யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் “கே.கே.எஸ். வீதி அன்றும் இன்றும் வண்ணார்பண்ணை அத்தியாயம்” என்ற தலைப்பில் ஒளிப்படக்காட்சி ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட முகக்கூடத்தில் நடைபெறுகிறது.
இக்காட்சியானது வீதி அகலிப்பு, முன்னும் பின்னும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இடங்கள், கட்டடங்களை ஒப்பீடாகப் கொண்டு ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2010இல் ஆயுதப் போராட்டம் முடித்துவைக்கப்பட்ட மறுவருடம் “வடக்கின் வசந்தம்” என்ற பெயரிலான பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை அரசாங்கம் வடக்கில் ஆரம்பித்தது. அதன் முக்கிய அம்சமாக உட்கட்டுமான அபிவிருத்தி முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பிரதான பகுதியாக வீதிகளை அபிவிருத்தி செய்தல் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது.
இந்தச் செயற்பாட்டின் முதல் இலக்காக கே.கே.எஸ். வீதி தெரிவுசெய்யப்பட்டிருந்தது. இங்கு காங்கேசன்துறை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலாக 23 கிலோ மீற்றர் தூரம் நீண்டுள்ள இவ்வீதி யாழ்ப்பாணத்தின் பழமையான வீதியும் வரலாற்றுப் பண்பாட்டுத் தடயமுமாக காணப்படுகிறது. குறிப்பாக வண்ணார்பண்ணையை ஊடறுக்கும் பகுதி என்பது 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காலனிய மற்றும் சுதேசிய நிலவரங்களின் எதிர்வினைப்புலத்தில் உருவான பண்பாட்டு வரலாற்றின் தடயங்களைக் கொண்ட இடமாகக் காணப்பட்டதுடன் பெருமளவுக்கு வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலை மையமாகக் கொண்டே இப்பகுதி விரிவடைந்திருந்தது.
இந்த ஆலயத்தினை சுற்றி பல வகையான கைவினைஞர் குழுக்கள், இசை வேளாளர் குடும்பங்கள், கோயில் நடனக்காரர்கள், அலங்காரம் செய்வோர், அர்ச்சகர் குடியிருப்புக்கள் என்பவற்றோடு பரிவாரக் கோயில்களையும் கொண்டமைந்து காணப்பட்டது.
அத்துடன் வர்த்தக நிலையங்கள், கிட்டங்கிகள், கைவினைஞர்களது பட்டறைகள், மடங்கள். மற்றும் நாடகக் கொட்டகைகள் என்பனவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக அது காணப்பட்டதுடன் நாவலரது முதல் பாடசாலை அவரது அச்சகம், நாவலர் மரபோடு பொருந்திய கிறிஸ்தவ மார்க்கத்தைச் சேர்ந்த கில்னர் அவர்களது கில்னர் மண்டபம், கலைப்புலவர் நவரத்தினத்தின் கலாநிலையம் என்பனவும் ஆரிய திராவிட பாசா விருத்திச் சங்கம், நாவலர் பரம்பரையினரால் ஆரம்பிக்கப்பட்ட சைவ பரிபாலன சபை, அவர்களது இந்து சாதனம் பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யோகர் சுவாமிகளது சிவதொண்டன் நிலையம். அதனை விடவும் அப்பகுதியில் அமையப் பெற்றிருந்த பல சித்தர் மையங்கள் உட்பட யாழ்ப்பாண மறுமலர்ச்சியின் 19ஆம் 20ஆம் நூற்றாண்டின் சின்னங்கள் பலவற்றையும் காவியதன் மூலம் யாழ்ப்பாணத்தின் மரபுரிமை தெருக்களுள் முக்கியமான ஒன்றாக கே.கே.எஸ் வீதி காணப்பட்டது.
இத்தகைய ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இந்த செயற்றிட்டம் ஒரு வகையான பண்பாட்டு வரலாற்றுத் தடய அழிப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு பல முயற்சிகளையும் அழுத்தங்களையும் வழங்கியது.
இந்நிலையில், 2010இல் யாழ்ப்பாணத்தவர் இழக்கப்போகும் நகரத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஒளிப்பட வடிவிலான ஆவணப்படங்களை மேற்கொண்டது.
அவ்வாறு 16 வருடங்களுக்கு முந்திய ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இன்று மீளவும் 2025இல் யசோதரனால் படம் பிடிக்கப்பட்ட ஒளிப்பிடங்களை ஒப்பிடுகைத் தன்மையில் இக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இக்காட்சியில் 52 ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்காட்சிப்படுத்தலில் ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், கிட்டங்கிகள் குடியிருப்புக்கள், மடங்கள், பாடசாலைகள், கைவினைஞர்களது பட்டறைகள், நாடகக் கொட்டகைகள் போன்ற யாழ்ப்பாண மறுமலர்ச்சியின் 19ஆம், 20ஆம் நூற்றாண்டின் சின்னங்கள், மரபுரிமை சொத்துக்கள் அழிவடைந்தும் அழிவடையாமலும் மாற்றம் அடைந்தும் காணப்படுவதனை இந்த ஒளிப்படங்களின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. அதாவது 16 ஆண்டுகளுக்கு முற்பட்ட கைவினைப் பட்டறைகள், கைவினைஞர்கள், இன்று உயிருடன் இல்லாத சில கைவினைஞர்கள் முதல் சிறு மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ள அதாவது வர்ணம் கட்டுமான அமைப்பு என்பவை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ள யாழ்ப்பாண இந்து கல்லூரி காணமுடிகின்றது.
மேலும், இந்த ஒளிப்படங்கள் மூலம் சில தெருவோர நாச்சார வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் சினிமாக் கொட்டகைகள் முழுமையாக அழிக்கப்பட்டு தற்காலத்தில் புதிய தோற்றத்தில் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இக்காட்சிப்படுத்தலானது தற்காலத்தவர்களால் பார்க்கப்படவேண்டியதொன்றாக அமைகிறது. காரணம்,மறைக்கப்பட்டு வருகின்ற பல்வேறான பண்பாட்டு தடயங்களை அறிந்துகொள்வதற்கும், யாழ்ப்பாணத்தின் 16 வருட காலத்துக்குட்பட்டதான போக்குகள் மற்றும் அதன் நிலை, தன்மை போன்ற விடயங்களினை தெளிவுற விளக்குவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக 16 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலையை கண்டறிந்த பார்வையாளர்கள் அதனை மீளவும் பார்க்கின்ற போது அவரிற்கான பழைய அனுபவங்களினை ஞாபகப்படுத்துவதாக அமைகிறது. அதுமட்டுமன்றி புதிய நகரத்தினை மாத்திரம் பார்வையிடுபவர்களுக்கு இக்காட்சிப்படுத்தல் புதுமையானதோர் அனுபவத்தினை வழங்குகின்றது. அதாவது 16 வருடங்களுக்கு முற்பட்டதான வண்ணார்ப்பண்ணை சிவன் கோயிலை மையமாக் கொண்டு விரிவடைந்த வரலாற்றினதும் பண்பாட்டினதும் குறிகாட்டிகள் தற்சமயம் வேறுபட்டிருக்கின்ற தன்மையுடையதாக உள்ளதை பார்க்க முடிகின்றது.
இதன் பின்னணியில் தெரு என்பது வெறுமனே இடங்களை இணைக்கும் பாதைகள் அல்ல தேவைகள் கருதி அமைக்கப்படும் கட்டுமானங்கள் அல்ல. அது வரலாற்றினதும் பண்பாட்டினதும் குறிக்காட்டியாகும்.
ஒரு வகையில் பௌதீக நிலைப்படுத்தப்பட்ட கருத்தாடல் சமூக வரலாறுகளின் பிரதிநிதித்துவமாகும். அந்த வகையில் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலை மையமாகக் கொண்டு விரிவடைந்த வரலாற்றினதும் பண்பாட்டினதும் குறிகாட்டிகளில் ஏற்பட்ட மாற்றம் அழிவடைந்துள்ள தன்மை என்பவற்றை இந்த ஒளிப்படக் காட்சியானது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
காலங்களின் சாட்சியமாகவும், தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு நிலைமைகள் மற்றும் நிலைமாற்றங்களின் மீதான வாசிப்புக்களுக்கான தடயமாகவும் இந்தக்காட்சியை முன்மொழிகிறது.
(“காண்பியக் காட்சி கே.கே.எஸ் வீதி அன்றும் இன்றும் வண்ணார்பண்ணை அத்தியாயம்” கையேட்டிலிருந்து...)
- க.டிலக்ஷன்,
நுண்கலைத்துறை, 4ஆம் வருடம், யாழ். பல்கலைக்கழகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM