ஜனாதிபதியின் தலையீட்டினால் பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டமைக்கு அமையவே காணாமலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தடுக்கப்பட்டது. மக்களின் ஆணையையும் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டையும் மீறி அரசியலமைப்பு வரப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.
சர்வதேச விசாரணையை நிராகரிப்பதும் இராணுவத்தை பலப்படுத்துவதுமே கட்சியினதும் ஜனாதிபதியினதும் உறுதியான நிலைப்பாடு எனவும் அக்கட்சி குறிப்பிட்டது .
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகிய பிரதான விடயங்களில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போதும் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. இப்போதும் பாராளுமன்றத்தில் கொண்டுவர முயற்சித்த காணாமாலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் கொண்டுவரப்படாது தடுக்கப்படவும் எமது தலையீடுகளே முக்கியமானவையாகும். சர்வதேச சமவாயம் ஒன்றில் நாம் கைச்சாத்திட முன்னர் முதலில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
நாட்டில் எவ்வாறான கருத்து நிலவுகின்றது என்பதை ஆராய்ந்த பின்னரே சர்வதேச சமவாயம் ஒன்றில் கைச்சாத்திட வேண்டும். எனினும் இவ்வாறு சர்வதேச சமவாயம் ஒன்றுக்கு இணங்குவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. ஜி.எஸ்.பி பெற்றுக்கொள்ள 27 உடன்படிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொண்டது. இது எமது அரசாங்கத்தில் தெரிவித்த இணக்கப்பாடு அல்ல. முன்னைய அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கையாகும். இப்போதும் வெளிவிவகார அமைச்சர் இதனை செய்துள்ள போதிலும் யார் மீதும் குறைகூற நாம் தயாராக இல்லை. அரசாங்கமாக அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் காணாமாலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் 93 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன . 53 நாடுகள் இன்னும் தமது கைச்சாத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. அதேபோல் பிரபல்யமான சில நாடுகள் இந்த சமவாயத்தில் கைச்சாத்திடாதும் உள்ளன . எனவே நாம் அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறு இருப்பினும் காணாமாலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கைச்சாத்திட்டது. மீண்டும் 2016ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி மீள் உறுதியும் செய்துள்ளது.
அதன் பிரகாரம் காணாமாலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம். எனினும் இப்போது இது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்தே இதனை கொண்டுவர வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் எம்மிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர் மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களும் மக்களின் நிலைப்பாடும் ஒரே விதமனதாக அமைந்துள்ளதால் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஆழமாக ஆராய வேண்டிய தேவை இருந்தது.
எவ்வாறாயினும் நாம் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டை மீறி எந்த வேலைத்திதிட்டங்களையும் முன்னெடுக்க தயாராக இல்லை. அதேபோல் எமது இராணுவத்தை தண்டிக்கும் வகையிலோ அல்லது காட்டிக்கொடுக்கும் வகையிலோ எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. அத்துடன் சர்வதேச விசாரணைகளுக்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இடமளிக்கப்போவதில்லை. ஜனாதிபதி தலையீட்டின் மூலமாக பிரதமருக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில் இவை தடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM