(நெவில் அன்தனி)
லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 30ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை எதிர்த்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் மிகவும் பரபரப்பான முறையில் 3 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி வந்த சென்னை சுப்பர் கிங்ஸுக்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.
ஷிவம் டுபே, எம்.எஸ். தோனி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 57 ஓட்டங்கள் சென்னை சுப்பர் கிங்ஸை வெற்றி அடையச் செய்தது.
எனினும், அணிகள் நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் தொடர்ந்தும் கடைசி இடத்தில் இருக்கிறது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் கடும் சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசையில் மிச்செல் மார்ஷ் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். அதிரடி வீரர்களான ஏய்டன் மார்க்ராம் (6), நிக்கலஸ் பூரண் (8) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் பிரகாசிக்கவில்லை.
16 ஓவர்கள் நிறைவில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், அணித் தலைவர் ரிஷாப் பான்ட் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களையும் அயூஷ் படோனி 22 ஓட்டங்களையும் அப்துல் சமாத் 20 ஓட்டங்களையும் பெற, கடைசி 4 ஓவர்களில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 48 ஓட்டங்களை குவித்தது.
பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
காயமடைந்து ஐபிஎல் இலிலிருந்து விலகிக்கொண்ட வழமையான அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாடுக்குப் பதிலாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு உள்வாங்கப்பட்ட அறிமுக வீரர் 20 வயதுடைய ஷய்க் ரஷீத் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஆரம்ப விக்கெட்டில் ரச்சின் ரவிந்த்ராவுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது ரச்சின் ரவிந்த்ரா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ராகுல் த்ரிப்பதி (8), ரவிந்த்ர ஜடேஜா (7), விஜய் ஷங்கர் (9) ஆகிய மூவரும் ஆட்டம் இழந்தனர்.
அப்போது 15 ஓவர்கள் நிறைவில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், ஷிவம் டுபே, அணித் தலைவர் எம்.எஸ். தோனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஷிவம் டுபே 37 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடனும் எம்.எஸ். தோனி 11 பந்துகளில் 4 பவுண்டறிகள். ஒரு சிக்ஸ் உட்பட 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: எம்.எஸ். தோனி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM