இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

Published By: Digital Desk 2

27 Apr, 2025 | 02:11 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.  தாக்குதல் இடம்பெற்று  ஆறு வருடங்கள்  கடந்துள்ள போதிலும்  இன்னமும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாமைகுறித்து  பல்வேறு தரப்பினரும் அதிருப்திகளை  வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில்  உரிய விசாரணைகள்  நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.  அதற்கிணங்க தற்போது   விசாரணைகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே   தெரிகின்றது.  உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதலின் சூத்திரதாரி யார்? அதற்கான பின்னணி என்ன என்பது குறித்து மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்  என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

இந்த விடயம் தொடர்பில்  விசாரணைகளை  முன்னெடுப்பதற்காக   ஏழு அம்ச  கோரிக்கையை அவர் முன்வைத்திருக்கின்றார்.

பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள  உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல் தொடர்பான  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உடனடியாக  மக்கள் மயப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்குகளை மேற்பார்வையிட பூரண அதிகாரமிக்க சுயாதீன வழக்கறிஞர்  அலுவலகம் ஒன்றை  நிறுவவேண்டும்  என்றும்  கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து சக்திகளையும் விசாரித்து உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சகல பரிந்துரைகளையும் செயற்படுத்த வேண்டும்,  தாக்குதல் தொடர்பில்  செனல்4 வெளியிட்ட  விபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,  தாக்குதலுக்கு வழிவகுத்த சகல   இரகசிய சதித்திட்டங்களுக்கும்  பின்னால் இருந்த  சட்டவிரோத கலாசாரத்தையும்  அதைத் தூண்டிய விடயங்களையும் இந்நாட்டிலிருந்து முற்றாக அகற்ற  வேண்டும்.

  நாட்டிலுள்ள  அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் சகல பொதுமக்களையும் காப்பாற்றி சமூகத்துக்குள்  சமாதானத்தை ஏற்படுத்தவும்  நாட்டில் வன்முறைகள் தோற்றுவிக்கப்படாமல்  பார்த்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  கர்தினால்  வலியுறுத்தியிருக்கின்றார்.

பேராயரின் இந்த  ஏழு கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசித்து விரைவில்  பதிலளிக்கப்படும் என்று அரசாங்கம்  தெரிவித்திருக்கின்றது.  

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு  நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையாக  இருக்கின்றது. இதற்காகவே அவர் இந்த  ஏழு கோரிக்கைகளையும்   தற்போது  முன்வைத்திருக்கின்றார்.

கடந்த 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு  தற்போது ஐவர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக்குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட  தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.  இதனைவிட ஐந்து உபகுழுக்களும்  நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக்குழுக்கள்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து  எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில்   பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட  தாக்குதல் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். விசாரணைகள்   தொடர்ந்து வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  உண்மையிலேயே உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள்   உரிய வகையில் நடத்தப்பட்டு சூத்திரதாரிகள் இனங்காணப்பட வேண்டும். தாக்குதலுக்கான  உண்மைக்காரணம்   வெளிப்படுத்தப்பட வேண்டும்.  இந்த விடயத்தில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளில் இரு முக்கிய விடயங்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக   ஜனாதிபதி  அறிவித்திருக்கின்றார்.  இதனைவிட  “அதிகாரத்தை  கைப்பற்றுவதற்காகவே  இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  பிரதான சூத்திரதாரியை  மூடி மறைப்பது  கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளின்  பிரதான நோக்கமாக   காணப்பட்டது.

தற்போது  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சகல ஆவணங்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  உண்மையை வெளிப்படுத்த  உரிய  சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்துடன் “ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள  சகல பரிந்துரைகளும் அமுல்படுத்தப்படும்.  குண்டுதாக்குதல்களுடன் தொடர்புடைய பல சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைக்கும். பிரதான சூத்திரதாரியை  நாட்டு மக்களுக்கு  பகிரங்கப்படுத்தும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலிருந்து குண்டுத்தாக்குதலின்  சூத்திரதாரியை அரசாங்கம்   வெளிப்படுத்தும்  என்ற எதிர்பார்ப்பு   காணப்பட்டது.  ஆனால்,  கடந்த  22ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த   அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளுக்காக ஒத்துழைப்புக்களை மாத்திரமே   அரசாங்கம் வழங்குகிறது. 

மாறாக, அரசாங்கத்தால்  விசாரணைகள்  முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின்  பிரதான சூத்திரதாரி தொடர்பில்  அறிவிக்கும் பொறுப்பு  குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் விசாரணைகளை முறையாக முன்னெடுத்திருந்தால்  தற்போது பிரதரான சூத்திரதாரியை  இனங்கண்டு  கைது செய்திருக்க முடியும். 

ஆனால்  கடந்த  காலங்களில் விசாரணைகளை மறைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டன.  சில  விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு கடந்த அரசாங்கத்தின்   அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விடயத்தில் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை  இனங்காட்டவேண்டிய பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி    அநுரகுமார திசாநாயக்க  கூறிவரும் நிலையில், அதற்கு  முரணான வகையில்  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும்  பொறுப்பு  குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

குற்றப்புலனாய்வுப்பிரிவினர்  விசாரணைகளை மேற்கொண்டாலும்    அதற்கான உத்தரவுகளை வழங்கவேண்டியது  அரசாங்கமேயாகம்.  அரசாங்கத்தின் உத்தரவுகளிலேயே விசாரணையின் தன்மை மாறுபடும் என்பதை  அனைவரும்   உணர்ந்தே உள்ளனர்.

எனவே, இந்த விடயத்தில்  ஜனாதிபதியும்  பாதுகாப்பு அமைச்சருமான  அநுரகுமார திசாநாயக்க  தீவிர அக்கறை  காண்பிக்க வேண்டியதன் அவசியம் தற்போது  உணரப்பட்டிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்  தற்போது கைது செய்யப்பட்டுள்ள  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள்  இராஜாங்க அமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்)  தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால  தெரிவித்திருந்தார்.   

ஆனால் பிள்ளையான் கைது செய்யப்பட்ட போது  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்  காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே  கைதானதாக  பொலிஸார் அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும்  பிள்ளையான் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.

பிள்ளையான் தொடர்பில் கிழக்கு பல்லைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டமை மாத்திரம் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும் அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.  அவை தொடர்பிலும் தற்போது  மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவை குறித்து விசாரணைகளும்  முன்னெடுக்கப்படுவதாக  அமைச்சரவையின் பேச்சாளர்   நளிந்த ஜயதிஸ்ஸ   கூறியிருக்கின்றார்.

இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள்  பல்வேறு கோணங்களில்  தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக  அமுல்படுத்தப்படும் என்றும்  அரசாங்கம்  அறிவித்திருக்கின்றது.

அது குறித்து ஆராய குழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றன.  மறுபுறத்தில்  கைதுகளும்  இடம்பெற்று வருகின்றன.  பிள்ளையான் கைது வவகாரத்திலும் சர்ச்சைகள்  நீடிக்கின்றன.

எது எப்படியிருந்தாலும்  உயிர்த்த  ஞாயிறு தினத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீள் நிகழாமை   உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  அதற்காக  இதய சுத்தியுடன் அரசாங்கம்  செயற்பட வேண்டும் என்பதை  வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

2025-05-18 12:49:46
news-image

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...

2025-05-04 11:22:25
news-image

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

2025-04-27 14:11:28
news-image

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...

2025-04-12 16:49:51
news-image

மாகாணசபை தேர்தல் விடயத்தில் தடுமாறத் தொடங்கும்...

2025-04-06 09:36:11
news-image

சர்வதேச தடைகளை தவிர்ப்பதற்கு என்ன வழி?

2025-03-30 12:27:56
news-image

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன்...

2025-03-23 13:13:07
news-image

அரசியலமைப்பு விடயத்தில் காலம் கடத்தும் அரசாங்கத்தின்...

2025-02-09 15:10:34
news-image

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு...

2025-02-01 13:18:06
news-image

குற்றச் செயல்களின் பின்னணியும் கடந்தகால வரலாற்று...

2025-01-26 16:38:59
news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54