விசித்திர மரணத்தைத் தழுவும் கும்பிடுபூச்சி…!

16 Apr, 2025 | 03:22 PM
image

பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில், தாவரங்களின் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும் கும்பிடுபூச்சிகள், வேட்டையாடிப் பூச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை ‘பிரேயிங் மேன்டிஸ்’ (Praying mantis) எனஅழைப்பார்கள். 

இவை தன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகின்றன. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வகைகள் உண்டு.

தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும் இவை, பெரும்பாலும் தனியாகவே இருக்கும். கும்பிடும் தோற்றத்தில் இருப்பதால், கும்பிடுபூச்சி என்று பெயர்பெற்றன.

பூச்சிகளை வேட்டையாடி சாப்பிடும் திறன் கொண்ட இவை, தன் முன்னங்கால்களில் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பின் மூலம், மற்ற பூச்சிகளை வேட்டையாடி சாப்பிடும் திறனுடையவை. இளம்பூச்சிகள் கருப்பு நிறத்தில் எறும்பு போன்ற தோற்றத்துடன் இருக்கும். வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறம், பழுப்பு நிறம் என்று ஒரு நிலையிலும் உறுமாறும் பூச்சியாகும்.

இனி விடயத்துக்கு வருவோம். உலகின் விசித்திரமான சில மரணங்களில் இவற்றின் மரணமும் அடங்கும். தன் இணையை, ஏமாற்றி, கொடூரமாக கொன்று தின்கின்றன இந்த வகை பெண்பூச்சிகள்.

பெரும்பாலும் கூட்டமாகத் திரியாமல் தனியாக இரையைத் தேடி அலையும் இவை, மற்ற பூச்சிகளை உண்டு வாழக்கூடியவை. முதிர்வயதை அடைந்த இவ்வகை பெண்பூச்சியானது, தன் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற ஆணை தேடி அலைகிறது. இவ்வாறு தேடி அலையும் அந்த பெண்ணுக்கு, தனக்கேற்ற ஆண் கிடைத்தவுடன் அந்த ஆணிடம் தன் சாதுவான பேச்சையும், அழகையும் பயன்படுத்தி தன் பக்கம் இழுக்குமாம். பெண்ணின் ஆசைவார்த்தையை நம்பி, ஆண்பூச்சி, பெண்பூச்சி மீது காதல் கொள்கிறது.

இவ்வாறு நடந்த பின்பு இரண்டும் சேர்ந்து ஆனந்தமாக இருக்கின்றன. பெண்பூச்சி ஒரு கட்டத்தை கடந்த பின்பு, இரண்டும் சேர்ந்து கலப்பு செய்கின்றன. இது நடந்து முடிந்த பின்பு, பெண்பூச்சி, தன் தலையை காதல் பொங்கிய முகத்துடன் ஆணின் கழுத்தருகே கொண்டுசெல்லும். தனக்கு நடக்கவிருக்கும் பெரும்கொடுமையை உணராத அந்த ஆண்பூச்சி, பெண்பூச்சியை தன் கழுத்தருகே வர அனுமதிக்கும். அதன் அருகில் சென்றவுடன், பெண்பூச்சி, தனது கூரிய பற்களைப் பயன்படுத்தி ஆணின் தலையை கொய்து தன் கோரகுணத்தைக் காட்டும்.

பின்னர், அந்த தலையை தனியே எடுத்து சென்று முழுமையாக சாப்பிட்டுவிடும். பிறகு தனது குழந்தைகளைப் பெறும் காலம் வரை ஓய்வெடுத்துக்கொள்ளும். இவ்வாறு நடந்த பின்பு அடுத்த இனப்பெருக்க காலம் வரும்பொழுதும், இதேபோன்று ஒரு நாடகத்தை நிகழ்த்தி அடுத்த ஆணை குறிவைத்து மரணத்தை நிகழ்த்துமாம்.

இந்த பூச்சி இனத்தை சேர்ந்த ஒவ்வொரு ஆணும், தானும் பிற்காலத்தில் இதேபோன்று ஒரு பெண்ணிடம் தன் தலையை இழக்க நேரிடும் என்பதை உணராமல் தினசரி வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றன.

இப்படி விசித்திர மரணத்தைத் தழுவும் கும்பிடுபூச்சிகள், இயற்கையின் இன்னுமோர் அதிசய பிறவிகள் என்கின்றனர் விலங்கியல் நிபுணர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்