ஃப்ரீடம்' படத்தில் மீண்டும் ஈழ ஏதிலியாக நடிக்கும் சசிகுமார்

Published By: Digital Desk 2

10 May, 2025 | 02:42 PM
image

உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும்' டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனான தர்ம தாஸ் ( சசிகுமார் ) வல்வெட்டிதுறையிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும் ஈழ ஏதிலியாக நடித்திருந்தார்.

இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இவர் 'ஃப்ரீடம்' எனும் திரைப்படத்திலும் ஈழ ஏதிலியாக நடித்திருக்கிறார் என்றும், இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் படமாளிகையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌

'கழுகு', 'சவாலே சமாளி', 'சிவப்பு', 'கழுகு 2', '1945 ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஃப்ரீடம்'. இதில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், போஸ் வெங்கட்,  மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த திரைப்படம் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் நபர்களின் உணர்வுகளை மையப்படுத்திய கதை. 

சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிப்பதன் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் கதை 1991 - 95 ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கிறது.

இந்த இதில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் ஆகிய இருவரும் ஈழ ஏதிலிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். அது என்ன என்பதுதான் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்'' என்றார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக  காத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' என தொடர்ந்து வணிக ரீதியான மற்றும் விமர்சன ரீதியிலான வெற்றியை பெற்றிருப்பதால் சசிகுமார் நடித்திருக்கும் 'ஃப்ரீடம்' படத்திற்கும் ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right