டி.பி.எஸ் ஜெயராஜ்
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை (எஸ். ஜே.வி.) செல்வநாயகத்தின் 48 வது நினைவுதினம் ஏப்ரில் 26 ஆம் திகதி வந்துபோனது. தந்தை செல்வா என்று அறியப்பட்ட செல்வநாயகம் இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பரில் வேறு தலைவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் பிரதான அரசியல் கடசி என்று கருதப்படும் தமிழரசு கட்சி தற்போது அதன் வைரவிழாவைக் கண்டிருக்கிறது.
செல்வநாயகம் சிங்கள பெரும்பான்மையின மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழ் அரசியல் எதிர்ப்பியக்கத்தை பல வருடங்களாக முன்னெடுத்தார். அவர் தனது அரசியல் அணுகுமுறையில் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார். தமிழரசு கட்சி ஒருபுறத்தில், பல்வேறு அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, மறுபுறத்தில் சந்தர்ப்பம் வாய்க்கின்ற வேளைகளில் எல்லாம் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.
பண்டா - செல்வா ஒப்பந்தம் என்று பொதுவாக அறியப்பட்ட இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினால் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் ஒன்று. அது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில் அன்றைய பிரதமர் சொலமன் வெஸ்ற் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்.
பாரிய ஆற்றலைக் கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. அதன் ஆயுள் மிகவும் குறுகியதாகவே இருந்தது. இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் பண்டா - செல்வா ஒப்பந்தம் 68 வருடங்களுக்கு முன்னர் ஏன், எவ்வாறே கைச்சாத்திடப்பட்டது என்பதில் கவனம் செலுத்துகிறது.
ஆழமான துருவமயம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1956 பொதுத்தேர்தல் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் ஆழமான துருவமயமாதலை கொண்டுவந்தது. எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ( மஹாஜன எக்சத் பெரமுன ) என்ற கூட்டணி சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கையின் ஏழு மாகாணங்களிலும் பெருவெற்றி பெற்றது. சமஷ்டி கட்சி என்றும் அழைக்கப்படுகின்ற தமிழரசு கட்சி வடமாகாணத்தில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களையும் கைப்பற்றியது.
சிங்களத்தை மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக்கியது புதிய அரசாங்கம் முதல் செய்த காரியங்களில் ஒன்று. அதை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய சத்தியாக்கிரகிகளை குண்டர்கள் கொடூரமாகத் தாக்கியபோது அதை தடுக்காமல் பொலிசார் பார்த்துக்கொண்டு நின்றனர். நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை மூண்டது. ஜூன் 15 தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் 56 -- 29 வாக்குகளால் நிறைவேறியது.
தமிழரசு கட்சி அதன் மகாநாட்டை திருகோணமலையில் 1956 ஆகஸ்ட் 17 -- 19 நடத்தியபோது நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. அந்த மகாநாட்டில் பின்வரும் நான்கு அடிப்படைக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1) சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான இலங்கைக்குள் மொழிவழியான சுயாட்சி கொண்ட தமிழ் மாநிலம் அல்லது மாநிலங்களை நிறுவுதல்.
2) நாட்டின் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்துடன் சமத்துவமானதாக தமிழ் மொழிக்கு உரித்தான அந்தஸ்தை நிலைநாட்டுதல்.
3) தற்போதைய குடியுரிமைச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலமாக பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் மீளப்பெறுதல் ;
4) பாரம்பரியமாக தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றும் சகல கொள்கைகளையும் உடனடியாக இல்லாமல் செய்தல்.
இந்த கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு வருடகால அவகாசத்தை வழங்குவது என்று மகாநாட்டு தீர்மானத்தில் கூறப்பட்டது. அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் ' நேரடி நடவடிக்கையாக ' அகிம்சைவழிப் போராட்ட இயக்கத்தை தமிழரசு கட்சி ஆரம்பிக்கவிருந்தது. 1957 ஆகஸ்ட் 20 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.
வாகன இலக்கத் தகடுகளில் 'சிங்கள ஸ்ரீ ' எழுத்து தொடர்பான சர்ச்சையுடன் 1957 ஆம் ஆண்டு பிறந்தது. நாட்டின் சிலோன் (CEYLON ) என்ற பெயரில் இருந்து ஆங்கில எழுத்துக்களை ( CE, CL, CN,EY, EN ) வாகன இலக்கத் தகடுகளில் பயன்படுத்துவதே முன்னைய நடைமுறையாக இருந்தது. புதிய அரசாங்கம் வாகன இலக்கங்கள் சிங்கள ஸ்ரீ யுடன் தொடங்க வேண்டும் என்று விரும்பியது. அதை சிங்களத் திணிப்பின் ஒரு வடிவம் என்று ஆட்சேபித்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் ஸ்ரீ எழுத்தும் இடம்பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழ் எழுத்துக்களில் ஸ்ரீ கிடையாது. தமிழில் பயன்படுத்தப்படும் ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது.
ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்
தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கில் ஜனவரி 16 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்கியது. இலக்கத் தகடுகளில் தமிழ் எழுத்துக்களுடன் வாகனங்கள் ஓடத் தொடங்கின. சிங்கள ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஸ்ரீ யினால் பதிலீடு செய்யப்பட்டது. இலங்கையின் சதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை தமிழரசு கட்சி கரிநாளாக அனுஷ்டித்தது. ஹர்த்தால் வடக்கு, கிழக்கில் வழமை வாழ்வை ஸ்தம்பிக்க வைத்தது. திருகோணமலையில் மணிக்கூண்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி ஒன்றைக் கட்டுவதற்கு ஏறிய நடராஜா என்ற தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களுக்கு எதிர்ப்போராட்டம் ஒன்று சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களில் தொடங்கியது. வீதிச் சமிக்ஞைகளிலும் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் எழுத்துக்களுக்கு தார் பூசப்பட்டது. சிறிய அளவிலான இனமுறுகல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றன. 'உத்தியோகபூர்வ' நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்யும் அரசாங்க அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் பகிஷ்கரிக்குமாறும் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அமைச்சர்கள் வருகைதரவிருந்த இடங்களில் சத்தியாக்கிரகிகள் குழுமிநின்று அவர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தனர்.
இனப்பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் , நாடு பெரும் இரத்தக்களரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது போன்று தோன்றியது. இலங்கையின் சகல பிரதமர்கள் மத்தியிலும் மிகுந்த புத்திஜீவி என்று கூறக்கூடிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி. நிலைவரத்தைக் கட்டுப்படுத்தி மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டார்.
தமிழ் மக்களின் மெய்யான மனக்குறைகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொணடார். 1926 ஆம் ஆண்டில் சமஷ்டி முறையை ஆதரித்த பண்டாரநாயக்கவுக்கு பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வே ஒரே தீர்வு என்று தெரிந்தது. பிராந்திய சபைகளை (Regional Councils ) அமைப்பதன் மூலமாக விரிவான அதிகாரப் பன்முகப்படுத்தலுக்கான யோசனையை அவர் முன்வைத்தார்.
பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் ஒரு விளைவாக பிராந்திய சபைகள் திட்டம் பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றே பரவலாக நம்பப்படுகிறது. உண்மையில், பிராந்திய சபைகளுக்கான சட்ட நகல் வரைவு ஒன்று 1957 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம் பிறகு ஜூலையிலேயே வந்தது. பிராந்திய சபைகள் சட்டமூலத்தை சமர்ப்பித்த பிறகு தமிழ்த் தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒன்றுக்கு வந்து அதை மேலும் மாற்றியமைக்க எஸ். டபிள்யூ. ஆர்.டி. விரும்பினார்.
சந்திப்புக்கான யோசனை
அதேவேளை, தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20 ஆரம்பிப்பதற்கு திடடமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட ' இயக்கத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கென்று 25,000 தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டனர். தமிழர்களின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க ஒரு இலட்சம் தொண்டர்களை அணிதிரட்டும் முயற்சி ஒன்றை சில சிங்களத் தலைவர்கள் தொடங்கினர். பெரிய பலப்பரீட்சை ஒன்று மூளுவதை தடுக்கமுடியாமல் போகலாம் என்று தோன்றியது. அப்போதுதான் நிதான புத்தி வந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.க்கும் எஸ்.ஜே.வி.க்கும் இடையில் சந்திப்புக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. அது பிரதமரின் சொந்த முயற்சியாகவே முன்னெடுக்கப்பட்டது.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இரு தமிழ் வழக்கறிஞர்களான பி. நவரத்தினராஜா கியூ.சி.யும் ஏ.சி. நடராஜாவும் ஏற்பாடு செய்தனர். நவரத்தினராஜா எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யினதும் எஸ்.ஜே.வி.யினதும் ஒரு தனிப்பட்ட நண்பர். நடராஜா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு துணைத் தலைவர். இந்த பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்துவதில் அரசாங்கத் தரப்பில் இருந்து அன்றைய நிதியமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மிகவும் மெச்சத்தக்க ஒரு பாத்திரத்தை வகித்தார்.
முதலாவது சந்திப்பு
முதலாவது சந்திப்பு ஹொரகொல்லையில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் 1957 ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. தானாகவே செல்வநாயகத்தின் காருக்கு அண்மையாக வந்து அவர் அதிலிருந்து இறங்கிவர உதவினார்.
இருவருமே அன்றைய நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை புரிந்துகொண்டனர் போன்று தெரிந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவும் ஸ்ரான்லி டி சொய்சாவும் தமிழரசு கட்சி தரப்பில் இருந்து எஸ். ஜே.வி. செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், என்.ஆர். இராஜவரோதயம், வீ.ஏ கந்தையா, ஈ.எம்.வி. நாகநாதன், வி. நவரத்தினம் ஆகியோரும் மத்தியஸ்தராக நவரத்தினராஜாவும் பங்கேற்றனர்.
முதலாவது சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் இடம்பெற்றது. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக நடைமுறையில் வருவதற்கு பல வருடங்கள் செல்லும் என்று கூறியதன் மூலம் தமிழர்களின் அச்சத்தை தணிக்க எஸ்.டபிள்யூ. ஆர்.டி. முயற்சித்தார். பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டை தமிழரசு கட்சி வரவேற்றது என்ற போதிலும், தமிழ் மொழியின் அந்தஸ்து தொடர்பில் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அதை் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. ஒத்துக்கொண்டார்.
அதிகாரப்பகிர்வு விடயம் பரிசீலனைக்கு வந்தபோது சமஷ்டி அரசு ஒன்றுக்கான அதன் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைத்தது. சமஷ்டி முறையே சிறந்த தீர்வு என்று எஸ்.டபிள்யூ. ஆர்.டி. 1926 ஆம் ஆண்டில் முன்வைத்த கருத்தே சமஷ்டிக் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைப்பதற்கு உந்துதலாக இருந்தது என்று அதன் தலைவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால், தான் சமஷ்டி முறைக்காக அன்று குரல்கொடுத்த போதிலும் பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டதாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி பதிலளித்தார்.
தவிரவும், சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆணை தனக்கு கிடையாது என்றும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. கூறினார். தமிழர்களின் மனக்குறைகளுக்கு பரிகாரம் காண்பதற்கும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் சமஷ்டி முறைக்கு குறைவான ஒரு மாற்றுத் தீர்வு குறித்து தமிழரசு கட்சியினால் சிந்திக்க முடியாதா என்று அவர் கேட்டார். பிரதமரின் நிலைமையை புரிந்துகொண்ட தமிழரசு கட்சி சமஷ்டித் தீர்வொன்றை வலியுறுத்தாமல் இருப்பதற்கு இணங்கிக் கொண்டது.
சமஷ்டிச் சுயாட்சி ' ( Federal autonomy ) இல்லாமல் ' பெருமளவு பன்முகப்படுத்தலை ' (Massive decentralisation ) விதந்துரைக்கும் மாற்று யோசனைகளை தமிழரசு கட்சி முன்வைக்க வேண்டும் என்று அப்போது பிரதமர் யோசனை கூறினார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் அதற்கு இணங்கியவாறு அந்த சந்திப்பை முடித்துக் கொண்டனர்.
சட்டக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரிட்டோ முத்துநாயகத்துடனும் செல்வநாயகத்தின் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சனுடனும் தமிழரசு கட்சி ஆலோசனை நடத்தியது. அப்போது பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த வில்சன் பிறகு பேராதனை மற்றும் கனடாவின் நியூ புரூன்ஸ்விக் பல்கலைக் கழகங்களின் அரசியல் விஞ்ஞான பீடங்களின் தலைவராக பதவி வகித்தார்.
வட அயர்லாந்து
இலங்கை பின்பற்றுவதற்கு பிரிட்டனில் வட அயர்லாந்துக்கு இருந்த அந்தஸ்து சிறந்த ஒரு முன்மாதிரி என்று பிரிட்டோ முத்துநாயகம் கருதினார் என்பது கவனிக்கத்தக்கது. வட அயர்லாந்து பாராளுமன்றம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு கீழ்நிலையானது. ஆனால், சமஷ்டி முறைக்கு ஒப்பான பெருமளவு அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது.
வட அயர்லாந்து அரசியலமைப்புச் சடடத்தின் பிரதி ஒன்று சட்டக்கல்லூரி அதிபரினால் தமிழரசு கட்சிக்கு கொடுக்கப்பட்டது. வில்சன் சமஷ்டி அமைப்பு முறையைக் கொண்ட பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளின் பிரதிகளை வழங்கினார்.
கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. வன்னியசிங்கமும் தமிழரசு கட்சியின் செயலாளரான வி. நவரத்தினமும் மாற்றுத்திட்டம் ஒன்றை வரைவதில் ஈடுபட்டார்கள். மூன்று நாட்களில் அந்த பணியை நிறைவுசெய்த தமிழரசு கட்சியின் தலைவர்கள் நவரத்தினராஜா ஊடாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் பரிசீலனைக்கு வரைவை சமர்ப்பித்தார்கள். அல்ஸ்டர் வகை மாதிரியின் (Ulster model) செல்வாக்கு அந்த வரைவில் பெருமளவுக்கு பிரதிபலித்தது.
ஒரு சபையைக் கொண்ட (Unicameral legislature ) பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கொண்டதாக கீழ்நிலைப்பட்ட (Subordinate state ) வடக்கு கிழக்கு மாநிலம் அமையும். வெளிவிவகாரம், பாதுகாப்பு, நாணயம், முத்திரைகள், சுங்கம், பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆகியவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை மாநிலங்களுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் (Block grants ) மத்திய அரசு வழங்கும் அதேவேளை உள்ளூர் வரியறவீடு வருவாய்க்கு உதவக்கூடியதாக இருக்கும். மாநிலத்தின் பொறுப்பில் பொலிஸ் இருக்கும். தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக மாநிலம் கொழும்பில் பிரதிநிதித்துவம் செய்யப்படும். தமிழ் விவகாரங்களுக்கு என்று மத்திய அமைச்சரவையில் அமைச்சர் ஒருவர் இருப்பார்.
இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள்
இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கொழும்பு றொஸ்மீட் பிளேஸில் உள்ள எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதில் செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், நவரத்தினம் ஆகியோர் தமிழரசு கட்சியின் சார்பில் கலந்துகொண்டனர். யோசனைகள் சாராம்சத்தில் சமஷ்டி முறைக்கு ஒத்ததாக இருந்ததாக பண்டாரநாயக்க சுட்டிக் காட்டினார். நிருவாக பன்முகப்படுத்தலை வலியுறுத்தும் வகையில் திட்டத்தை தனித்தனி சுருக்கக்குறிப்பாக தருமாறு பண்டாரநாயக்க யோசனை கூறினார். அத்துடன் 'பாராளுமன்றம்', 'அமைச்சரவை' என்ற சொற்கள் ஒரு தனிஅரசை குறிப்பவை போன்று இருப்பதாக அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
தமிழரசு கட்சி திரும்பிச் சென்று சுருக்க குறிப்புகளாக யோசனைகளை அமைத்து ஆவணத்தை மீளாய்வு செய்தது. பிராந்திய சபைகள் கோட்பாடு பண்டாரநாயக்காவின் மூளையில் உதித்தவை என்பதால் தமிழரசு கட்சி ' பாராளுமன்றம் ' என்பதை ' பிராந்திய சபையினால் ' பதிலீடு செய்தது. அமைச்சரவைக்கு (Cabinet ) பதிலாக பணிப்பாளர்கள் சபை (Board of directors) என்று குறிப்பிடப்பட்டது. மூலமுதல் யோசனைகளின் சாராம்சம் பெருமளவுக்கு உள்ளபடியே விடப்பட்டது.
அதற்கு பிறகு ஸ்ரான்லி டி சொய்சா, நவரத்தினரராஜா மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர்களுக்கு இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவற்றில் பிரதமர் பங்குபற்றவில்லை. ஆனால், தனது பிரதிநிதியான ஸ்ரான்லி டி சொய்சா ஊடாக பல மாற்றங்களை முன்வைத்தார்.
மூலமுதல் யோசனைகளில் இருந்து ஓரளவுக்கு அவை தளர்த்தப்பட்ட போதிலும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சியை இணங்கவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், ஒரு விடயத்தில் தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.வடக்கும் கிழக்கும் ஒரே தனியான பிராந்திய சபையாக அமையவேண்டும் என்று அது விரும்பியது. வடக்கு தனியான அலகாக இருப்பதற்கு அனுமதிக்கத் தயாராக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. கிழக்கு இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளுடன் தனியானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
தமிழரசு கட்சியின் ' தங்கமூளை ' என்று வர்ணிக்கப்பட்ட அதன் மதியூகி வி. நவரத்தினம் இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியானவராக இருந்தார். இறுதியில் ஏ.சி. நடராஜா நவரத்தினத்தை இணங்க வைத்து விட்டுக்கொடுப்பு ஏற்பாடு ஒன்றுக்கு வழிவகுத்தார். வடக்கும் கிழக்கும் தனித்தனியான சபைகளாக இருக்கும் அதேவேளை அவை விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்பதே அந்த ஏற்பாடாகும்.
ஜூலை 25 - 26 இறுதிச் சந்திப்பு
இறுதியும் தீர்க்கமானதுமான சந்திப்பு பழைய செனட் கட்டிடத்தில் அமைந்திருந்த பிரதமரின் அலவலகத்தில் 1957 ஜூூல 25 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் பல கபினெட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழரசு கட்சியின் பல தலைவர்களும் பங்கேற்றனர். ' அனுசரணையாளரான ' நவரத்தினராஜாவும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சுவார்த்தைகள் இரவு 7 மணிக்கு தொடங்கின.
உத்தியோகபூர்வ மொழி என்ற வகையில் சிங்களத்தின் அந்தஸ்து குறைக்கப்படக்கூடாது என்று அமைச்சர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். நீண்ட கலந்தாலோசனைக்கு பிறகு வில்லியம் சில்வா தமிழை தேசிய சிறுபான்மைச் சமூகங்களின் மொழி என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற சமரச ஏற்பாட்டை முன்வைத்தார். வடக்கிலும் கிழக்கிலும் நிருவாக மொழியாகவும் தமிழ் இருக்கும்.
அலகு சம்பந்தப்பட விவகாரத்தில் வடக்கு ஒரு சபையாக இருக்கும் அதேவேளை கிழக்கு ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாட்டுக்கு தமிழரசு கட்சி இணக்கம் தெரிவித்தது. சபைகள் விரும்பினால், மாகாண எல்லைகளையும் கடந்து இணைந்துகொள்ள முடியும். அவசியமானால், நடைமுறையில் இருந்த எல்லைகளை மீளவரையலாம்.
பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களைப் பொறுத்தவரை, பிலிப் குணவர்தனவுடன் சேர்ந்து பல அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்தார்கள். அமைச்சர்கள் இந்த விவகாரத்தை ஆராய்ந்து கொண்டிருக்க தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் வேறு ஒரு அறைக்கு சென்று காத்திருந்தார்கள். இறுதியில் அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு இணக்கினார்கள்.
குடியேற்றங்களை நிறுத்துவதற்கு தயாராக இருந்த பிரதமர் காணி குடியேற்ற நடைமுறைகள் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் திருப்திகரமான ஏற்பாடொன்றுக்கு இணங்கிக் கொண்டார். குடியுரிமைப் பிரச்சினையை தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி தீர்த்து வைப்பதாக பண்டாரநாயக்க கூறினார். அந்த பிரச்சினையை தமிழரசு கட்சி அவ்வாறே விட்டுவிட வேண்டும் என்றும் பிரதமர் யோசனை கூறினார். அதற்கு தமிழரசு கட்சி இணக்கியது.
அந்த வேளையில் நேரம் நள்ளிரவைக் கடந்து 1957 ஜூலை 26 அதிகாலை பிறந்துவிட்டது. எட்டப்பட்ட இணக்கப்பாட்டை ஜூலை 26 அதிகாலை 2 மணிக்கு நவரத்தினம் தனித்தனி சுருக்கக் குறிப்புகளாக வாசித்தார். இரு தரப்பினரும் முறைப்படி இணங்கிக் கொண்டனர்.
மிகவும் பரபரப்பான செய்திக்காக காத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் அதிகாலை 2.30 மணிக்கு அமைச்சரவை அறைக்கு அழைக்கப்பட்டனர். கமராக்களின் வெளிச்சத்தில் பண்டாரநாயக்கா மிகவும் கண்ணியமான முறையில் " எனது அருமை நண்பர்களே, உங்களை நித்திரையின்றி காத்திருக்க வைத்ததற்காக வருந்துகிறேன். ஆனால், இது உங்களுக்கும் எங்களுக்கும் நாட்டுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இரவு " என்று மன்னிப்புக் கோரினார்.
"உடன்படிக்கைக்கு வந்திருக்கிறோம் "
றஞ்சி ஹண்டி அப்போது ஒரு லேக் ஹவுஸ் பத்திரிகையாளர். பின்னாளில் அவர் திருமதி மைத்திரிபால சேனநாயக்கவாக மாறினார். கட்டுப்படுத்த முடியாதவரான அவர் " முடிவுகளை எங்களுக்கு சொல்லுங்கள் " என்று உரத்துக் கத்தினார். அப்போது ஸ்ரான்லி டி சொய்சா " நாம் இணக்கப்பாடு ஒன்றை எட்டியிருக்கிறோம் " என்று அறிவித்தார்.
பிறகு எஸ்.ஜே.வி.யை திரும்பிப் பார்த்தவாறு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. " செல்வநாயகம் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள் " என்று கூறினார். இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது, அதன் விபரங்கள் பிரதமரினால் வெளியிடப்படும் என்று செல்வநாயகம் கூறினார். பத்திரிகைகள் அச்சுக்கு போவதற்கான காலஅவகாசம் இன்னமும் இருக்கிறதா என்று பத்திரிகையாளர்களிடம் பண்டாரநாயக்க கேட்டார். அப்போது லேக் ஹவுஸ் பத்திரிகையாளரான ஜோ சிகேரா மிகுந்த உற்சாகத்துடன் " தாமதித்து பத்திரிகைகளை அச்சிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எமக்கு உடனபடிக்கையின் முழு விபரங்களும் வேண்டும்" என்று கூறினார். வி.நவரத்தினத்தின் குறிப்புகளில் இருந்து பண்டாரநாயக்க விபரங்களை வாசித்தார்.
நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா என்று தமிழரசு கட்சியின் தலைவர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். நாகநாதன், வன்னியசிங்கம், இராஜவரோதயம், அமிர்தலிங்கம் ஆகியோர் 'ஆம் ' என்று பதிலளித்தனர். அப்போது செல்வநாயகம் தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட ' இயக்கத்தைக் ஒத்திவைக்கும் என்று கூறினார்.
காலையில் பத்திரிகைகள் வழமைக்கு மாறாக உடன்படிக்கையின் முழு விபரங்களுடன் வெளிவந்தன. மாலைப் பத்திரிகைகளும் வழமையை விடவும் முன்னதாக கூடுதல் விபரங்களைத் தாங்கி வெளிவந்தன.
ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்தாகவில்லை
அந்த தருணத்தில் எந்த ஒப்பந்தமும் பண்டாரநாயக்கவினாலோ அல்லது செல்வநாயகத்தினாலோ கைச்சாத்திடப்படவில்லை என்பது நம்புவதற்கு கஷ்டமான ஆனால் வேடிக்கையான ஒரு விடயமாக இருந்திருக்கலாம். பண்டா -- செல்வா ஒப்பந்தம் ஒன்று அங்கே இருக்கவில்லை. அது ஒரு கனவான் ஒப்பந்தத்தைப் போன்றது. நவரத்தினத்துடன் சேர்ந்து செல்வநாயகம் கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக எழுத்தில் உருப்படியாக ஒன்றும் இல்லை என்று நவரத்தினம் தான் சுட்டிக்காட்டினார். பத்திரிகை அறிக்கைகள் மாத்திரமே வந்திருக்கின்றன.
அப்போது நவரத்தினத்தை சற்று ஓய்வெடுத்துவிட்டு காலையில் மிகுதி விடயங்களைை கவனிக்குமாறு செல்வநாயகம் கேட்டுக் கொண்டார். காலையில் நேரகாலத்தோடு எழுந்த நவரத்தினம் பண்டா -- செல்வா ஒப்பந்தம் என்று பின்னர் அறியப்பட்ட இணக்கப்பாட்டின் நிபந்தனைகள் மற்றும் பிரிவுகளை வரைந்து மூன்று பிரதிகளை எடுத்துக்கொண்டார். அது இரண்டு பாகங்களாக அமைந்தது. முதலாவது பாகம் பேச்சுவார்த்தைகளினதும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளினதும் சுருக்கமாக இருந்த அதேவேளை, இரண்டாவது பாகம் உத்தேச பிராந்திய சபைகளின் கட்டமைப்புகள், அதிகாரங்கள் மற்றும் உறுப்பாக்கங்கள் (Composition ) பற்றியதாக இருந்தது.
சொலமனும் சாமுவேலும்
ஜூலை 26 நண்பகல் பிரதிகளை எடுத்துக்கொண்டு செல்வநாயகம் பிரதமரின் அலுவலகத்துக்கு சென்றார். அங்குதான் பழைய தோமியன்களான சொலமனும் சாமுவேலும் பண்டாரநாயக்க -- செல்வநாயகம் ஒப்பந்தம் என்று அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணக்கப்பாட்டை அங்கீகரித்தார்கள். ஊடகங்களின் பரபரப்புகளுக்கு அப்பால் மிகவும் அமைதியாக அது செய்யப்பட்டது. பண்டாரநாயக்கவிடமும் செல்வநாயகத்திடமும் ஒவ்வொரு பிரதிகள் இருந்தன. அதன் ' வரைஞரான ' நவரத்தினம் மூன்றாவது பிரதியை தன்வசம் எடுத்துக் கொண்டார்.
பல வருடங்கள் கழித்து நவரத்தினம் தனது மகன் மோகனின் ரொறண்டோ இல்லத்தில் இந்த கட்டுரையாளருடனான சம்பாஷணை ஒன்றின்போது தன்னிடமிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது பிரதி இந்திய இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) போராளிகளினால் அழிக்கப்பட்ட சோகக் கதையைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருந்த நவரத்தினத்தின் வீட்டை அந்த போராளிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டபோது இது நடந்தது.
ஒப்பந்தத்தின் சகல அம்சங்களும் தமிழரசு கட்சிக்கு திருப்தியைத் தரவில்லை, ஆனால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை உணர்வின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டது என்று பண்டா -- செல்வா ஒப்பந்தத்தின் பின்னால் இயக்குசக்தியாக விளங்கிய நவரத்தினம் என்னிடம் கூறினார். 1968 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தை தாபித்த அந்த முதுபெரும் தமிழ்த் தலைவர் 2006 ஆம் ஆண்டில் அவரது 97 வது வயதில் கனடாவின் மொண்ட்ரீயலில் காலமானார்.
பின்னோக்கிப் பார்க்கும்போது, பண்டா -- செல்வா ஒப்பந்தம் நாடு அதன் முழு ஆற்றல்களையும் வளங்களையும் பயன்படுத்தி முன்னேற வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டேயாக வேண்டும் என்பதை விளங்கிக்கொண்ட இரு தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒன்று என்று தோன்றுகிறது. அதேவேளை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருந்த இனமோதல் சூழ்நிலையை கட்டுப்படுத்துமுகமாக புரிந்துணர்வு ஒன்றுக்கு வரவேண்டிய அவசரமும் அவசியமும் உணரப்பட்டது. ஆனால், உடன்படிக்கை ஒருபோதுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பின.
எஸ்.டபிளயூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினாலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினாலும் 1957 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். அன்றைய பிரதமரும் பெரிய தமிழக்கட்சியின் தலைவரும் கண்ட புரிந்துணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடியை அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே கட்டுப்படுத்தி வைப்பதற்கு உதவியிருக்கக்கூடும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம் , தெற்கில் கிளம்பிய அரசியல் எதிர்ப்பு காரணமாக செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. சிங்கள பௌத்த மதகுருமார் மத்தியிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் கடும்போக்குடையவர்களிடமிருந்தும் அரசாங்கத்திற்குள்ளும் எதிரணிக்குள்ளும் இருந்த கடும்போக்கு சக்திகளிடமிருந்தும் ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது.
தவறவிடப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்
பண்டா - செல்வா ஒப்பந்தம் தமிழ் தேசியப் பிரச்சினையை அதிகாரப் பரவல் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் இணக்கப்பாடு ஒன்றின் ஊடாக அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே தீர்த்துவைப்பதற்கு கிடைத்த ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். ஆனால், அது ஒருபோதும் செயற்படவில்லை . செயற்பட அனுமதிக்கப்படவுமில்லை. இறுதியில் இனநெருக்கடி தீவிரமடைந்து போராக மாறி பல வருடங்களாக நாட்டில் இரத்த ஆறு ஓடிய அனர்த்தத்துக்கே வழிவகுத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM