மூட நம்பிக்கைகளால் நிறைந்த பாம்புகள்

22 Apr, 2025 | 03:24 PM
image

பாம்புக்கு நடுங்காதவர் யாரும் இல்லை எனலாம். உலகில் எத்தனையோ விதமான விஷ ஜந்துகள் இருந்தாலும், நாம் அனைவரும் அதிகம் பயப்படுவது பாம்புக்குத் தான். பாம்பு பற்றிய மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை. 

குறிப்பாக பாம்பு என்றாலே, அது கொடிய விஷ ஜந்து என்று தான் பலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மையில்லை.

உலகம் முழுவதும் 3,5000-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இதில், 600 வகையானவை மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இது பாம்புகளில் 25 சதவீதத்திற்கும் குறைவு. அதிலும், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாம்புகளில் 200 இனங்கள் மட்டுமே உள்ளன. எனவே, எல்லா பாம்புகளையும் கண்டு, நாம் பயப்படத் தேவையில்லை.

மேலும், உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது பாம்புகள் தானாம். அனைத்து மதங்களிலும் பாம்புகள் அதிக பங்கு வகிக்கிறது. இருந்த போதிலும் அவை தான் அதிக அளவில் கொல்லப்படுகின்றனவாம்.

பாம்புகளால் ஏற்படும் நன்மைகள்

கொடிய விஷ ஜந்து என நாம் பயந்து நடுங்கும் பாம்புகள், நமக்கு பலவகைகளிலும் நன்மை பயக்கின்றன. அதாவது, தானியங்களை அழிக்கும், பலவித நோய்களை ஏற்படுத்தும் எலிகளை அவை, கொல்கின்றன.

குறிப்பாக, பாம்புகள் இல்லையென்றால் உணவுச்சங்கிலி அழிந்துவிடும். இது நமது சூழலியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையில் உணவுச் சங்கிலி முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில், பாம்புகளை சிலர் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள். அத்துடன், பல நாடுகளில், பாம்புக் கறிதான் அநேகரின் அபிமான உணவாகவும் இருக்கின்றது. இதற்காகவே, சில நாடுகளில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.

பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை...?

ஒருவரை பாம்பு தீண்டிவிட்டால், அவர் உடம்பில் விஷம் ஏறி, உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிடும், வாயில் நுரை தள்ளும் என்பதெல்லாம் உண்மையில்லை. 

எனவே உடல் நீலமாக மாறவில்லை, வாயில் நுரை தள்ளவில்லை ஆகையால், விஷம் இல்லை என்று முடிவு செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து விடாதீர்கள். பாம்பு கடித்ததற்கான விஷப் பல்லின் அடையாளம் உடலில் இருந்தால் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அதுபோல், ஒருவரை விஷ பாம்பு தீண்டினால் உடனே அவர் இறந்துபோவார் என்பதும் உண்மையில்லை. ஏனெனில் பல நேரங்களில் பாம்புகள் கடிப்பதோடு நிறுத்திவிடுகின்றன. அவை விஷத்தை உடலில் செலுத்துவதில்லை. அப்படியே உடலில் விஷம் செலுத்தப்பட்டாலும்கூட, சிலவகை பாம்புகளின் விஷம் உயிரைப் பறிக்க சராசரியாக மூன்று நாட்கள் வரை கூட ஆகும்.

இருப்பினும், விஷத்தினால் ஏற்படும் மரணத்தை விட பயத்தினாலும், அதிர்ச்சியினாலும் தான் அதிக மரணம் நிகழ்வதாக தெரியவருகின்றது. எனவே பாதிக்கப்பட்டவருக்கு நாம் முதலில் கொடுக்க வேண்டிய சிகிச்சையே தைரியம்தான்.

அதேசமயம், பாம்பு தீண்டியவுடன் இதயத்துடிப்பு குறையும். ஏனென்றால் பாம்புவிஷம் உடலில் மிக மெதுவாக பரவவேண்டும் என்பதற்காக மூளை எடுக்கும் ராஜதந்திர நடவடிக்கை அது. அதனால் நாம் பாம்பு கடிபட்டவருக்கு பயத்தை உண்டாக்கி, இதயத்துடிப்பை வேகமாக்கி விரைவாக விஷம் உடல் முழுக்க பரவ வழிசெய்துவிடக்கூடாது.

எனவே சம்பந்தப்பட்ட நபரை பரபரப்பில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்யவும். அதே வேளையில் பாம்புக்கடித்தவரை எழுந்து நடக்கவிடவும் கூடாது. நடப்பதாலும், ஓடுவதாலும் இரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் விஷம் வேகமாக பரவ வழிவகுத்துவிடும்.

எனவே உடம்பில் அதிக அளவில் அசைவை ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, பாம்பு கடித்த கடிவாயை கண்டிப்பாக நீரினால் சுத்தம் செய்தல் கூடாது. அதுபோல், பாம்பு கடித்த இடத்தில் கத்தியால் கீறி விஷத்தை வெளியே எடுக்க முயற்சிப்பதும் மாபெரும் தவறாகும். ஏனெனில் பல வகையான பாம்புகளின் விஷங்கள் இரத்தத்தை உறையவிடாமல் நீர்த்துப்போக செய்யும் குணம் கொண்டதாகவே உள்ளது.

சிலவகை பாம்புகளின் விஷம் மட்டுமே இரத்தத்தை உறையச் செய்யும் குணம் கொண்டதாக உள்ளது. எந்தவகையான பாம்பு தீண்டியது என்று தெரியாமல் தீண்டிய காயத்தில் கத்தி வைத்து கீறி விட ஆரம்பித்தீர்கள் என்றால் அவ்விடத்தில் இரத்தம் உறையாமல் ஆறு போல் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடும். அடுத்த 5 நிமிடத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கவும் வாய்ப்புண்டு.

அடுத்தது, பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதுடன், பாம்பு விஷத்தை நீக்குவதற்கு நாட்டு வைத்திய சிகிச்சைகளோ, மூலிகை சிகிச்சைகளோ எந்தவிதத்திலும் பயன்தராது என்பதனையும் கவனத்திற் கொள்வது சிறந்தது.

ஆகவே, பாம்புக்கடியைப் பார்த்து பயந்து அலறி ஓடாமல், சிறிது நிதானமாக செயற்பட பழகிக் கொள்ளுங்கள், அதுபோல், பாம்பு என்றவுடனேயே அலறித்துடிக்கும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்…!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்