இந்திய விமான விபத்து : குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி

16 Jun, 2025 | 03:10 PM
image

இந்தியா, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. 

மேலும், குஜராத் அரசு இன்று திங்கட்கிழமை (16) மாநிலத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரச தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (12) பிற்பகல் விபத்துக்குள்ளானது. 

விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்துள்ளதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விமானம் மோதியதில்  மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நேற்று விஜய் ரூபானியின் உடல், டிஎன்ஏ பரிசோதனை மூலமாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச் சடங்கு இன்றைய தினம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத்பாரா தகனசாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபானிக்கு குஜராத் அரசு திங்கட்கிழமை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்தது. 400க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் இந்த இறுதி சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

விமான விபத்து நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, டிஎன்ஏ பொருத்துதல் மூலம் இதுவரை 87 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து 47 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயிரிழ்நதவர்கள் குஜராத்தின் பருச், ஆனந்த், ஜூனாகத், பாவ்நகர், வதோதரா, கேடா, மெஹ்சானா, அர்வல்லி மற்றும் அகமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பிஜே வைத்தியசாலையின் மேலதிக சிவில் கண்காணிப்பாளர் வைத்தியர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியோ அல்லது வேறுவிதமாக சேதமடைந்தோ இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை கண்டறிய அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்தவருக்கும் உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில், இந்திய மதிப்பில் தலா 25 இலட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்த ஏர் இந்தியாவின் அறிக்கையில்,

 ‘சமீபத்திய விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா துணையாக நிற்கிறது. எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் உயிர் பிழைத்தவருக்கும் ஏர் இந்தியா ரூ. 25 லட்சம் அல்லது தோராயமாக 21,000 ஜிபிபி (கிரேட் பிரிட்டன் பவுண்ட்) இடைக்கால இழப்பீட்டை வழங்கும். இது டாடா சன்ஸ் ஏற்கெனவே அறிவித்த ரூ.1 கோடி அல்லது தோராயமாக 85,000 ஜிபிபி இழப்பீட்டுக்கு கூடுதலாகும்’ எனத் தெரிவித்தது.

இந்திய மத்திய உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் தலைமையிலான உயர் மட்ட ஒழுங்கு குழு, அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு வழிவகுத்த காரணங்களை ஆராயும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரிவான வழிகாட்டுதல்களையும் பரிந்துரைக்கும். மேலும் மூன்று மாதங்களில் இதன் அறிக்கை வெளியாகும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46