16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே, செந்தூரப்பூவே...’ என்ற பாடலுக்கு இன்றளவும் இரசிகர்கள் குறைந்தபாடில்லை. நடிகை ஸ்ரீதேவியின் இளமை துள்ளும் பேரழகை அழகாக காட்டிய அந்த பாடல், ஜானகியின் தேன் குரலை எமது செவிகளுக்குள் பாய்ச்சியிருந்தது.
இரசிகர்களால் ஜானகி அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் இந்த தேன் குரல் நாயகிக்கு இன்று 87ஆவது பிறந்த தினம். ஆனால், எத்தனை வயதானபோதும், அவர் குருலுக்கு மட்டும் வயதாகாது போலும். அப்படிப்பட்ட குரல் அவருக்கு.
ஒரே நேரத்தில் சிறு குழந்தையாகவும், இளம் நாயகியாகவும், வயதான தாயாகவும் பாட இவரால் மட்டுமே முடியும். அத்தனை பாவங்களையும், இம்மியளவும் பிசகாமல், தன் குரலால் அவ்வளவு அழகாக நமக்கு தருவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமேயென்றால் மிகையாகாது.
செந்தூரப்பூவே பாடல் பாடும் போது, அவரின் வயது 40ஐ கடந்திருந்தது. ஆனால், ஒரு 16 வயதுப் பெண்ணின் உயிரோட்டம் அவரின் குரலில் சர்வ சாதாரணமாகத் தெரிந்தது. இதற்காகவே அவருக்கு முதல் தேசிய விருதும் கிடைக்கப்பெற்றது.
தொடர்ந்து பல விருதுகளையும், பரிசுகளையும் வென்று, இசையின் காதல் அரசியாக விளங்கிய ஜானகி, திரையில் ஜொலிக்கக் காரணமே அவர் காதல் கணவர் தானாம்.
இது பற்றி ஜானகி ஒரு நேர்காணலில், ”என் திரைப்பயணத்துக்காக, தன் வாழ்வையே தியாகம் செய்தவர் என் கணவர். அவர் என் ஒவ்வொரு பாடலையும் காதலித்தார்... அவரின்றி நான் இன்று இந்த இடத்தில் இருக்க முடியாது!” என நெகழிச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலம்
1938இல் ஆந்திராவில் பிறந்த எஸ்.ஜனகிக்கு, சிறு வயதிலிருந்தே இசையில் அலாதி பிரியம். பாலர் பருவம் தொட்டே, பல மேடைகளில் பாடி அசத்தினார். இளம் வயதில், பல இசைக் கச்சேரிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி தன் திறமையை வெளிக்காட்டினார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவருக்குப் பழக்கமானவர் தான் ராம்பிரசாத். ஆரம்பத்தில் இருவரும், நல்ல நண்பர்களாக பழகினார்கள்.
ஜானகியின் இசைத் திறமையை நன்கு அறிந்த ராம்பிரசாத், ஜானகி திரை இசையில் ஜொலிக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக வேண்டி பல முயற்சிகளையும் முன்னெடுத்தார். தனது தந்தையிடம் கூறி, ஏ.வி.எம்.கலையகத்துக்கு கடிதம் எழுதினார். அதுவே, ஜானகியின் இசை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து, நண்பர்களாக இருந்த ராம்பிரசாத் மற்றும் ஜானகி இருவரும் காதலர்களாக மாறினார்கள்.
அவர்கள் காதல், திருமணத்தில் முடிந்தது. 1956ஆம் ஆண்டு இருவரும், திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். அதற்கு ஒரு வருடத்துக்குள் ஜானகி தனது முதல் பின்னணிப் பாடல் வாய்ப்பையும் பெற்றார். அதிலிருந்து அவர் பயணம் ஆரம்பமானது. அன்றைய இளசுகளையும். இசை இரசிகர்களையும் தன் பால் சுண்டி இழுத்தது அவர் குரல். இதற்கு அவருடன், பக்க பலமாக இருந்தது அவர் காதல் கணவர் தான். ஜானகியின் ஒவ்வொரு படியிலும் ராமு அவர் கூடவே இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும், தன் மனைவி அருகிலேயே இருந்தார். அவர்களின் காதல் வாழ்க்கை, காதலர்களுக்கும், தம்பதியினருக்கும் ஒரு எடுத்துக் காட்டாகவே இருந்தது.
இது பற்றி ஜானகி ஒரு நேர்காணலில் பேசும்போது, "எனது ஒவ்வொரு பதிவு நிகழ்ச்சிக்கும் என் கணவர் என் கூடவே வந்தார். அவரை விட்டு நான் எங்கும் போகவில்லை; அவரும் என்னை விட்டுப் போகவில்லை" என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
யார் கண் பட்டதோ, 1997ஆம் ஆண்டு, ராம்பிரசாத் மண்ணுலகைவிட்டு பிரிந்தார். அவர் பிரிவு, ஜானகியை நிலைதடுமாறச் செய்தது. உலகமே அழிந்தது போலிருந்தது அவருக்கு. தன் காதல் கணவர் இல்லாத உலகில் தன்னாலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார். ஆனால், தானும் இல்லையென்றால் தன் ஒரே மகனின் கதி என்னாவது என்ற கேள்வி, அவர் எண்ணங்களை மாற்றியது.
சிறிது சிறிதாக, பழைய நிலைக்குத் திரும்பினார். மீண்டும், திரை இசையில் மின்ன ஆரம்பித்தார். ஆனால், பெண்கள் அதிகம் நேசிக்கும் பூ, பொட்டு, ஆபரணங்கள் என அனைத்தையும் துறந்தார்.
நெற்றியில் பெரிய வடிவிலான பொட்டு தான் அவரின் அடையாளமே. பட்டுப் புடவை, தலை நிறைய பூக்கள், நெற்றி நிறைய பூ, தங்க ஆபரணங்கள் என ஜொலித்த அவர், ஒரு சிறு நகை கூட அணியாமல், வெள்ளைப்புடவைக்கு மாறினார். இன்று வரையும் அப்படித் தான் இருக்கின்றார்.
மறைந்த தன் கணவர் பற்றி அவர் பேசுகையில், “என் கணவர் என் கூடவே இருந்தார்.. இருக்கிறார்.. என்றும் இருக்கப்போகிறார்” என்று தான் கூறுவார்.
விருதுகளும் விமர்சனங்களும்
சுமார் 17 மொழிகளில், 48, 000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஜானகி, மூன்று தேசிய விருதுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றவர்.
2013-இல், இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், “மிக தாமதமாக வந்த மதிப்பு இது. தென்னிந்திய கலைஞர்களுக்கு மதிப்பீடு குறைவாகவே உள்ளது” என்று கூறி, அந்த விருதைப் பெற மறுத்தார். அது, தென்னிந்திய இசை இரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது.
தமிழில், எம்.எஸ்.விஸ்வநாதன் முதல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா முதல் இன்றைய அனிருத் வரையிலும் அனைத்து இசை ஜாம்பவான்களின் இசையமைப்பிலும் பாடியுள்ள ஜானகி, 2017 உடன் திரையில் தன் ஓய்வை அறிவித்தார்.
ஆனால் அவர் பாடிய பாடல்கள், இன்னும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணாவும், இசைப் பயணத்தைத் தொடர்கிறார்.
அந்த வகையில், பல்லாயிரம் பாடல்களைப் பாடிய ஜானகி அம்மாவின் வாழ்க்கை, வெறும் ஒரு பாடகியின் சாதனை அல்ல… அது ஒரு உன்னதமான காதலின் வெற்றிக் கதை என்றால் மிகையல்ல.. இசையை இழைத்த கணவன், இசையை உயிராய் கொண்ட மனைவி, இருவரும் சேர்ந்து உருவாக்கிய காதல் காவியம்.
இன்றும் அவர்களின் இசையும் காதலும், காலங்கள் பல கடந்தும் உயிர்வாழ்கின்றன.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா…!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM