ஆலயங்களில், கொடிமரத்திற்கு அருகே பலி பீடம் இருக்கும். கொடிமரம் இல்லாத ஆலயங்களில் கூட பலிபீடம் என்பது நிச்சயம் இருக்கும். கொடிமரத்தை வழிபட்டு, பலி பீடத்தை வணங்கிய பிறகே ஆலயத்துக்குள் செல்ல வேண்டும் என்பது விதி.
அந்த வகையில், பலி பீட வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என இந்து சாஸ்திரம் தெரிவிக்கின்றது.
மூன்று அடுக்குகள் கொண்ட பீடத்தின் மீது தாமரை மலர் வடிவம் போன்ற அமைப்பு இருக்கும். சில கோவில்களில் பலிபீடங்கள் சிற்பங்களுடன் கூடியதாக இருக்கும்.
திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.
ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.
பலி பீடம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதே தெரியாமல் பலரும் அதை தொட்டு வணங்கி விட்டு செல்வார்கள். சில கோவில்களில் ஆடு, கோழி ஆகியவை பலியிடும் வழக்கம் உள்ளதால் இந்த பலிபீடங்கள் இத்தகைய விலங்குகளை வைத்து பலி கொடுப்பதற்கான இடம் என நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இது உயிர்களை பலியிடுவதற்கான இடம் அல்ல. நம்மிடம் உள்ள தீய குணங்களை, தீய எண்ணங்களை, எதிர்பார்ப்புக்கள், ஆசைகளை பலியிடும் இடமாகும். மனதில் தீய எண்ணங்கள், ஆசைகள் இருக்கும் ஒருவர் இறைவழிபடுகள் எவ்வளவு தான் செய்தாலும் அதை இறைவன் ஏற்க மாட்டார். அதே சமயம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, இறைவனிடம் முழுவதுமாக சரணாகதி அடைபவர்கள் உடனேயே இறைவன் இருப்பார்.
அந்தவகையில், இறைவனை நெருங்குவதற்குத் தடையாக உள்ள தீய குணங்களை அழிப்பதற்கான இடமே பலிபீடம் ஆகும்.
மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்?
நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.
எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும்.
ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவோம். இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம்.
உயிர்ப் பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானதாகும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும்.
முதலில், “நான் என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா?
ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது. பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமித்து, ஆசீர்வதிக்கும்.
மேலும், பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு, இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.
தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.
அதேசமயம், சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும், மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.
பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால், நம்மிடம் உள்ள தேவையற்ற காமம், ஆசை, கோபம் மற்றும் தீராத பற்று நீங்கி நெறி பிறழாத தன்மை உருவாகும். பேராசை, வஞ்சக குணம் வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆக பலி பீடம் மனிதனை மனிதனாக மாற்றுகிறது. எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும். அது நம்மை மேன்மைப்படுத்தும்.
கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலி பீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம்.
அதேசமயம், வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடத்தின் மீது நம் கை பட்டுவிட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM