அண்மை காலங்களாக மலையகத்தைச் சேர்ந்த இளம் இயக்குநரான செல்வகுமார் ரினோஷன் அவர்களுடைய ‘ஆசனம்’ குறுந்திரைப்படம் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்த குறுந் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகுமார் ரினோஷனுடனான நேர்காணலே இது ,
கேள்வி: ‘ஆசனம்’ குறுந் திரைப்படத்தின் கதை அமைப்பு எவ்வாறானது ?
பதில்: இன்று மலையகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் சினிமா ஒரு ஆயுதம் என அறிந்த ஊடகத்துறை மாணவனாக என்னுடைய படைப்புகளில் சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்தி அந்த சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசு பொருளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அந்த வகையில் மலையகத்தில் பல தோட்டப்புறங்களில் மக்கள் அத்தியாவசிய வசதிகளற்று நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான ஒரு பிரச்சினையை நான் முன்னிறுத்தி “ஒரு தோட்டத் தொழிலாளி குடும்த்திற்கு வரும் அத்தியாவசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக தோட்ட நிர்வாகத்திடம் எவ்வாறு போராடுகின்றனர். இறுதியாக அந்த குடும்பத்திற்கு அத்தியாவசிய பிரச்சினை தீர்க்கப்பட்டதா? இல்லையா? என்பதே இந்த கதையினுடைய கருவாக இருக்கின்றது. மேலும் இக் கதையினை நாம் பொருட்கோடல் செய்தால் கதையினுடைய சுவாரஸ்யத்தன்மை கெட்டுவிடும் என்பதனால் கதைனுடைய கருவை மாத்திரம் நான் கூறி இருக்கின்றேன்.
கேள்வி: ‘ஆசனம்’ என பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?
பதில்: முதலில் இந்தக் குறுந்திரைப்படத்திற்கு சூட்டிய பெயர் ‘இருட்டு’ ஆனால் ஏற்கனவே ஒரு சில படைப்புகள் இப் பெயரில் வந்திருந்தமையால் தனித்துவமான நாமத்தை சுட்டுவதற்காகவே சிந்தித்து ‘ஆசனம்’ என்ற பெயரை சூட்டினேன். உண்மையிலேயே எல்லாம் அந்த ஒரு ஆசனத்திற்காக தான், தோட்ட நிர்வாகங்களாக இருந்தாலும் சரி, மலையகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது அந்த திரைப்படத்தில் இருக்கும் கதை கருவோடு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி அனைத்துமே ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக தான் இந்த போராட்டம் அதனாலே ‘ஆசனம்’ என்று பெயர் சூட்டினேன்.
கேள்வி: ‘ஆசனம்’ குறுந் திரைப்படத்தின் கதையை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்? அதற்கு தூண்டுகோளாக அமைந்தது என்ன ?
பதில்: இது உண்மை சம்பவத்தை அடியொட்டி எழுந்த கதையாகும். அதாவது என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தாய், தங்கை நாளாந்தம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை நான் பார்த்த போது என்னுடைய ஒரு குடும்பத்தில் இதற்காக இவ்வளவு இடர்ப் படுகின்றார்கள் என்றால் மலையகத்தில் ஒட்டுமொத்தமாக இவ்வாறு எத்தனை அத்தியாவசிய பிரச்சினைகள் இருக்கும், என்பதை யோசித்தேன். இதை வெளி உலகிற்கு கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மலையகத்தின் வீண் செலவுகளுக்கு பதிலாக இவ்வாறான அத்தியாவசிய தேவைகளை நம் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இக் கதையை கட்டாயம் உருவாக்க வேண்டும் என்று அவா கொண்டேன். இந்த கதையினை வலுச் சேர்க்க என்னுடைய நண்பன் நிரோஷன் உதவிய பிறகு சில மாறுதல்களுடன் என்னுடைய ஆசானான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களிடம் கதை கூறிய போது அவர் கட்டாயமாக இதனை செய்ய வேண்டும் என்று ஊக்கம் தரும் வார்த்தைகளை கொடுத்தார். இவைகளே அந்த கதையினை உருவாக்குவதற்கு தூண்டுகோளாக இருந்தது.
கேள்வி: இக்குறுந்திரைப் படத்தில் உங்களுடைய கதை சொல்லல் உத்தி எவ்வாறு அமைந்திருக்கின்றது ?
பதில் : இக் கதையில் அந்தக் குடும்பம் எவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது என்பதை வைத்து, ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் பிரதிபலிப்பையும் தேவையையும் காட்டியிருக்கின்றேன். இந்த குறுந்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளுக்கு பின்னாலும் ஒரு கேள்வி இருக்கும். அந்த அத்தனை கேள்விகளுக்கும் இறுதியாகவே விடை கிடைக்குமாறு திரைக்கதையை நான் உருவாக்கி இருக்கின்றேன்.அத்தோடு இவ்வளவு அழகு நிறைந்த மலையகச் சூழலில் இயற்கையில் மட்டுமே பசுமை இருக்கின்றது மக்களுடைய வாழ்க்கையில் பெரும்பாலும் இடர்களே இருக்கின்றது என்பதை ஒளிப்பதிவாளர் இ.எம் பவி அவர்களோடு இணைந்து ஒளிப்பதிவுகளை காட்டியுள்ளதோடு. யதார்த்தமாக இருக்க பின்னணி இசை , பாடல்களை பயன்படுத்தாது இயற்கையான ஒலி குறியீடுகளையே பயன்படுத்தி இருக்கின்றோம். அதுபோலவே இக்கதையில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களை அந்த சூழலிலே
வாழக்கூடியவர்களையே பயன்படுத்தி அவர்கள் பேசக்கூடிய வசனங்களையே பயன்படுத்தியுள்ளோம். எனவே அவர்களுடைய யதார்த்தமான நடிப்பு மற்றும் அந்த கதை பின்னணி அந்த கதை சூழல் போன்ற இக்கதையினை தூக்கி நிறுத்துவதாக
அமைந்திருக்கின்றன. அத்தோடு கதையில் அந்த கதாபாத்திரங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு பின்னாலும் அது பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னாலும் அது செயல்படுத்தும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலுமே மிகப்பெரிய ஒரு காரணத்தையும் அந்த கதைக்கு பின்னால் கிளை கதைகளையும் அதில் வைத்திருக்கிறேன். பார்வையாளர்கள் ஆழமாக பார்க்கும் பொழுதே அது ஏன் வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு அர்த்தம் புரியும். இவைகளே முக்கிய கதையாடல் கட்டமைப்புகளாகும்.
கேள்வி: கதாபாத்திரங்களினுடைய வடிவமைப்பு தொடர்பாக கூற முடியுமா ?
இக் குறுந்திரைப்படத்திற்கான கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் அடையாளங் காணும் பொழுது கடினமாகவே இருந்தது. பிறகே இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த நிஜ கதாபாத்திரங்களையே நாம் கதையில் பயன்படுத்தும் பொழுது அது இன்னும் வலுச் சேர்ப்பதாகவும் யதார்த்தமாகவும் இருக்குமென நம்பினேன். அதற்காகவே தொழில் முறை நடிகர்களை பயன்படுத்தாமல் நிஜ கதாபாத்திரங்களை பயன்படுத்தினேன். அதன்படி இக் கதையில் பிரதான கதாபாத்திரம் என்னுடைய அம்மாவும் துணை கதாபாத்திரங்களாக என்னுடைய தங்கையும் , தந்தையும் நடித்ததோடு ஏனைய நடிகர்களும் பணியாற்றிய கலைஞர்களுமே என்னுடைய சொந்த உறவினர்கள்.
எனவே கதையினுடைய கதாபாத்திர தெரிவுகளில் சிக்கல்கள் குறைவாக இருந்த போதிலும் அக் கதாபாத்திரங்கள் முன் அனுபவங்கள் இல்லாத அந்த கதாபாத்திரங்களை கதைக்கு ஏற்றாற் போல் மாற்றுவது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதனை மீறி அவர்களிடம் நான் அடிக்கடி கூறியது “ நடிக்காமல் உங்களுக்கு வரக்கூடிய வசனங்களையும் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதனையும் செய்யுங்கள்” அதன் படியே அந்த கதாபாத்திர தெரிவு இருந்தது.
கேள்வி: இக்குறுந்திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வகையான வாய்ப்புகள் தங்களுக்கு கிடைத்தன
பதில் : உண்மையில் இப்படியான ஒரு குறுந்திரைப்படத்தை உருவாக்க எண்ணியபோது முதலில் நண்பர்கள் ஆதரவு கொடுத்தனர், அதேபோல என்னுடைய ஆசானும் இதற்கு ஊக்கம் தரும் வார்த்தைகளை வழங்கி இருந்தார். இருப்பினும் இந்த குறுந்திரைப்படத்தை உருவாக்குவதற்கு எனக்கு வணிக ரீதியில் பாரி ஒரு பின்னடைவு இருந்தது. தொழில்நுட்ப ரீதியான வசதிகளும் அதற்கான கருவிகளும் என்னிடம் இல்லாமல் வெறுமனே கதை மட்டுமே இருந்தது. இந்நிலையில் நான் பிரபல குறுந்திரைப்பட இயக்குநரான விமல்ராஜ் என்பவரிடம் அணுகிய கதையை கூறினேன் அவர் என்னுடைய கதை மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கு பக்கபலாகமாக இருந்து. அதன் பிறகு இக் குறுந்திரைப்படத்திற்காக பிரான்ஸை சேர்ந்த மரியன் என்பவரிடம் நிதியுதவி பெற்றுத் தந்ததோடு அவரும் அவருடைய பாரியாரும் உதவி செய்யும் விதமாக குறுந்திரைப்படத்தில் பணியாற்றினார்கள். இவ்வாறு செய்ததன் மூலமாகவே இந்த குறுந் திரைப்படத்தை உருவாக்குவதற்கு எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதனோடு என் குடும்பம் எனக்கு பின்னால் மிகப்பெரிய பக்க பலமாக இருந்தது. இவர்கள் குறுந்திரைப்படத்தினுடைய ஒப்பனை அலங்காரம், உடைத்தெறிவு , தயாரிப்பு, கலை இயக்கம் மற்றும் உதவி இயக்கம் போன்றனவற்றில் உறுதுணையாக இருந்தனர். அந்த அடிப்படையில் உதவி இயக்குநராக திஷான் அவர்களும் கலை இயக்குநராக சரூசன் அவர்களும் செயற்பட்டிருந்தார்கள். இதனோடு ஒரு சில காட்சிகளை எடுப்பதற்கு ஊர் மக்களுடைய ஒத்துழைப்பும் எனக்கு பாரிய வாய்ப்புகளாக இருந்தது எனவே இத்தனை பேருடைய உழைப்பும், அர்ப்பணிப்புமே எனக்கு இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்குவதற்கு வாய்ப்பளித்தன.
கேள்வி: இக்குறுந்திரைப்படத்தை உருவாக்கும் போதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களாக எவைகள் இருந்தன ?
பதில்: இவ்வாறான சமூகப் பிரச்சினை தொடர்பாக ஒரு குறுந் திரைப்படத்தை உருவாக்குவதானது அவ்வளவு இலகுவான ஒரு விடயம் அல்ல. பல எதிர்ப்புகளை தாண்டியே உருவாக்க வேண்டும். அதிலும் இந்த குறுந்திரைப்படத்தை முதலில் உருவாக்க எண்ணிய போது சிலர் நகைப்புக்கு உட்படுத்தினார்கள். எத்தனை முறை தான் மலையகத்தில் பிரச்சினை தொடர்பாகவே பேச வேண்டும். ஏன் நல்ல விடயங்கள் இல்லையா? என்ற கருத்துக்களையும் தெரிவித்தனர் அது உண்மை என்றாலும் கூட இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று ரீதியிலே நான் இக் கதையை தெரிவு செய்தேன்.
மேலும் தோட்டப் புறங்களில் கேமராக்களை பயன்படுத்தி தோட்டத் தொழிலாளிகள் சார்ந்து படப்பிடிப்புகளை ஒளிப்பதிவு செய்வது என்பதும் அத்தனை இலகுவானது அல்ல. அதன்படி தோட்ட நிர்வாகத்தை மையப்படுத்திய படப்பிடிப்பு களத்திற்கு சென்று அதனை தயார் செய்வது என்பது எனக்கு மிகப்பெரிய கடினமாக இருந்தது . இருப்பினும் கிடைத்த குறுகிய நேரத்திலே அவ்வாறான படப்பிடிப்புகளை என்னால் செய்யக் கூடியதாக இருந்தது. அதுபோலவும் குறுந்திரைப்படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் முன் அனுபவமற்றவர்கள் என்பதால் அவர்களை தயார்ப்படுத்தி நடிக்க வைப்பது சவாலாகவே இருந்தது.
அத்தோடு இந்த கதையின்படி அதிகாலை 5 மணியளவிலும் , இரவு வேளைகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் அதிகாலை 5 மணி காட்சிகளை எடுப்பதற்கு நான் 3 மணி அளவில் எழுந்து தயார்ப்படுத்தல்களை செய்ய வேண்டும். அக்காலம் கடுமையான குளிர்காலம் என்றப் படியினால் அதற்கு ஏற்றாற் போல நான் செயல்பட வேண்டும். இவ்வாறான நிலையில் நடிகர்களையும் அது தொடர்பான தொழில்நுட்ப விடயங்களையும் தயார் செய்வதற்கு அந்த அதிகாலைப் பொழுது என்பது மிகப்பெரிய கடினமான தன்மையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்த படப்பிடிப்பானது மலையகத்தில் உருவாகிய நிலையில் என்னுடைய பரீட்சைக்கும் நான் தயாராக வேண்டிய ஒரு நிலை இருந்தது. இந்த குறுகிய காலப்பகுதியில் என்னுடைய கல்வி வேலைகளையும் நான் பார்த்துக் கொண்டு இதற்காகவும் என்னை அர்ப்பணித்த போது ஒரு சில சவால்களும் எனக்கு ஏற்பட்டது. இருப்பினும் இது அனைத்துமே நல்ல ஒரு படைப்பை உருவாக்குவதில் எனக்கு துச்சமாகவே தெரிந்தது அதனால் திரைப்பட குழு இவற்றை பொருட்படுத்தவில்லை.
கேள்வி: ஒரு மாணவனாக இருக்கும் பொழுது இப்படைப்பை உருவாக்க வேண்டியதன் காரணம் என்ன ?
என்னுடைய துறையானது ஊடகக் கற்கைகள் துறையின் பாடத்திட்டத்திற்கமைவாக குறுந்திரைப்படங்களை உருவாக்குவது கட்டாயமானது. அதன்படி பாடத்தின் வழியாக முக்கியமான ஒரு விடயத்தை பேச வேண்டும் என்பதற்காகவே இந்த கதையினை தெரிவு செய்தேன். ஒரு ஊடகத்துறை மாணவனாகவும் திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவனாகவும் திரைப்படங்களை எப்படி உருவாக்க வேண்டும், தொழில்நுட்பம் , கலை ரீதியாக எனக்கு ஆழ்ந்த கல்வி புலமை இருந்ததன் காரணமாக உருவாக்கத்தில் எனக்கு இலகுவாக இருந்தது.
அத்தோடு ஒரு துறை சார்ந்து கல்விப் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய துறை சார்ந்து அவர்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டிய பொறுப்புகள் அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் ஒரு ஊடகத்துறை மாணவனாக என்னுடைய சமூகம் சார்ந்த பிரச்சினையை என்னுடைய துறை சார்ந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதன் காரணமாகவே ஒரு ஊடகத்துறை மாணவனாக இந்த குறுந் திரைப்படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளேன்.
கேள்வி: இக்குறுந்திரைப்படத்தில் தவறவிட்ட விடயம் என எதனை எண்ணுகின்றீர்கள் ?
இக்குறுந்திரை படத்தில் தவறவிட்டதாக எண்ணுவது தொழில்நுட்ப செயற்பாடுகளாகும். என்னதான் ஒரு சிறந்ததொரு கதையை நாம் உருவாக்கினாலும் வெளியில் பேசப்படும் பொழுதும், அதனை சர்வதேச ரீதிக்கு கொண்டு செல்லும் பொழுதும் தொழில்நுட்ப ரீதியில் நாம் விடுகின்ற தவறுகள் அந்த கதையை வலுவிழக்க செய்கின்றது. இருப்பினும் அதனை மீறி இருக்கின்ற ஒரு சில கதைகளே இவ்வாறான விருதுகளை பெறுகின்றன.
அதனால் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் பொழுது நாம் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் ஓரளவு பலமாக இருந்தாலும் உலக அளவிலான குறுந்திரைப்படங்களை உருவாக்குவதற்கான தொழில் சிறந்த தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். அதேபோல இதில் நடிகர்கள் யதார்த்தமாக இருப்பினும் ஒரு சில நேரங்களில் நடிகர்களுடைய நடிப்பு போதாமையை நான் அவதானித்திருக்கின்றேன். இருப்பினும் அந்த காலத்தின் தேவைக்கேற்ப அவர்களை நடிக்க வைத்திருந்தாலும் உண்மையிலே யதார்த்தமாக நடிக்கக்கூடிய சில நடிகர்களை தேர்வு செய்து இதற்கு பயிற்றுவித்து அவர்களை நடிக்க வைக்கும் பொழுது செம்மையாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
கேள்வி: சமூகத்தில் இதன் பேசும் பொருள் தன்னை எவ்வாறு இருக்கின்றது?
பதில்: இந்த குறுந்திரைப்படத்தை பார்த்த அனைவரிடமிருந்துமே அதிகப்படியான பாராட்டுதல்களும் ஊக்கம் தரும் வார்த்தைகளுமே வெளிப்பட்டிருந்தது. அந்த சமூகம் சார்ந்தவர்கள் மட்டுமன்றி எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி முதலில் அவர்கள் கூறுவது
‘ இப்படி ஒரு படைப்பு சமூகத்தினுடைய மாறுதல்களுக்கு கட்டாயம் வாய்ப்பளிக்கும்” என்று கூறுவதோடு என்னிடம் இப்படி ஒரு படைப்பை உருவாக்கியதற்காக நன்றி என்று கூறுவார்கள். ஒரு சில வெளிநாட்டவர்களும் கூட இந்த குறுந் திரைப்படத்தை பார்த்த பிறகு கூறுகின்ற வார்த்தையாகவும் இவை இருக்கின்றன. அத்தோடு சமூகம் சார்ந்தவர்களும் இதனை பார்த்துவிட்டு அவர்கள் சிந்தனைகளும் இந்த சமூகத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் இன்னும் அடிநிலையிலிருந்து நாம் மீளவில்லை கட்டாயம் மீண்டும் வரவேண்டும் என்ற ஊக்கம் தரும் விடயங்களே அவர்களுக்குள் எழ வேண்டும் என்பதை என்னுடைய நோக்கமாக இருந்தது அது கட்டாயம் இதை பேசும் பொருளாக மாற்றி அவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகின்றேன்.
கேள்வி: ஒரு இயக்குநராக நீங்கள் இக குறுந்திரைப்படத்தை உருவாக்கியதில் வெற்றி கண்டுள்ளீர்களா? அது குறித்து உங்களுடைய கருத்து
கட்டாயமாக நான் வெற்றி பெற்றுள்ளேன், காரணம் இந்த குறுந்திரைப்படத்தை உருவாக்கி இத்தனை விருதுகளை பெற்றதல்ல என்னுடைய வெற்றி இந்த குறுந் திரைப்படத்தை பார்த்த அனைத்து பார்வையாளர்களுமே இந்த சமூகம் கட்டாயம் மேலெழுந்து வர வேண்டும் சமூகத்தில் பாரியதொரு மாற்றம் வர வேண்டும் என்று அந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த படைப்பை நான் உருவாக்கி இருக்கின்றேன். இதனை பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்களுமே அதற்கான வழிகளை கட்டாயம் செய்வார்கள் அந்த அடிப்படையில் ஒரு இயக்குநராக நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று எண்ணுகின்றேன்.
கேள்வி: வளர்ந்து வரும் இளம் கலைஞராக திரைத்துறை சார்ந்த உங்களுடைய கருத்து என்னவாக இருக்கின்றது
இன்று மலையக சமூகம் சார்ந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை சார்ந்தும் பல்வேறு புதிய புதிய கலைஞர்கள் தங்களுடைய ஆர்வத்தினை இந்த குறுந்திரைப்படங்கள், முழு நீள திரைப்படம் மூலமாகவும் வெளிக்காட்டி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் மக்களானவர்கள் ஆதரவு கொடுப்பதோடு அவர்களிடம் இருக்கக்கூடிய விமர்சனங்களையும் அவர்களுக்கு ஏற்றார் போல் கூறி அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
மக்களுடைய ஆதரவும் அவர்களுடைய அங்கீகாரமுமே நாளைய முக்கியமான இயக்குநர்களை உருவாக்க வாய்ப்பு அளிக்கும் தென்னிந்தியா மற்றும் ஏனைய சினிமாக்களை பார்த்து நாம் ஆச்சரியப்படும் அதே அளவு ஒரு நாள் எம்முடைய இலங்கை தமிழ் சினிமாவும் வரக்கூடிய ஒரு தன்மை காணப்படும். அதற்கு மக்களானவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அதேபோல வளர்ந்து வரும் இயக்குநர்களும் தங்களுடைய படைப்புகளை தரமானதாக மக்களுக்கு ஏதேனும் ஒரு விடயத்தை சொல்லக்கூடியதாக உருவாக்க வேண்டும் வெறுமனே மசலா சினிமாவாக இல்லாமல் அது யதார்த்தத்தை பேசக்கூடிய விதத்தில் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது .
கேள்வி: அடுத்த உங்களுடைய படைப்பு தொடர்பான ஏதேனும் விடயங்களை கூற முடியுமா
நான் தற்போது அடுத்து ‘பெத்த மனசு’ என்ற ஒரு குறுந்திரைப்படத்தை உருவாக்க இருக்கின்றேன். அதனுடைய திரைச் சுவடிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இனி தயாரிப்புகளில் மட்டுமே ஈடுபட இருக்கின்றேன். அதனை முடித்த பிறகு என்னுடைய முழு நீள திரைப்படத்திற்கான திரைச்சுவடியையும் அமைத்திருக்கின்றேன். அந்த திரைச்சுவடிகளில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழு நீள திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாகவும் இருக்கின்றது. அதனை கூடிய விரைவில் கட்டாயம் செய்து இந்த சமூகத்தின் பிரச்சினை அதன் மூலமாகவும் பேசுவேன் என எண்ணுகின்றேன்.
இளங்கோவன் நிரோஷிகா,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM