தயாரிப்பு : 7CS என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ், பி. எஸ். அவினாஷ் , முத்துக்குமார், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : ஆறுமுக குமார்
மதிப்பீடு : 2.5 / 5
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் 'ஏஸ்'. முழுக்க முழுக்க மலேசிய நாட்டின் பின்னணியில் தயாரான இந்த திரைப்படம் மலேசிய ரசிகர்களை கடந்து ஏனைய ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மலேசியாவில் தன்னை தொழிலதிபர் என்று சொல்லிக்கொண்டு திரியும் அறிவுக்கரசன் ( யோகி பாபு) இந்தியாவிலிருந்து தன்னுடைய உறவினரான போல்ட் கண்ணன் என்பவர் மலேசியாவிற்கு வருகை தருவதாக செய்து கிடைத்து, அவரை வரவேற்பதற்காக மலேசிய விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இந்தத் தருணத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் விஜய் சேதுபதி விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார்.
அவர் தான் 'போல்ட் கண்ணன்' என நினைத்து அவரை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அறிவுக்கரசன். மலேசியாவில் கல்பனா( திவ்யா பிள்ளை) எனும் பெண்மணி நடத்தும் உணவகத்தில் உணவு தயாரிக்கும் தொழிலாளியாக போல்ட் கண்ணன் பணியாற்ற தொடங்குகிறார்.
அவர் தங்கி இருக்கும் பகுதியில் ருக்மணி ( ருக்மணி வசந்த்) எனும் இளம் பெண்ணும், அவருடைய வளர்ப்பு தந்தையான ராஜதுரை ( பப்லு பிரிதிவிராஜ்)யும் வசிக்கிறார்கள். இந்த ராஜதுரை காவல்துறையில் பணியாற்றினாலும் சட்ட விரோதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார். இந்தத் தருணத்தில் ருக்மணியை பார்த்தவுடன் போல்ட் கண்ணன் காதலிக்க தொடங்குகிறார்.
அவருடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக பத்தாயிரம் மலேசிய வெள்ளியை தருவதாக ஒப்புக்கொள்கிறார் போல்ட் கண்ணன். இதற்காக போல்ட் கண்ணனும், அறிவுக்கரசனும் கடன் வாங்குவதற்காக உள்ளூர் கந்துவட்டிக்காரரான தர்மா( பி.எஸ். அவினாஷ்) வை சந்திக்கிறார்கள். அங்கு இவர்களுக்கு கடன் கிடைக்கவில்லை.
மாறாக உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என தர்மா கும்பல் எச்சரிக்கிறது. போல்ட் கண்ணனும் , அறிவுக்கரசனும் அந்த பணத்தை எப்படி கொடுக்கிறார்கள்? ருக்மணிக்கு ஏற்பட்ட பிரச்சனையை போல்ட் கண்ணன் தீர்க்கிறாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் விஜய் சேதுபதி - தன்னுடைய இயல்பான நடிப்பு திறமையால் அந்த கதாபாத்திரத்தை அசால்டாக கையாள்கிறார்.
கதாபாத்திரத்தை திரைமொழியில் அவர் கையாண்டிருக்கும் கூலான அணுகுமுறை ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஓடி ஏறி குதித்து நடிப்பதை விட அசால்டாக தன்னுடைய உடல் மொழிக்கு எது ஏற்றதோ அந்த வகையில் நடித்து சபாஷ் பெறுகிறார். ருக்மணியுடனான கெமிஸ்ட்ரி திரையில் தொடக்கத்தில் தடுமாறினாலும் இரண்டாம் பாதிக்குப் பிறகு ஏற்றுக் கொள்ள வைக்கிறது.
அறிவுக்கரசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு நீண்ட நாட்கள் கழித்து டைமிங் பஞ்ச் டொயலாக் பேசி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். இவரைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருக்கும் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் அழகாகவும், இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார். அவருடைய பின்னணி பேச்சில் சில குளறுபடிகள் இருந்தாலும் நடிக்க முயற்சித்திருக்கிறார்.
தர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பி எஸ் அவினாஷ் - வழக்கமான வில்லத்தனத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். கதைக்காக பெரிதாக மெனக்கடவில்லை என்றாலும் திரைக்கதையில் சுவாரசியத்தை சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டாம் பாதி மற்றும் உச்சகட்ட காட்சி பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
முதல் பாதையில் பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு திரையில் விடையில்லை. குறிப்பாக விஜய் சேதுபதி யார்? அவரின் பின்னணி என்ன? போன்ற கேள்விக்கு பதில் இல்லை. ஒருவேளை இதெல்லாம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வெளியாக கூடும் அல்லது படம் வெற்றி பெற்ற பிறகு நீக்கப்பட்ட காட்சிகளாக இணையத்தில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
'போக்கர்' எனும் சூதாட்ட விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் கூகுளில் அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொண்ட பிறகு படத்தை பார்த்தால் ஓரளவு புரியும்.
மலேசிய பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு புதிய நிலவியல் அனுபவத்தை வழங்குகிறது. இதற்கு ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும் தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார்கள். பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் முதல் பாதியில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலில் மட்டும் தன் முத்திரையை பதிக்கிறார்.
ஏஸ் - லேஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM