சீதா எலிய : இலங்கையின் ஆன்மிக இரத்தினம்!

16 Jun, 2025 | 12:05 PM
image

(மனோகரன் பிரியங்கா)

இலங்கையில் இருக்கின்ற ஒரே ஒரு  சீதை அம்மன் ஆலயமாக கருதப்படும் சீதா எலிய ஆலயம்  நுவரெலியா மாவட்டத்தில் குளிர்ச்சியான வானிலை, சிறிய நீரோடைகள், பசுமை பரப்புகள் மற்றும் சிறிய மழைக் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

இராமாயண இதிகாசத்தின்படி, இராவணனால் கடத்தப்பட்ட சீதாதேவி  சிறை வைக்கப்பட்டதாக நம்பப்படும் சீதா எலிய ஆலயம், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், பக்தர்களும் பெரிதும் பார்வையிடும் புனித ஸ்தலமாக பரிணமித்துள்ளது.

இந்த ஆலயம் தொடர்பில் ஆவணங்களை சேகரிக்கும்போது நுவரெலியா ஹக்கலை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் விஜேயகுமார் என்பவரால் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இதில் சில பின்வருமாறு:

சீதா எலிய ஆலயத்தின் முக்கியத்துவம்

சீதா எலிய ஆலயம்  இயற்கையாக உருவானதா? அல்லது பழங்காலத்திலேயே கட்டப்பட்டதா? என்பது இன்னும் வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக தெளிவாகப்படவில்லை. இருப்பினும் இன்று வரை பக்தர்கள் இந்த ஆலயத்தை புனித  இடமாக கருதுகின்றனர்.

சீதை அம்மன் ஆலயம், 19ஆம் நூற்றாண்டில் இந்திய வம்சாவளிகள் இலங்கைக்கு  குடியேறிய பின் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. தற்போது இந்த  ஆலயம் மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டு, இதனை மக்கள் புனித பூமியாக  கருதுகின்றனர்.

இந்த ஆலயத்தை சுற்றியுள்ள, நிலத்தடி வெப்பநிலை மற்ற பகுதிகளை விட சற்று அதிகம் என கூறப்படுகின்றது. மேலும் இந்த ஆலயத்திற்கு கீழ் சில பண்டைய புராணக் கோட்பாடுகள் சுட்டிக்காட்டுவதைப் போல, பழங்கால இராவணன் அரண்மனையின் பாகங்களும் இரகசிய சுரங்க வழிகளும் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இதற்கான சிறிய நிலத்தடி அதிர்வியல் ஆய்வுகள் 20ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விடயம் பொதுமக்களிடம் வெளியிடப்படவில்லை.

அனுமனின் காலடித் தடங்கள் இயற்கையாக அமைந்ததுதானா? அல்லது உருவாக்கப்பட்டதா?

கோயிலுக்குப் பின்னால், ஒரு பாறை மீது அனுமனின் காலடித் தடங்கள் உள்ளன. இந்த இடத்திலேயே அனுமான் முதல் முதலில் சீதையைக் கண்டார் என நம்பப்படுகிறது.

இங்கு காணப்படும் அனுமனின் காலடித் தடங்கள்  இயற்கையாக உருவானவை அல்ல எனவும் கூறப்படுகிறது. ஆனால், நூற்றாண்டுகளாக பக்தர்கள் வழிபடும் சின்னங்களாக இன்றும் போற்றப்படுகின்றன.

தற்போது வரை அரசு மற்றும் சர்வதேச தொல்லியல் அமைப்புகள் (Sri Lanka Archaeology Dept, UNESCO) இந்த காலடி சின்னங்கள் குறித்து அதிகாரபூர்வ ஆய்வு மேற்கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை.

ஆனால், சில பொது அறிஞர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் இவை மனிதனால் செதுக்கியவை எனக் கூறியுள்ளனர். ஏனெனில், சில கற்களில் இயற்கையாகவே சில வடிவங்கள் தோன்றும்.

அதனால் அனுமனின் காலடித் தடங்கள் என நம்பப்படும்  இந்தச் சின்னங்கள் தெளிவாக ஒரு மனிதக் கால் வடிவில், குறிப்பாக வலது மற்றும் இடது பாதம் இரண்டும், வெவ்வேறு பாறைகளில் உள்ளதால், இயற்கையாக உருவானவை என்றொரு வலுவான அறிவியல் ஒப்புதல் எங்கும் கிடைக்கவில்லை.

அசோக வனம்

இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய இடமாக அசோக வனம் திகழ்கிறது. சீதாதேவி, இராவணனால் இலங்கைக்கு கடத்தப்பட்ட பின், சிறையில் அல்லாமல், இயற்கை அழகோடு அமைந்த, அசோக மரங்கள் சூழ்ந்த காட்டில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மரியாதையின் அடையாளமாகவும், சீதையின் தூய்மை மற்றும் மனவலிமையையும் குறிக்கிறது.

நுவரெலியாவின் சீதை அம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள  ஹக்கல பூங்காவை சுற்றியுள்ள காடுதான்  (Hakgala Botanical Garden) அசோக வனம் என நம்பப்படுகிறது.

பொதுவாக அசோக மரம்  என்பது இந்தியா மற்றும் இலங்கையில் புனிதமாகக் கருதப்படும் மரமாகும். இந்த மரம் ஆயுர்வேதத்தில் பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது.

சாந்தி, நம்பிக்கை மற்றும் நற்சின்னத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில், அசோக மரங்கள் உள்ள இடத்தில் வன்முறை அல்லது தீய சக்திகள் எதுவும் இடம்பெறாது என்ற நம்பிக்கை இருந்தது.

இந்த ஆலயத்தை சுற்றி காணப்படும் அசோக மரங்கள், சீதையின் காலத்திலிருந்தே உள்ள மரங்கள் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் அந்த மரங்கள் பற்றி ஆய்வுகள் செய்யப்படாததால், இவை இயற்கையாகவே உருவான மரங்களா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட  மரங்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

சில உள்ளூர் யோகிகள் மற்றும் ஆன்மிகவாதிகள்  சீதா எலிய மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிகுந்த ஆத்ம சக்தி உள்ளது என நம்புகின்றனர். இங்கு மேற்கொள்ளப்படும் தியானங்கள் மற்றும் தவங்கள் மூலம் சுவாச ஒழுங்கு, மன அமைதி ஏற்படுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அசோக வனம் என்பது வெறும் ஒரு புராண இடமாக இல்லாமல், பாரம்பரியத்தையும் ஆன்மிக சக்தியையும் இயற்கையின் அழகையும் இணைக்கும் ஒரு மறைக்கப்பட்ட இரத்தினமாகத் திகழ்கிறது.

இந்நாள் வரை, சீதை அம்மன் ஆலயம்  மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள மரபுகள், சின்னங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் அனைத்தும் இந்த இடத்தின் அருமையை உணர்த்துகின்றன.

சீதா எலிய ஆலயம் இலங்கையின் ஆன்மிக- பாரம்பரிய புவிசார் முக்கியத்துவம் மிக்க இடமாக திகழ்கின்றன. வெறும் புராண கதை அல்லாமல், இவை மக்களின் நம்பிக்கையும் இயற்கையும் மரபும் இணைந்த ஒரு நேர்மறை ஆற்றல் மிக்க பரப்பாக பரிணமித்துள்ளன.

இங்கு காணப்படும் அனைத்து அடையாளங்களும்  தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவையாகும். ஏனெனில், இது தொல்லியல் களஞ்சியமாக மட்டுமல்லாமல், மனித நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17