புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது.
முதலில் இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் கரும்புகை வெளியேறியுள்ளது. இதன் அர்த்தம் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதாகும்.
பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் திகதி உடல் நலக்குறைவால் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். அவரது திரு உடல் 26 ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 9 நாட்கள் வத்திக்கானில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நடைமுறைகளுக்குப்பின் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக உலகமெங்கிலும் இருந்து வாத்திக்கானில் குவிந்திருந்த கர்தினால்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால் மாநாடு (cardinal conclave) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கர்தினால்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை அடுத்த பாப்பரசராக தெரிவு செய்கிறார்கள்.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வத்திக்கான் சென் பீட்டர்ஸ் பேராலயத்தில் கர்தினால் காலேஜ் டீன் ஜியோவான்னி பாட்டிஸ்டா ரே தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் மேற்படி கர்தினால்கள் பங்கேற்று புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான ஞானம், புரிந்துணர்வு கேட்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் வாக்கெடுப்பில் இரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சிரேஷ்ட கர்தினால் ஒருவர் தியானம் வழங்கினார். அதைத்தொடர்ந்து சிற்றாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் பெறும் கர்தினால் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படுவார்.
அதேநேரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அந்த வாக்குச்சீட்டுகள் மற்றும் கர்தினால்கள் எழுதி வைத்திருக்கும் கடதாசிகள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்படும். இதன் மூலம் புதிய பாப்பரசர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை என வெளியுலகம் அறிந்து கொள்ளும்.
பின்னர் பெரும்பான்மை கிடைக்கும் வரை வாக்கெடுப்பு நடக்கும். இறுதியில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் நேற்று பாப்பரசரின் உத்தியோகபூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கர்தினால்களும் இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நேற்று நடந்த கூட்டத்தில், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.
ஓய்வு எடுக்கச் சென்ற கர்தினால்கள், இன்று 2வது முறையாக கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த பணி புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை தொடரும். பாப்பரசரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM