(நெவில் அன்தனி)
ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பை இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வைபவரீதியாக திங்கட்கிழமை (12) பிற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
குத்துச்சண்டையில் பிரபல்யம் பெற்ற கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், வியட்நாம், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீர, வீராங்கனைகள் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுகின்றனர்.
இப் போட்டியில் இலங்கை சார்பாக 33 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
ஆரம்பத்தில் 29 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றுவதாக இருந்தபோதிலும் 6 நாடுகள் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றுவிட்டதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
ஆரம்ப விழாவின்போது நங்கையர் விளக்குகளை கையில் ஏற்தியவாறு இருக்க பிரதம விருந்தினரும் விசேட விருந்தினர்களும் விளக்குகளை ஏற்றிவைத்தனர்.
இப் போட்டியில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகள் சார்பாக இலங்கை வீராங்கனை சச்சினி பெர்னாண்டோ சத்திய பிரமாணம் செய்தார்
உண்மையான வீரர்களுக்கு உரிய வகையில் நேர்மையாகவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
பங்குபற்றம் 23 நாடுகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
தமிழ் மொழிப் பாடல் ஒன்றுக்கான நங்கையரின் நடனத்துடன், பொலிஸாரின் தாள வாத்தியம் ஆகியவற்றுடன் ஆரம்ப விழா எளிமையாக நடைபெற்றது.
ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பை முன்னின்று நடத்துகின்ற இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் ஆசிய குத்துச்சண்டை கூட்டு சம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் வெகுவாக பாராட்டினார்.
சர்வதேச மட்டத்தில் மூன்றாம் தரப்பினரால் ஏற்பட்ட சிரமங்கள், தடைகளுக்கு மத்தியிலும் அவற்றை எல்லாம் தகர்த்து இப் போட்டியை நடத்துவது ஆசிய குத்துச்சண்டைக்கும் இலங்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என அவர் கூறினார்.
ஆரம்ப விழா வைபத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசு ஒன்றை ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் வழங்கினார்.
இதேவேளை, இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவர் டாக்டர் ஷானக்க அநுருத்த தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரின் விடாமுயற்சி, அர்ப்பணிப்புத்தன்மை ஆகியவற்றினாலேயே இலங்கையில் ஆசிய குத்துச்சண்டைப் போட்டி நடைபெறுவதாகவும் அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் எனவும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
57 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் ஆசிய உயர்மட்ட குத்துச் சண்டைப் போட்டி ஒன்று நடைபெறவதானால் இப் போட்டி முக்கியத்துவம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் இதுபோன்ற இன்னும் பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்தவும் விளையாட்டுத்துறை அமைச்சு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் எனக் கூறிய அமைச்சர், ஆசிய குத்துச்சண்டைப் போட்டிக்கு பாடாசலைகளைச் சேர்ந்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் வருகை தந்து அவற்றைக் கண்டுகளித்து தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இப் போட்டியை இலங்கையில் நடத்த அனுமதித்த ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவருக்கு தனது விசேட நன்றிகளை இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவர் டாக்டர் ஷானக்க அநுருத்த தெரிவித்தார்.
ஆரம்ப தினமான திங்கட்கிழமை (12) ஆறு கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அவற்றில் 3 போட்டிகள் முதல் சுற்றுடன் மத்தியஸ்தரினால் நிறுத்தப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதல் நாள் போட்டி முடிவுகள்
இளையோர் ஆண்கள்
54 கி.கி. எடைப் பிரிவு: இந்தோனேசியாவின் எந்தவாஜெப்பி ஜெக்லினை 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சவூதி அரேபியாவின் அல் முவல்லாத் மொஹம்மத் வெற்றிகொண்டார்.
54 கி.கி: கஸக்ஸ்தானின் முராத்துலி கென்ஸேயை 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கிர்கிஸ்தானின் கமிலோவ் ஸபார்பெக் வெற்றிகொண்டார்.
60 கி.கி: நேபாளத்தின் ச்சிரிங் வங்டியை கஸக்ஸ்தான் வீரர் கல்டிபயேவ் நூரிஸ்லாம் 2ஆவது சுற்றில் வெற்றிகொண்டார். மத்தியஸ்தரினால் இப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இளையோர் பெண்கள்
48 கி.கி: ஐக்கிய அரபு இராச்சியத்தின் அப்துல்லா ஜவாஹெரை முதல் சுற்றில் வியட்நாமின் என்கோ என்கொக் லின் ச்சி முதல் சுற்றில் வெற்றிகொண்டார். மத்தியஸ்தரினால் இப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது
50 கி.கி: சவூதி அரேபியாவின் அல் அம்ரி யாராவை கஸக்ஸ்தானின் துரப்பய் குல்னார் முதல் சுற்றில் வெற்றிகொண்டார். மத்தியஸ்தரினால் இப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது
52 கி.கி.: நேபாளத்தின் கலான் ரொஷ்னியை 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வியட்நாமின் தி கிம் என்கான் வெற்றிகொண்டார்.
இப் போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவரும் அரை இறுதிக்கு முன்னேறியிருப்பதால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளான நாளைய தினம் 11 கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் 5 இலங்கையர்கள் களம் இறங்கவுள்ளனர்.
டபிள்யூ. ஜீ. வர்ணகுலசூரிய (48 கி.கி.), ஐ. என். டி. தத்சர (51 கி.கி.), ஏ. டபிள்யூ. ஏ. ஜயதிஸ்ஸ (57 கி.கி.), ஆஸில் முராஜுதீன் (60 கி.கி.) ஆகியோர் இளையோர் பிரிவில் போட்டியிடவுள்ளனர். இந்த ஐவரும் கால் இறுதிகளில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு ஏதேனும் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM