(லியோ நிரோஷ தர்ஷன்)
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ஆளும் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை களமிறக்கி தீவிர பிரசாரங்களை முன்னெடுத்த வருகின்றது. ஆனால் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய கட்சிகளின் பிரசாரங்கள் மந்தமாகவே உள்ளன. குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 50 வீதமான வாக்குப்பதிவை அடைய வேண்டும் என்ற இலக்குடன் ஜே.வி.பி. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.
மறுபுறம் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு மோதல்கள் தேர்தல் பிரசாரங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 60 பேர் மாத்திரமே உள்ளதாகவும், ஏனைய அனைத்து உறுப்பினர்களுமே தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்களா என்பதில் சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தேர்தல் பிரசாரங்களுக்கு ஜே.வி.பி பயன்படுத்துகிறது.
ஜே.வி.பி தலைமையகத்தில் குழப்பம்
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை மையப்படுத்தி பத்தரமுல்லை - பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமை அலுவலகத்தில் தொடர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மிக இலகுவாக வெற்றிப்பெற்று விடலாம் என்று அரசாங்கம் நம்பியிருந்த போதிலும், அண்மைய சில சம்பவங்கள் மக்கள் மத்தியில் மாற்று கருத்துக்களை உருவாக்கியுள்ளதாக ஜே.வி.பி தலைமையகத்திற்கு தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் முக்கிய அனைத்து மாவட்ட அமைப்பாளர்களையும் அழைத்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் ஜே.வி.பி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் முன்னெடுக்கப்பட்ட பெரும் பிரசாரங்களை உள்ளூராட்சி மன்றங்களை இலக்கு வைத்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. பிரதான கூட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்பார். இதேவேளை, சமூக ஊடகங்கள் ஊடாகவும் பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜே.வி.பி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்னெடுக்கபட்டமையை அவதானித்துள்ள அரசாங்கம், கிராமிய மட்டத்தில் கருத்துக்கணிப்புகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இதனூடாக வெற்றிப்பெற கூடிய உள்ளூராட்சி மன்றங்கள் எவை ? மற்றும் சந்தேகத்திற்கு உரிய உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பன குறித்து ஜே.வி.பி தலைமையகம் தகவல் திரட்டியுள்ளது. மறுபுறம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் 50 வீதமான வாக்குப்பதிவை அடைவது ஜே.வி.பி.யின் இலக்காக இருந்து வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. 43 வீதமான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜே.வி.பியால் பெற முடிந்தது. இருப்பினும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆவதால், அதன் இருப்பை மேலும் பாதுகாக்க இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இதுவே தற்போதுள்ள சவாலாக அரசாங்கம் கருதுகின்றது.
ஜே.வி.பி யின் உத்தரவு
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி குறித்து பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரே தவிர, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) உறுப்பினர் இல்லை என்று பதிலளித்திருந்தார். நீதி அமைச்சர் ஹர்ஷன ராஜகருணாவும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த ஜே.வி.பி, அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
அதாவது. ஜே.வி.பி உறுப்பினர் என்று கூற விரும்பா விடின், பாதிப்பு ஏற்படுத்தாதவாறு பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் ஜே.வி. பியின் உத்தரவை எந்தளவு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில் ஜே.வி.பி ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான பிம்பத்தை தேசிய மக்கள் சக்தியே உருவாக்கியது என்றும். அரசாங்கத்தில் கூடுதலான அதிகாரம் தம்வசம் உள்ளதாகவும் கூறுகின்றனர். அதாவது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 60 பேர் மாத்திரமே உள்ளனர். ஏனைய அனைத்து உறுப்பினர்களுமே தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்களா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இதன் பின்னணியிலிருந்து தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தேர்தல் பிரசாரங்களுக்கு ஜே.வி.பி பயன்படுத்துகிறது.
பட்டலந்த அறிக்கையில் சிக்கிய அரசு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முடக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டது. ஆனால் அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள், ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை கிளற ஆரம்பித்தன. 1983களில் ஜே.வி.பி. கலவரத்தின் போது மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற வரலாற்றை பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஆளுந்தரப்பு இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ரணிலுக்கு வைத்த பொறியில் தாமே சிக்கிக் கொண்டதாக எண்ணிய அரசாங்கம் தற்போது பட்டலந்த ஆணைக்குழ அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தை காலம் தாழ்த்த முடியுமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது. மே 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து 8 மற்றும் 9ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்த இரண்டாம் நாள் விவாதத்தை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது இயன்றவரை அதனை காலம் தாழ்த்த முடியுமா என்பது குறித்து அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றியளிக்காதபட்சத்தில் அன்றைய தினமும் விவாதம் நடத்தப்படும்.
நம்பிக்கை இழந்துவிட்ட ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சில முக்கிய தொகுதிகளில் மாத்திரம் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சிலவற்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்று வருகின்றார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைக்கும் பெறுபேற்றைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதே தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகவுள்ளது.
சாதாரண ஆசனங்களைப் பெறும் தொகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து சபைகளை நிறுவும் திட்டமும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கட்சி தலைமைத்துவம் பாரிய எதிர்ப்புக்கள் இன்றியே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாட்டை கொழும்பில் ஏற்பாடு செய்தமையால் மே தினக் கூட்டத்தை குருணாகல் அல்லது தலவாக்கலையும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் செயற்குழு கூட்டம் கூடிய போது தலவாக்கலையில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே மே தினக் கூட்டத்துக்கான ஏற்பாட்டு பொறுப்புக்கள் அனைத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா, கண்டி, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தலவாக்கலைக்கு மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பயங்கரவாதத் தடை சட்டம்
2017 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இதன்போது இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு சில விடயங்களில் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு அவை குறித்து ஆராயவுள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பிலேயே விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மே 4ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளது. இதன் போது பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குவதற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்ற நிலைப்பாட்டை சஜித் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிக்கவுள்ளார். அதேவேளை புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை சட்டம் தொடர்பிலும் இதன் போது பேசப்படவுள்ளது
ஜி.எஸ்.பி வரிச் சலுகை
ஜி.எஸ்.பி வரிச் சலுகையை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவதா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மீளாய்வு குழு, அரசாங்கத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் என பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையட உள்ளது. முந்தைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைகள் வழங்குவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், இலங்கை ஆடைத் துறை உட்பட ஏற்றுமதிகள் எவ்வாறு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது என்பதைக் காண முடிந்தது. இருப்பினும், மனித உரிமை நிலைமைகள் மேம்பட்ட பின்னர், 2017 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றது. ஆனால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீண்டும் நீடிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஒன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாகும்.
ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக எதிர்க்கட்சியில் இருந்தபோது தற்போதைய அரசாங்கம் பலமுறை கூறிய போதிலும், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பிறகும் அதை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு இளைஞனைக் கைது செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. எனவே ஜி.எஸ்.பி சலுகையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.
இதேவேளை, இலங்கை கையொப்பமிட்டுள்ள மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை செயல்படுத்த வேண்டும். அடுத்த சில நாட்களுக்குள், இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை எடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM