மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

29 Apr, 2025 | 09:17 PM
image

ப்பிரபஞ்சத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் எமக்கு, ஆளுமை மிக்க முன்னோடிகளால் கிடைக்கும் ஞானம் ஒரு கலங்கரை விளக்கமாகும். அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், சோதனைகள் மற்றும் வெற்றிகள் பல தலைமுறைகளைத் தாண்டிய விலைமதிப்பற்ற ஆற்றுகைகளாகும். அவர்களின் நெறியாள்கைகள் அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் கட்டாயம் அவற்றினை செவிசாய்க்க வேண்டியது சாலச் சிறந்ததாகும். அப்படியான ஆளுமை மிக்க முன்னோடிகளில் ஒருவரே, கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த வானலைகளில் ஒரு வழிப்போக்கனான பி.எச்.அப்துல் ஹமீத். 

இளமை துடிப்பும் முதிர்ச்சிப் பக்குவமும் இவருடனான செவ்வியினை எடுத்தாள வழிசமைத்தது. தற்போதுள்ள இளம் சமுதாயம் ஓர் அறிவுக் களஞ்சியமாக கருதும் பி.எச்.அப்துல் ஹமீத் அளித்த நேர்காணல் இனி வருமாறு:

கேள்வி : இதுதான் வானொலி என அறியாத, வானொலியையே பார்த்திராத, சிறுவன் இன்று வானலைகளில் தடம் பதித்த ஒரு வழிப்போக்கனாக தன்னை உருவாக்கிக்கொண்ட அதிசயம் பற்றி கூற முடியுமா?

பதில் : 'இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…' என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். ஆனாலும், இறையருளால் வந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவன் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தோடு, திறமைகளை இனங்கண்டு கைகொடுத்த, பரந்த மனம் கொண்ட மூத்தோரின் வழிகாட்டலும் ஒரு காரணம்.

கேள்வி : “I saw the sun, it was shining like a moon, through the mist” இப்படியான கவிதை போன்ற வரிகள் ஓர் ஒலிபரப்பாளரது கற்பனையில் உதித்தது எவ்வாறு?

பதில் : எனது நூலை வாசித்து, அதில் ஒல்லாந்து நாட்டுக்குச் சென்றபோது பயிற்சிப்பட்டறையில், அந்த நெதர்லாந்து நாட்டில் போய் இறங்கிய முதல் நாள் ஏற்பட்ட உணர்வை விவரிக்கும்படிக் கேட்டபோது, அந்த உணர்வை  நான் வெளிப்படுத்திப் பாராட்டுப் பெற்ற வரிகளைக் குறிப்பிட்டுத்தான், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். 

எழுத்தாளனோ ஒலிபரப்பாளனோ, தான் பயன்படுத்தும் சொற்களால் வாசகன் அல்லது நேயரின் உள்ளத்தில் காட்சிகளை உருவாக்கும் வித்தையைத் தெரிந்திருக்க வேண்டும். இளவயது முதலே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவன் என்பதாலும்,‘கதை சொல்லி’ (Story teller) எனும் கலை இயல்பாகவே எனக்குள் அமைந்ததாலும், அது சாத்தியமானது. 

கேள்வி : விசும்பு வெளியினிலே ஒரு ஊடகவியலாளனின் அனுபவங்களாக அமைந்த, தங்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற நூலைப் படைக்க முன்வந்த காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில் : ‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ பரிணாம வளர்ச்சியின் தத்துவம்  ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாவதைக் குறிக்கிறது. மனித நாகரிகமே, முன்னோடிகளின் அடிச்சுவட்டில் தான் தொடர்கிறது. ஒரு தலைமுறை சாதித்ததை விட அடுத்து வரும் தலைமுறை இன்னும் அதிகமாக சாதிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், மூத்த தலைமுறை விட்ட இடத்தில் இருந்துதான் புதிய தலைமுறை தன் பயணத்தை ஆரம்பிக்கும். எனவே, முந்தைய தலைமுறையின் அனுபவங்களை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். எனவேதான், இந்நூலை ஓர் ஆவணப்பதிவாக எழுதினேன்.

கேள்வி : “வாங்கோ கேப்டன் சாம்பசிவம்” என்று ஓர் இமயம் அழைத்த தருணம் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வைப் பற்றிக் கூற முடியுமா? 

பதில் : நமது வாழ்க்கைப் பயணத்தில், யார் யாரை எங்கெங்கு சந்திப்போம் என்பது, நாம் திட்டமிட்டு நடப்பதில்லை. அது இறைவன் வகுத்த விதியே. அறியாப் பருவத்தில் என்னுள் கலையுணர்வுகள் முகிழ்க்கக் காரணமான நடிப்புக் கலை மேதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். 

அவர்தான், அடியேன் தமிழைப் பிழையற,  உச்சரிக்கத் தோன்றாத் துணையாக விளங்கிய ஆசான். நானும் ஒலிபரப்பாளனாக வளர்ந்த பின் அவரை முதன் முறையாக சந்திக்கச் சென்றபோது, நமது வானொலியில் அடியேன் தயாரித்து நடித்த நாடகத் தொடரில் நான் ஏற்ற பாத்திரத்தின் பெயரால் விளித்தபோது எனக்குள் ஏற்பட்ட வியப்பின் அளவைச் சொல்லால் விளக்கவியலாது. அந்த இமயம் எனது குரலைக் கேட்கவும், தொடர்ந்து எனது நிகழ்ச்சிகளைக் கேட்டு என் மீது ஒரு விருப்பினை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு அமைந்தது, இறைவன் அளித்த வரமேயன்றி வேறு இல்லை. 

கேள்வி : இத்தனை வருடங்கள் கடந்தும் பிறமொழி கலப்பின்றிய அந்தத் தூய தமிழ் பின்பற்றலில் உள்ள இரகசியம் என்ன? 

பதில் : தாயை நேசிப்பது போல, தாய்மொழியை நேசிப்பதே முக்கிய காரணம். அதை விட, எந்த மொழியில் பேசுகிறோமோ, அந்த மொழியில் சிந்தித்துப் பேசினால் சிக்கலில்லை. தமிழில் பேசும்போது, நாம் சிந்திக்கும் மொழியும் தமிழாக இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் பேச வேண்டி வந்தால், ஆங்கிலத்தில் சிந்தித்துப் பேசவேண்டும். அப்போதுதான் தடையின்றி சரளமாகப் பேசலாம். மாறாக,‘தமிங்லிஷில்’ சிந்தித்தால் பிறமொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

கேள்வி : அப்துல் ஹமீத் அவர்களே! ஒரு பாடல் ஆசிரியராகத் “தெனாலி” திரைப்படப் பாடலில், ஒரு மாயாஜாலம் செய்திருப்பீர்கள் “பனையில பழம் பறிச்சு…”, “பிட்டு குழலுக்கு தேங்காய் பூவபோல..”  போன்ற வரிகள் எவ்வாறு தோன்றின என்று விளக்கம் தருவீர்களா? 

பதில் : ஒலிபரப்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே அடிக்கடி ஒலிப்பதிவுகளுக்காக இலங்கையின் பல பகுதிகளுக்கும் செல்லும்போதெல்லாம், அங்குள்ள வட்டாரப் பேச்சு வழக்குகளை மட்டுமல்ல, பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளையும், கண்டு கேட்டு, கிரகித்தவன் நான். கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனையில் ஆரம்பித்து பொத்துவில் வரை, ஒரே மொழியைப் பேசினலும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் சமூகங்கள் வாழும் பகுதிகள், ஒன்றை அடுத்து ஒன்றாக அமைந்துள்ள நில அமைப்பினை, பிட்டுக் குழலுக்குள் கொஞ்சம் அரிசி மா, அடுத்துக் கொஞ்சம் தேங்காயப் பூ, பின் மீண்டும் அரிசி மா, பின் மீண்டும் தேங்காய்ப்பூ போட்டு அவிப்பதற்கு ஒப்பிடுவார்கள். அதனை நினைவில் கொண்டு அவ்வாறு எழுதினேன். பனம்பழத்தின் விதையைக் கொண்டு தென்னை மரம் வளர்க்க முடியுமா? என அத்திரைப்படத்தின் கதையில் ஒரு இனிய தமிழகக் குடும்பத்தில் இணைய ஆசைப்படும் ஈழத்து இளைஞனைப் புறக்கணிக்கும் மற்றுமொரு பாத்திரத்தின் மன வெளிப்பாடாக அந்த வரியை எழுதினேன்.

கேள்வி: அடுத்து வரும் தலைமுறை, தமிழ் மொழி அடையாளத்தைத் தொலைப்பதற்கு ஊடகங்களும் ஒரு காரணம் என நீங்கள் பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தக் கருத்தைக் கொஞ்சம் விரிவாக அறிய முடியுமா?

பதில்: ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை’ என ஐயன் வள்ளுவனாரே மேம்படுத்திய நமது செவிப்புலனூடாகத்தான், ஒரு ‘மொழி’ நமக்குள் கிரகிக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த அதிசயம் நடந்து வருகிறது.

எனவே ஒலி ஊடகமோ, ஏன் காட்சி ஊடகத்திலும் கூட ஒலிவடிவாகவே, நம் செவிகளில் ஒலிக்கும் மொழி, நாளுக்கு நாள் சிதைவடைந்து கேட்கும்போது, அதன் தாக்கம் எதிர்காலத்தில் இம் மொழியின் செம்மையைப் பாதித்து, காலப்போக்கில் மொழி அழிந்து போவதற்கும் காரணியாகிறது. என்னுடைய ஊடக வாழ்க்கைப் பயணத்தில், 1995ம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவின் ‘பெனின்’ நாட்டில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தேன். அக்கருத்தரங்கின் தொனிப்பொருள் ‘Relevance ofmedia for adolescents’ அதாவது விடலைப் பருவத்தினரின் சிந்தனைகளை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு எனப் பொருள் படும்.  நம் எதிர்கால சந்ததியை விழுமியப் பண்புகளோடு வளர்க்கும் பெரும் பொறுப்புள்ள ஊடகங்கள், நம் தாய்மொழியைக் காத்து வளர்ப்பதிலும், பெரும் பங்கு வகிக்க வேண்டும். மாறாக வர்த்தக நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டு நம் தாய்மொழி சிதைந்து அழிந்துபோகத் துணை போகக் கூடாது என்பதே எனது ஆதங்கம்.

கேள்வி : ஒரு ஒலிபரப்பாளர், அட்டாவதானியாக இருக்க வேண்டும் என்ற உங்களது கருத்தும், தற்காலத்தில் அதன் முக்கித்துவம் பற்றியும் கூற முடியுமா ?

பதில்: நம் நாட்டிலே சதாவதானிகள் கூட, வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் (செய்குத் தம்பிப் பாவலர் மற்றும் நா.கதிரைவேற் பிள்ளை)நம்மைச் சுற்றி நடப்பவற்றை நாம் அவதானிக்க வேண்டும் என்ற நிலை மாறி, உலகம் முழுவதிலும் நடப்பவற்றை உடனுக்குடன் உள்ளங்கையில் இருக்கும் கருவியின் மூலம் அறிந்துகொள்ளும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊடகவியலாளர்களான நமது தேடல் வேட்கைதான், நேயர்களுக்குப் பயனுள்ள தகவல்களாய்ப் போய்ச்சேரும்.ஆனால் அந்தத் தேவை, இன்றைய தலைமுறையின் (குறிப்பாக தமிழ் ஊடகத்துறையில் இயங்கும் இளைய தலைமுறையின்) உள்ளத்துள் உந்து சக்தியாய் உருவாகமல், தென்னிந்திய சினிமா, அவர்களது சிந்தனைகளை ஆக்கிரமித்து மழுங்கடித்து வருகின்றது. இட்டு நிரப்ப, இருக்கவே இருக்கின்றன இலவசமாகக் கிடைக்கும் திரையிசைப் பாடல்கள், காட்சிகள், சினிமா கிசு கிசுச் செய்திகள் என்ற அவலை நிலைதான், இதற்குக் காரணம். இந்த நிலை சிங்கள மொழியிலான ஊடகங்களில் இல்லை. 

கேள்வி: உங்களுடைய நேர்முக வர்ணனை என்பது ஒரு வகுப்பறை பாடமாக இருந்தது இப்போதைய நேர்முக வர்ணனையும் அதன் முன்தயார் நிலையையும் நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள் ?

பதில்: மன்னிக்கவும். இப்போது நேர்முக வர்ணனை என்ற ஒன்று நம் நாட்டிலே தமிழில் இருக்கின்றதா? என நான் அறியேன். ஏற்கனவே நான் தெரிவித்தது போன்று நாம் பயன்படுத்தும் சொற்களால் கேட்பவரது உள்ளங்களில் அந்தக் காட்சியை உருவகிக்க வைக்கும் தேவை, முன்பு இருந்தது. காரணம் அப்போது தொலைக் காட்சிகள் இல்லாத காலம். எனவே காட்சியை விவரிக்கும் அதே வேளையில் ஏராளமான தகவல்களையும் தேடி அறிந்து நேர்முக வர்ணனையில் தெரிவிக்கவேண்டியிருந்தது. தற்போது தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில், காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் வசதியிருப்பதால், தகவல்களே முக்கியத்தவம் பெறவேண்டும். சிறிது காலத்துக்கு முன்பு வரை மிக அரிதாகவேனும் கிரிக்கெற், போட்டிகளின்போது தமிழில்? நேர்முக வர்ணனை இடம்பெற்று வந்தது. இப்போது எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

கேள்வி: “தமிழனுக்கு முதலில் தாய்மொழி தெரியவேண்டும் அதைப்போல தமிழன்  பன்மொழிப் புலமை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்” என்ற உங்கள் கருத்து ஒரு ஊடகவியலாளருக்கு எவ்வாறு பொருந்தக் கூடியதாக இருக்கும் ? 

பதில்: ‘தமிழ்ப் பற்று’ என்பதன் பொருள் பிற மொழிகளை வெறுக்க வேண்டும் என்பதல்ல. குறிப்பாக, தமிழ் ஊடவிலாளர்கள் பன்மொழிப் புலமை கொண்டவர்களாக இருந்தால்தான் உலக அறிவை தேடிப் பெற்று, நமது மக்களிடையே பகிரமுடியும். 

கேள்வி: ஊடகம் தற்கால சந்ததியினரை வேறு திசை நோக்கி திருப்புகின்றது இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று நன்னூல் கூறுகிறது. புதியன புகுந்தாலும் ஆழமாக விதைக்கப்பட்டவை தான் நின்று நிலைக்கும். மற்றவை ஆடிக்காற்றில் அள்ளுண்டு போவதுடன் மறைந்து, மறந்தும் போய்விடும்.

கேள்வி: தமிழ் காப்பாளனாக அப்துல் ஹமீதின் அறிவுரை என்ன ? 

பதில்: ‘யுனெஸ்கோ’ அறிக்கையின் படி, உலகில் பலநூறு மொழிகள் வழக்கொழிந்து அழிந்து போயின, சில தேய்ந்தொழிந்து வருகின்றன. நிலைத்திருக்கும் பிற மொழிகள் அனைத்தும் காலம் மாறும் போது,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப கல்வித்துறையில், முக்கிமாக உயர்கல்வித் துறையில் தமது மொழியையும் வளர்த்து வந்திருக்கிறார்கள், சீனம்,ஆங்கிலம்,ரஷ்ய,பிரெஞ்சு, மொழிகளில் மட்டுமல்ல, மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில், டச், டொச், நொஸ்க், சுவீடிஷ் மொழிகளில், மருத்துவ,பொறியியல்,சட்டம், கணிணித்துறை என்று தங்களது மொழிகளில் கற்கின்றார்கள், ஏன் சமீபத்தில் நான் சென்று வந்த வியட்நாம் நாட்டில் கூட, ஆங்கில மொழியின் தேவையே இன்றி தமது மொழியிலேயே அனைத்துத் துறைகளையும் கற்று முன்னேறுகிறார்கள். இந்த மொழிகளுக் கெல்லாம் மூத்தமொழி என்று பழம்பெருமை பேசும் நம் தமிழ் மொழி மட்டும், தேங்கிக் கிடக்கிறது. தமிழிலும் மருத்துவ, பொறியில் போன்ற உயர்கல்வி கற்கும் காலம் என்று உருவாகுமோ அன்றுதான் தமிழர்களும் தலை நிமிர்ந்து வாழமுடியும். 171 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு, ஒரு அமெரிக்கன் மருத்துவ மிஷனரி வைத்தியரான Samuel Fisk Green என்பவர், இங்கு வந்து தமிழ் கற்று, மருத்துக் கல்விக்கான ஆதார நூல்களை 1854ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்க்க ஆரம்பித்து 60க்கும் மேற்பட்ட தமிழ் மருத்துவர்களுக்குத் தமிழிலேயே பயிற்சியளித்ததற்குச் சான்றாக, மாணிப்பாயிலே அவர் உருவாக்கிய முதலாவது மருத்துவக் கல்லூரியான Green Memorial Hospital இன்றும் உள்ளது. நாம்தான் அவர் தமிழில் மொழிபெயர்த்த அடிப்படை மருத்துவ நூல்களைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டோம். 

கேள்வி: செம்மொழிச் செல்வன் அவர்களே, நீங்கள் பல நேர்காணலை செய்திருப்பீர்கள். இவ்வாறான நேர்காணல்களுக்கு பின்னால் உள்ள தயார்நிலை எப்படியானது? 

பதில்:  ஒரு நேர்காணலை காணச் செல்லும் முன், நேர்காணல் தொடர்பான ‘தேடல்’ மிக முக்கியம். அனைத்துத் தகவல்களையும் தேடிச் சேகரித்து நினைவில் கொண்டாலும், நேர்காணல் செய்யும்போது அதிகப் பிரசங்கியாக உங்களை முன்நிலைப்படுத்த முயற்சிக்காமல்,நேயர்கள் என்ன அறிய விரும்புவார்கள் எனச் சிந்தித்து அவர்கள் பக்கம் இருந்து கேள்விகளைக் கேட்கவேண்டும். மிக முக்கியமாக நாம் கேட்கப்போகும் கேள்விகளில் மட்டுமே அவதானமாக இராமல் நாம் சந்திப்பவர், என்ன பதில் சொல்கிறார் என்பதைக் கவனமாகக் கேட்டு முடிந்த வரை அந்தப் பதிலின் தொடர்ச்சியாக அடுத்த கேள்வியை அமைக்க வேண்டும்.

கேள்வி : எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயினும் “பாட்டுக்குப் பாட்டு” போன்ற நிகழ்ச்சிகள் இன்னமும் பேசுபொருளான நிகழ்ச்சிகளாக இருப்பதற்கு காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:  அப்துல் ஹமீத் என்றால் பாட்டுக்குப் பாட்டு என நுனிப்புல் மேய்பவர்கள் அடையாளப்படுத்துவதில் எனக்கும் மனக்குறை உண்டு. பெரும் அறிஞர்கள் கூடக் கார்டூன் எனும் கேலிச்சித்திரங்களைப் பார்த்துக் குதூகலிப்பார்கள். நண்பர்களோடு சுற்றுலாப் பயணம் செல்லும் வேளைகளில் பாடத்தெரியாதவர்களும் கூட பாடிக்களிப்பார்கள் அதனைப் போல ஒரு வேடிக்கை விநோத நிகழ்ச்சியாகவே இதனை அறிமுகப்படுத்தினேன், அது தசாப்தங்களைக் கடந்து மக்கள் அபிமானம் பெறும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. வெகுசன ஊடகங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்பதுவும் உண்மை தான். புதிய திறமைகள் அறிமுகமாவதற்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒரு ஆரம்பப் படியாக அமைந்ததுவும் ஒரு காரணம். 

கேள்வி: சிவாஜி கணேசனுடைய நேர்காணலின் போது அவர் தன்னை உங்களது ரசிகன் என்று  சொல்ல, ஒலிபரப்பின்போது உங்களை முன்னிலைப்படுத்தும் அப்பகுதியை நீக்கிவிட எண்ணிய உங்களின் சுய கட்டுப்பாடும், நிலையத்தின் மேல் உள்ள பற்றும் எவ்வாறு உருவானது என்று கூறுங்கள்? 

பதில்: அந்த நாளிலே, எமக்கு முன்பு இருந்தவர்களும் கூட, கடைப்பிடித்து வந்த விழுமியப் பண்பு அது. அந்த வழிமுறையை, நாமும் பின்பற்றி வந்தோம்.

கேள்வி: மீனவ நண்பன், கிராமத்தின் இதயம் போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளைச்  செய்யவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவானது? 

பதில்:  வர்த்தக ஒலிபரப்பு 1950ம் ஆண்டு ஆரம்பமானது. பெரும்பாலும் திரையிசைப்பாடல்களை மட்டுமே நம்பியிருந்த அந்த சேவையில் 17ஆண்டுகளுக்குப்பின் எம்மைப் போன்ற இளைய தலைமுறை வந்த பிறகு முழுக்க முழுக்க திரையிசையை மட்டும் நம்பியிராமல் வித்தியாசமான நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பும், நான்கு சுவர்களைக் கொண்ட ஒரு கலையகத்தை விட்டு வெளியே சென்று நேயர்களோடு உரையாடி அவர்களோடு இணந்து நிகழ்ச்சிகளைப் படைக்க வேண்டும் என்ற வேட்கையும்தான் காரணம். 

கேள்வி: “விளம்பரமாக இருந்தாலும் கூட வரும் தலைமுறைக்கு தமிழை எப்படி உச்சரிப்பது என்று கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்ற பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும்” இன்னும் இந்நிலை இருக்கின்றதா? அதன் அவசியம் என்ன?

பதில்: இந்தப் பொறுப்புணர்வு இன்றும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையை நீங்கள் தான் சொல்லவேண்டும். ஒலி ஊடகத்துக்கு இருக்கவேண்டிய அக்கறையைப் பற்றி, உங்களது 7வது கேள்விக்கு அடியேன் தந்த பதிலிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

கேள்வி: ஒலி,ஒளி ஊடகங்களில் உங்களுக்கு மன நிறைவினைத் தருவது எது? 

பதில்: இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கும்போது நான் கேட்பதுண்டு. நீங்கள் வானொலியில் பேசும்போது  எவ்வளவு பேர் உங்களது குரலைக் கேட்பதாக கற்பனை செய்வீர்கள்? என்று. அவர்கள் ஆயிரம் பத்தாயிரம் லட்சம் என்றெல்லாம் சொல்வார்கள். இல்லவே இல்லை ஒரே ஒரு நண்பரோடு உரையாடுவதாக கற்பனை செய்யுங்கள் அப்போதுதான் ஆத்மார்த்தமான நெருக்கம் ஏற்படும் என்று சொல்வேன். முகமறியா நேயர்களோடு உரையாடும்போது  ஏற்படும் ஆத்மார்த்த உறவு தரும் உணர்வுக்கு ஈடு இல்லை.

கேள்வி: புகழின் உச்சம் தொட்ட உங்களுக்கு எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்கும். அவற்றையெல்லாம் தாங்கி எவ்வாறு ஜெயித்து முன்னேறினீர்கள்?

பதில்:  புகழுக்கு ஒரு விலை உண்டு. சில வலிகளையும் தாங்கியே ஆகவேண்டும் என உள்ளத்தினை உறுதி செய்துகொள்வேன்.

கேள்வி: ஊடகத்துறையில் இவ்வளவு கற்றுத் தேர்ந்தும் கூட  இன்னும் உங்களை ஒரு மாணவனாக எண்ணுவதற்கு காரணம் என்ன? 

பதில்: கல்விக்குக் கரையில்லை என்பது மூத்தோர் வாக்கு. இன்னும் கற்க வேண்டிய ஒரு மாணவனாக எண்ணும்போது தினந்தோறும் நம்மை புதுப்பித்துக்கொள்ளும் உத்வேகம் கிடுக்கும்.

கேள்வி: யார் இந்த இறை தாசன்? ஏன் அவதரித்தார்? 

பதில்: மெட்டுக்குப் பாட்டு என்ற தேவை வந்தபோது, புனைபெயரில் ஒளிந்துகொண்டு எழுதியதில் ஒரு சுகம் கிடைத்தது.

கேள்வி: என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் ஒரு நல்ல அவதானிப்பாளர் என எண்ணுகிறேன். அன்னப் பட்சி போல் அல்லன களைந்து நல்லன மட்டும் பெற்றுக்கொள்ளும் இந்த ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவானது?

பதில்: புத்தகங்களைப் படித்ததை விட மனிதர்களைப் படித்ததின் மூலம் தான் அறிவினை வளப்படுத்திக் கொண்டேன். ஒவ்வொருவரிடமும் குறைகளை ஆராயாமல் நிறைகளைக் கண்டதால், என் வாழ்வினைச் செப்பனிட்டு முன்னேறக் கூடியதாகவிருந்தது. எந்தத் தீமைக்குள்ளும் சில நன்மைகள் உண்டு என்று இளமைக் காலத்திலிருந்தே எனக்குள் தெளிவான பார்வை இருந்ததால் மனதில் அழுக்குகள் சேராமல் என்னைக் காத்துக்கொள்ளவும் முன்னேறவும்  முடிந்தது.

கேள்வி: இன்று ஊடகத்துறையும் ஊடகத்துறை மாணவர்களும் பெருகி வருகின்றார்கள்.  அவர்களுக்கு உங்களுடைய கருத்தாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்: ‘மூன்று குரங்குகள் தத்துவம்’ என்றாலே நம் நினைவுக்கு வருவது கண், காது, வாய் பொத்தி அமர்ந்திருக்கும் அந்த மூன்று குரங்குகள்தான். ஆனால் ஊடகத்துறைக்குள் வரவிரும்புவோருக்கு நான் சொல்ல விரும்புவது - நல்லதையே பாருங்கள், நல்லதையே கேளுங்கள், நல்லதையே பேசுங்கள்.

கேள்வி: சானா அவரிடம் நீங்கள் வானொலி நாடகம் குறித்து கற்றுக்கொண்டவை எவை?

பதில்: அவரது தயாரிப்பில் நான் பங்கெடுத்த வானொலி நாடகங்கள் அனைத்துமே நேரடி ஒலிபரப்பு. எனவே முதல் நாளே ஒத்திகை பார்க்கப்படும். துல்லியமாகத் திட்டமிட்டு, அரை மணி நேரத்துக்குள் அடங்கக்கூடியதாக நேரத்தைக் கணித்து, சப்தஜாலங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்க பொருத்தமான இசைப் பகுதிகளைத் தெரிவு செய்து, கேட்பவர் அனைவரும் மனக்கண்ணால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வைப் பெற அவர் கையாண்ட உத்திகள் அனைத்தும், பின்னாளில் நானும் வானொலி நாடகங்கள் தயாரிக்கும்போது அடிப்படை வழிகாட்டல்களாகப் பயன்பட்டன. 

கேள்வி: உங்களின் வானொலி நாடகங்களில் நீங்கள் கையாண்ட பரீட்சார்த்த முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்? 

பதில்: ஒரு ரயில் பயணத்தின்போது நடைபெறும் கதைச் சூழலில் அமைந்த நாடகத்தைத் தயாரிக்க, கலைஞர்களை ரயிலேயே அழைத்துச் சென்று, தண்டவாளத்தில் ரயில் ஓடும் ஓசை மற்றும் பிரயாணிகளின் பேச்சுக்குரல் என இயற்கையான ஒலிகளின் பின்னணிகளின் மத்தியில், கலைஞர்களின் கைகளில் பிரதிகளைக் கொடுத்துப் பேசவைத்து, ஒலிப்பதிவு செய்து, தயாரித்த ‘சக்கரங்கள்’நாடகம்.  மற்றும் 21 வாரங்கள் ஒலிபரப்பான ‘அனிச்ச மலர்’ தொடர் நாடகத்துக்காக, தென்னிந்தியா சென்று பத்மஸ்ரீ ஜெமினி கணேஷ்,ஸ்ரீவித்யா, ஐ.எஸ்.ஆர் போன்றவர்களின் குரல்களைத் தனித்தனியாகப் பதிவு செய்து, பின் இலங்கை வந்து நமது கலைஞர்களின் பங்களிப்பினையும் பதிவு செய்து இலங்கைக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் சந்திக்காமலேயே நடிக்க அவற்றைத் தொகுத்து அடியேனால் தயாரிக்கப்பட்ட நாடகத்தொடர், 21 வாரங்கள் ஒலிபரப்பானது. இவ்வாறு இன்னும் சிலவுண்டு.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ விருதுகளை பெற்றுள்ளீர்கள். நீங்கள் பெரிதாக எண்ணுகின்ற விருது என்ன? 

பதில்: எத்தனையோ உண்டு. சமீபத்தில் என்றால்… கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கடல் கடந்த தமிழகத்திலே, சென்னை, காமராஜர் அரங்கிலே, இசையரசி சுசிலா, கவிப்பேரரசர் வைரமுத்து ஆகியோரோடு அடியேனுக்கும் ‘நூற்றாண்டின் குரல்’  விருது வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம். 

கேள்வி: அப்துல் ஹமீத் அவர்களே உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதேனும் உள்ளதா? 

பதில் : World space வலையமைப்பினூடாக, உலகமெங்கும் ஒலிக்கக்கூடிய, உலகத் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் ‘உலகத் தமிழோசை’ வானொலியை ஆரம்பிக்க வேண்டுமென்று 30 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டேன். இன்று வரை கனவாகவே உள்ளது.

நேர்காணல் : செல்வகுமார் ரினோஷன்  

உதவி விரிவுரையாளர், 

ஊடகக்கற்கைகள் துறை, 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06
news-image

வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக ...

2025-04-22 13:58:25
news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08
news-image

கம்பளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பங்குனித் திங்கள்...

2025-04-06 12:33:39
news-image

பங்குனி உத்தரத்திருநாளின் தெய்வீக சிறப்புகள்...!

2025-04-04 10:18:30
news-image

ஹப்புகஸ்தென்ன அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-29 14:32:37
news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54