பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ராணுவம் மூலம் பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக தெரிகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துதல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளுக்கு தடை போன்ற அரசுமுறை நடவடிக்கைகளை தொடர்ந்து, நாட்டின் எல்லைக்குள் இருந்து தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த, செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார். குறிப்பாக, "இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு உரிய தண்டனை வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
"தாக்குதலுக்கு எதிராக ராணுவத்தின் மூலம் பதிலடி கொடுக்கப்படும். அதற்கான தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல், எங்களுடைய ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறோம். நமது நாட்டு எல்லைக்குள் இருந்தபடியே தீவிரவாதிகளை தாக்கும் வசதி எங்களிடம் இருக்கிறது" என்று அரசு வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியது.
பிப்ரவரி 14, 2019 அன்று, புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) கான்வாய் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதியால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம், பாலகோட்டில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வழிவகுத்தது.
தரை வழித் தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றை ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ஹூடா பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. "இந்த சூழலில், அரசாங்கம் சில வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கை சரியாக உள்ளது. எனினும், ராணுவ ரீதியான பதிலடியை, நான் முழுமையாக நிராகரிக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
"உண்மையில், எல்லைப் பகுதியில் இருந்து சில இலக்குகளை நம்மால் தாக்க முடியும். ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும். அவை, நம்முடைய விமானப்படையிடம் இருக்கின்றன" என்று டி.எஸ் ஹூடா கூறினார். 2016 ஆம் ஆண்டு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது வடக்கு ராணுவ தளபதியாக அவர் பதவி வகித்தார்.
"இது மட்டுமின்றி, தரைவழித் தாக்குதல்களையும் பல்வேறு வகைகளில் மேற்கொள்ள முடியும். பல வகையான இலக்குகளை குறி வைக்க முடியும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு மறுக்க முடியாதது என்று வலியுறுத்திய அரசாங்க வட்டாரங்கள், "பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் தொடர்புடையது" என்று சுட்டிக்காட்டியது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களின் பின்னணியில், இந்தியாவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் வேலையாக இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்" என்று வட்டாரம் கூறுகிறது.
மதத்தின் அடிப்படையில் இலக்குகளைத் தேர்ந்தெடுத்த பயங்கரவாதிகளின் அடையாளங்கள் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சிகள் "முன்னேற்றத்தில்" இருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்தன.
இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலுவான அறிகுறியை கொடுத்துள்ளதாகவும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பீகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மோடி, "பயங்கரவாதிகளின் புகலிடமாக எஞ்சியிருப்பதை அழிக்கும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதத்தை கொண்டு இந்தியாவை ஒரு போதும் அழிக்க முடியாது" என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM