என்.கண்ணன்
தமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்களின் பக்கம் தமிழ் கட்சிகளால் இழுக்க முடியாது என, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கூறியிருக்கிறார்.
உள்ளூராட்சி தேர்தலில், தேசிய மக்கள் சக்தி, வடக்கில் கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் அவரது இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், இப்பொழுது தனக்கு நிகரான ஒரு அரசியல் கூட்டணி இலங்கையில் இல்லை எனக் கருதுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு கிடைத்த ஆசனங்களும் வாக்குகளும் ஆளும்கட்சியினரை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.
இதற்கு முன்னர் மூன்றில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும், தமிழ் மக்களின் நம்பிக்கையையோ வாக்குகளையோ பெற்றிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தான் அமைச்சர் விஜித்த ஹேரத் போன்றவர்களை, இப்படிப்பட்ட ஒரு நினைப்பில் மூழ்கச் செய்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் எந்த ஒரு தரப்புக்கும் இதுபோன்ற மமதை வருவது இயல்புதான்.
ஜே.ஆர்.ஜயவர்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றிருந்த போது எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியோ பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக் ஷவும் கோட்டாபய ராஜபக் ஷவும் எவ்வாறெல்லாம் நடந்து கொண்டனர் என்பதையும் கண்முன் கண்டவர்கள் என்பதால், தேசிய மக்கள் சக்தியின் இந்த நினைப்பை பற்றி யாரும் ஆச்சரியப்படவில்லை.
ஆனால், ஜே.ஆரும், மஹிந்த ராஜபக் ஷவும், கோட்டாபய ராஜபக் ஷவும் அடைய முடியாத ஒரு இலக்கை, தேசிய மக்கள் சக்தி அடைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு சவாலாக -தமிழ் மக்களின் வாக்குகளையும் ஆசனங்களையும் அது கைப்பற்றி இருக்கிறது என்பதே அது.
முன்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும் தமிழ் மக்களின் வாக்குகளையோ ஆசனங்களையோ பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை இருந்திருக்கவில்லை.
ஆனால், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதையுமே செய்யாமல்- அவர்களை அழிவுகளுக்குள்ளே தள்ளி, இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து விட்டு, வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்கிக் கொண்டு தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டது ஆச்சரியம் தான்.
இதன் மூலமாக தாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்கிறது அந்தக் கட்சி.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தாங்களே அவர்களுடன் நேரடியாக தீர்த்துக் கொள்கிறோம், தமிழ் கட்சிகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
தமிழ் தேசிய கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கித் தள்ளி, செல்வாக்கற்றவர்களாக தூக்கி எறிந்து விட்டு, சிங்கள தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் தமிழ் தேசிய அரசியலை மூழ்கடித்து விட முயற்சிக்கிறது.
காலப்போக்கில் தமிழ்த் தேசிய அரசியல் என ஒன்றே இல்லாத வகையில், அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கும், முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதற்கும், தேசிய மக்கள் சக்தி தனது அதிகபட்ச அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்கிறது.
2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்திய போது, எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்த விடாமல் குழப்பம் விளைவித்து, போராட்டங்களை நடத்தி, தமிழர்களுக்கு என எதுவுமே கிடைக்காமல் செய்தது ஜே.வி.பி.
2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரணக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தடுத்தது.
2006 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு இணைப்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இல்லாமல் செய்து, தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதிலும் அது வெற்றி கண்டது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை போருக்குள் தள்ளிவிட்டு விடுதலைப் புலிகளை அழிக்கச் செய்ததிலும், தமிழரின் அரசியல் போராட்டத்தை இன்றைய வெறுமை நிலைக்குள் தள்ளியதிலும், ஜே.வி.பியின் பங்கு கணிசமானது.
ஆக, தமிழ் மக்கள் தமது ஆயுத பலத்தை கொண்டு, அரசியல் ரீதியான பலத்தை பெற்று விட முடியாதபடி தடுத்து, அவர்களின் அரசியல் போராட்டத்தை அழிப்பதில் முனைப்புடன் செயல்பட்ட ஜே.வி.பி, இப்பொழுது அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டத்தையும் இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்படுகிறது.
தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகளையும், தேசிய இனப்பிரச்சினையையும், பொருளாதாரப் பிரச்சினையாக மாற்றி, தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டு விட்டன என்று நியாயப்படுத்துவது தான் அதன் இலக்கு .
இதன் ஊடாக தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் தமது உரிமைக்காக மீண்டும் குரல் எழுப்ப முடியாதபடி- வெகுண்டெழ முடியாதபடி தடுத்து, அவர்களை மடைமாற்றம் செய்யும் வேலையை, மிகத் துல்லியமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி .
தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்த தரப்புகளின் தவறுகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த திட்டத்துக்கு துணை போய்விட்டதை மறுக்க முடியாது.
இத்தகைய கட்டத்தில் தான், தமது பக்கம் வந்துவிட்ட தமிழ் மக்களை தமிழ் தேசிய கட்சிகளால் மீண்டும் பழையபடி தங்களின் பக்கம் கொண்டு செல்ல முடியாது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார் விஜித்த ஹேரத்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமது கட்சிக்கு பெருவாரியாக ஆதரவை வழங்குவார்கள், தம்மால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற நினைப்பில், அந்த கட்சி இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகளை முற்று முழுதாக ஓரங்கட்டி ஒதுக்கி தள்ளிவிட்டு தங்களால் வடக்கு, கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று அந்த கட்சி நம்புகிறது.
இந்த நம்பிக்கை எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது.
ஆனால், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சிங்கள தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
சந்திரிகா குமாரதுங்கவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்று விட முயற்சித்தார். விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டு, ஈ.பி.டி.பி. மற்றும் சில தமிழ் அமைப்புக்களுடன் சேர்ந்து தமிழர்களின் மனதை வென்று விடலாம் என நினைத்தார். மஹிந்த ராஜபக் ஷவும் அவ்வாறே முயற்சித்தார்.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தல் நடந்தபோது, மஹிந்த ராஜபக் ஷ தரப்பு, வெற்றி குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.
ஆனால், அந்த தேர்தலில் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியான பாடத்தைக் கற்பித்திருந்தார்கள். தமிழ் மக்களின் தலைவர்கள் சிலர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். தவறான முடிவுகளை எடுக்க எடுத்திருக்கலாம்.
ஆனால், தமிழ் மக்களை, சிங்கள தலைமைகள் வழிநடத்துகின்ற அளவுக்கு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை, தமது தலைவிதியை தீர்மானிக்கும் உரித்துடையவர்கள்.
தமிழ் மக்கள், சிங்கள தலைவர்களிடம் தமது இறைமையையோ சுயநிர்ணய உரிமையையோ அடமானம் வைக்க துணியமாட்டார்கள் என்று எதிர்பார்ப்பு தமிழ் தலைவர்களிடம் இருக்கிறது.
இவ்வாறான நிலையில், விஜித்த ஹேரத்தின் நம்பிக்கை எந்தளவுக்கு சரியானது என்பதை, தமிழ் மக்களின் வாக்குகள் தான் தீர்மானிக்கப் போகின்றன.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM