(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அமெரிக்க ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டிருக்கும் வரி எமது நாட்டுக்கு அமுலாகினால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும். அதனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு சர்வ கட்சி மாநாட்டை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) பராட்டே சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவது தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழே இவ்வாறு கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அமெரிக்கா பரஸ்பர தீர்வை வரிகளை விதித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு இலங்கை நாடு 88 வீத வரி விதித்தமையால், அமெரிக்கா எம் மீது 44 வீத வரியை விதித்துள்ளது. இதனால் நமது நாட்டின் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது, இந்திய சந்தையில் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இந்த பாரதூரமான நிலைமை முழு நாட்டையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டினேன்.
இந்த வரி ஏப்ரல் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. ஏதேனும் ஒரு வகையில் இது விதிக்கப்பட்டால், நமது நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும். பொருளாதார ரீதியாக செயலற்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு சர்வகட்சி மாநாட்டை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காண வேண்டும்.
அத்துடன் நாட்டின் கைத்தொழில் துறையில் கணிசமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உட்பட முன்னைய எந்த அரசாங்கங்களும் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி விதிப்பால் இந்த தொழிற்துறையினர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தொழில் துறைகளும் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையினரை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
1990ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க வங்கிச் சட்டத்தால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு காணப்படும் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அதிகாரங்களை இடைநிறுத்திய காலம் 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன. பராட்டே சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏலம் விடும் அதிகாரங்களை இடைநிறுத்துவதை மேலும் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
இந்த நுண், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கையில், தற்போது அது மீண்டும் அமுலுக்கு வரவிருக்கிறது.
இந்தத் தொழிற்துறையினர் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதால் தான் இந்த சட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். கடந்த காலத்தில் பராட்டே சட்டம் கைவிடப்பட்டிருந்தாலும் இதனால் வேறு தீர்வுகள் இவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே, இந்த பராட்டே சட்டத்தை இடைநிறுத்தி, இத்தரப்பினருக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2024 மே 7ஆம் திகதி அன்று கோப் குழு பரிந்துரைத்ததன் பிரகாரம், பராட்டே சட்டம் மற்றும் அதன் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடத்தை மத்திய வங்கி தயாரித்துள்ளமையினால் அதனை சபையில் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நுண், சிறய மற்றும் நடுத்தர வியாபாரிகள், தொழில்முயற்சியாளர்கள் போலவே பாரிய மட்ட தொழில்முயற்சியாளர்களினது எத்தனை சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டன என்பது தொடர்பான விபரங்களை சபையில் முன்வைக்க வேண்டும்.
அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 263,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது?
பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இடைநிறுத்துவது மட்டுமன்றி, கடந்த காலங்களில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் மூடப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை புத்துயிர் பெறச் செய்வதற்கு ஈடுகட்டக்கூடிய விதத்திலான செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் கடனை தொடர்ச்சியாக கட்டாத காரணத்தால் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆகவே, இவர்களது இந்தக் கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்த நுண், சிறிய, நடுத்தர தொழில்துறையினரை பல முறை அமைச்சுக்களுக்கு அழைத்து வந்து முடிவுகள் எடுக்கப்பட்டாலும், வங்கிகளுக்கு அரசாங்கம் பரிந்துரைகளை வழங்காமையினால் அவர்கள் மேலும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இவர்களை தொடர்ந்தும் சும்மா அலைக்கழிக்காமல் நிலையான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM