04:49
news-image

கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? ...

2025-05-23 18:56:02
news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06