அவுஸ்திரேலியாவில் மாத்திரம் காணப்படும் கங்காரு…! காரணம் என்ன தெரியுமா?

25 Apr, 2025 | 10:01 PM
image

முன்னொரு காலத்தில், அவுஸ்திரேலியாவுக்கு வந்த வெள்ளையர்கள், கங்காருகளைக் கண்டு அதிசயித்து, அப்பகுதியைச் சேர்ந்த சில ஆதிவாசிகளிடம், அவ்விலங்கின் பெயர் என்ன என்று கேட்டார்களாாம். அதற்கு அவர்கள் ‘கங்காரு’ என்று கூறினார்களாம். அவர்களுடைய மொழியில் ‘கங்காரு’ என்றால் "தெரியாது" என்று அர்த்தம்.

ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத வெள்ளையர்களோ, அந்த விலங்கின் பெயர் ‘கங்காரு’ என்று நினைத்து, அதன்படியே அழைக்க ஆரம்பித்து, இறுதியில் அதுவே பெயராக மாறியதாம். இப்படி தான், கங்காருகள் பற்றி அவுஸ்திரேலிய பழங்கதையொன்று கூறுகின்றது. 

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கங்காரு, வயிற்றில் பை உள்ள ஒரு விலங்கு ஆகும். பாலூட்டிகளில் ‘மார்சுபியல்’ (Marsupials) என்றொரு பிரிவைச் சேர்ந்த உயிரினங்களின் வயிற்றுப் பகுதியில், ஒரு பை போன்ற அமைப்பு காணப்படும். இந்த வகையைச் சேர்ந்த விலங்குகளின் குட்டியானது, முழு வளர்ச்சி அடையும் முன்பே பிறந்து விடுகின்றன. இதன் பின்னர் அக்குட்டியானது, இத்தகைய பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடையும் வரை வளர்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய நாட்டில் வாழும் கங்காரு இந்த பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.

கங்காருகள் வழக்கமான மற்ற பாலூட்டிகளைப்போல நடப்பதில்லை. அவை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவிக் குதித்தே செல்கின்றன. இவற்றின் ஒரே தாவலில், ஆறு அடி உயரத்திற்கு எழும்பி சுமார் 39 அடி தூரத்தை அடையும் என்பது ஆச்சரியமான தகவல்.

மேலும், கங்காருக்கள் நிலத்தில் மட்டுமே வாழ்கின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவுஸ்திரேலிய காடுகளில் மரங்களில் வாழக் கூடிய ஒருவகை கங்காருகளும் இருக்கின்றன. இந்த வாழ்க்கைக்கு ஏற்றாற் போல இவற்றின் கால்கள் சற்று நீண்டு அமைந்துள்ளன. மரங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கூரிய நகங்களும் அமைந்துள்ளன.

நாம் சிறிது நேரம் ஓடிவிட்டுப் பின்னர் நின்றால் நம்முடைய உடலில் இருந்து வியர்வை உருவாகும். ஆனால் கங்காருவானது அது தாவி ஓடிக் கொண்டிருக்கும் வரை, அதன் உடலில் இருந்து வியர்வை உருவாகிக் கொண்டே இருக்கும். அவை தாவிக் குதிப்பதை நிறுத்திய அடுத்த நிமிடமே அதன் உடலில் வியர்வை உண்டாவது நின்றுவிடும்.

கங்காருவின் குட்டியானது, மிகவும் சிறியதாக காணப்படும். இவை சுமார் ஒரு அங்குல அளவே காணப்படுகின்றன. குட்டி கங்காருவின் எடையானது பிறந்ததும் ஒரு சில கிராம் அளவே இருக்கும். அது, பைக்குள் இருந்தபடியே தாய்ப்பாலைக் குடித்து வளர்கிறது. சுமார் ஆறு மாத காலத்திற்குப் பின்னர் குட்டியானது முழு வளர்ச்சி அடைந்ததும் வெளியே வந்து வெளிச்சூழலில் வாழ ஆரம்பிக்கும்.

கங்காருகள் பற்றிய இன்னொரு அதிசய தகவல் என்னவென்றால், இவற்றுக்கு தாகம் எடுக்கும் சமயத்தில் அவை வாழும் பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உடனே பூமியில் சுமார் நான்கு அடி ஆழத்திற்குப் பள்ளத்தைத் தோண்டுகின்றன. அப்பள்ளத்தில் சுரக்கும் நீரை இவை அருந்தித் தங்களுடைய தாகத்தைப் போக்கிக் கொள்ளுகின்றன. அதேசமயம் இவை, குறைந்த அளவிலேயே தண்ணீரைக் குடிக்கின்றன என்பதுடன், அவற்றால் தொடர்ந்து ஒரு மாதம் கூட நீர் அருந்தாமல் வாழ முடியும்.

அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்காக இருக்கும் கங்காருகள், அவுஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இதற்குக் காரணம், அவுஸ்திரேலிய காலநிலைக்கு, அவை பழக்கப்பட்டுள்ளமையாகும்.

அதாவது, கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என அறியப்படும் கங்காருகள், ஆரம்பத்தில் உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்ந்துள்ளதாக அறியப்படுகின்றன. அவை, அவுஸ்திரேலியா, தென்னமெரிக்கா போன்றவையாகும்.

ஆரம்ப காலத்தில் இருந்தே உலகின் சில பகுதிகளில் கங்காருகள் வாழ்ந்தாலும், அவை, அதிகளவில் வாழும் பகுதியாக அவுஸ்திரேலியா இருந்துள்ளது. இதற்குக் காரணம் அங்கு நிலவிய காலநிலை அவற்றுக்கு ஏற்றதாக இருந்துள்ளமை தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும், 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து தனி ஒரு கண்டமாக மாறிய நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த பிற உயிரினங்களால் அங்கு நிலவிய காலநிலைக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ முடியாமல் காலம் செல்லச் செல்ல பலவகை உயிரினங்கள் அழிந்துவிட்டனவாம்.

மறுபுறம் பிற பகுதிகளில் வாழ்ந்த கங்காருகளால் அங்கு நிலவிய காலநிலையை தாங்கிக் கொண்டு வாழ முடியாமல், அவற்றின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கின. இப்படி ஒரு சூழலில் கங்காருகளுக்கு காலநிலைக்கு ஏற்ப வாழும் பகுதியாக அவுஸ்திரேலியா மாறியது என தெரியவருகின்றது.

அதுமட்டுமன்றி, பிற உயிரினங்களால் பெரிய அளவில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் கங்காருகளுக்கு அப்பகுதி சற்று பாதுகாப்பான பகுதியாக உணரப்பட்டது. அதனால் கங்காருகள் பெரியளவில் அவுஸ்திரேலியாவிலேயே தங்கி வாழ ஆரம்பித்தன. நாளடைவில் அவுஸ்திரேலியா கங்காருகளின் சொர்க்கமாக மாறியது என்கின்றார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்