"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் 2025 நிதியாண்டில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுகள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அந்த திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, விசேட தேவையுடைய சமூகத்தினரின் பயன்பாட்டை இலகுபடுத்தும் வசதிகளுடன் கூடிய 10 பேரூந்துகளை பாணந்துறை, கடவத்தை, அவிசாவளை ஆகிய நகரங்களில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வரை இயக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
இந்த நாட்டில் இதுபோன்ற ஒரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
கண்டி நகரை மையமாக கொண்டு மெய்நிகர் நகரமொன்றை (Virtual City) உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதனை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் தலதா மாளிகை வளாகத்தை உள்ளடக்கி இருப்பதுடன், அதற்கு செலவிடப்படும் தொகை 50 மில்லியன் ரூபாவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு நாட்டின் அனைத்து இன மக்களின் கலாசார விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலான மூன்று நாள் கலாசார நிகழ்வொன்றை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்ச்சித் திட்டம் காலி முகத்திடல் உட்பட 16 இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுற்றுலாப் பிரதேசங்களில் தரப்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 500 மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக 525 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் இரண்டு முக்கிய கரையோரப் பகுதிகளுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நீலக்கொடி (Blue Flag) சான்றிதழை, இரண்டு வருடங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கான நிலைபேறான வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உனவடுன மற்றும் ஹிரிகடுவ கடற்கரைகள் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் கீழ் 450க்கும் மேற்பட்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களில் 250 பேருக்கு ஏற்கனவே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் 300 மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், நகர்ப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் உள்ள நீரை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவற்றை முறையாக பேணவும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள சாதாரண கால்வாய் கட்டமைப்பை பேணும் செயற்பாட்டை நிலைபேறான வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் 100 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றில் நீர் மாசடைவதைக் குறைக்கும் நோக்கத்துடனான ஒரு முன்னோடித் திட்டம், மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன், 500 மில்லியன் ரூபா செலவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு உரம் கொள்கலன்களை (Compost Dumpbin) வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டத்தில், 150 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்கள் வழங்கப்படுவதோடு, அதுவும் இந்த வருடத்தில் செயல்படுத்தப்படும்.
120 மில்லியன் ரூபா செலவில் வீதிப் பாதுகாப்பிற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுடன், நாளாந்தம் நிகழும் வீதி விபத்துகளை குறைப்பதே இதன் நோக்கமாகும். போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக
நாடளாவிய ரீதியில் பல மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
"Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை அமைச்சுகள் மற்றும் நிறுவன மட்டத்தில் அடைவதற்காக இந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
"Clean Sri Lanka” செயலகத்தின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜீ.எம்.ஆர்.டீ. அபோன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எஸ்.பீ.சீ. சுகீஷ்வர ஆகியோருடன் அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM