(நெவில் அன்தனி)
இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் இந்தியா 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவும் பங்குபற்றுகிறது.
போட்டி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் மழை பெய்ததன் காணரமாக இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே ஆட்டம் தொடங்கியது. நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டி அணிக்கு 39 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணியில் ஆரம்ப வீராங்கனை விஷ்மி குணரட்னவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹசினி பெரேரா ஆரம்ப வீராங்கனையாக விளையாடினார்.
வேகப்பந்துவீச்சாளர் 24 வயதான மல்கி மதாரா, 29 வயதான துடுப்பாட்ட வீராங்கனை பியுமி வத்சலா ஆகிய இருவரும் அறிமுக வீராங்கனைகளாக இடம்பெற்றனர். ஆனால் அவர்கள் இருவருமே பிரகாசிக்கத் தவறினர்.
இந்திய அணியில் 22 வயதான வேகப்பந்துவீச்சாளர் காஷ்வீ கௌதம், சுழல்பந்துவீச்சாளர் 20 வயதான ஸ்ரீ சரணி ஆகிய இருவரும் அறிமுக வீராங்கனைகளாக இணைக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் அணித் தலைவி சமரி அத்தபத்து உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் பலர் துடுப்பாட்டத்தல் பிரகாசிக்காதது அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்களை தாரைவார்த்த இலங்கை மகளிர் அணி, ஒரு கட்டத்தில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
எனினும் அனுஷ்கா சஞ்சீவனி, அச்சினி குலசூரிய ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கை ஓரளவு நல்ல நிலையை அடைந்தது.
அது இலங்கை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
ஆனால், அது இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்ப்பதாக அமையவில்லை.
துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா (30), கவிஷா டில்ஹாரி (25), அனுஷ்கா சஞ்சீவனி (22), அச்சினி குலசூரிய (17), ஹர்ஷித்தா சமரவிக்ரம (14) ஆகிய ஐவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் ஸ்னேஹ் ராணா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அறிமுக வீராங்கனை நல்லப்புரெட்டி ஸ்ரீ சரணி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மற்றொரு அறிமுக வீராங்கனையான காஷ்வீ கௌதம் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி 8 ஓவர்களில் 28 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 29.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.
ஆரம்ப வீராங்கனைகளான ப்ரத்திகா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்களில் அனுபவசாலியான மந்தனா 43 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து ப்ரத்திகா ராவல், ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய மகளிர் அணியை இலகுவாக வெற்றி பெறச் செய்தனர்.
ப்ரத்திகா ராவல் 50 ஓட்டங்களுடனும் ஹார்லீன் டியோல் 48 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகி: ப்ரத்திகா ராவல்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM