மலையக மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்புக்கள் தொடரும் ; மலையகத் தலைவர்களிடத்தில் பிரதமர் உறுதி

Published By: Vishnu

06 Apr, 2025 | 04:25 AM
image

இந்தியவம்சாவளி மலையக மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்புக்கள் தொடரும் என்று மலையகத் தலைவர்களிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (5) கொழும்பில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மலையக மக்களின் தலைவர்களை சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், அக்கூட்டணியின் பிரதி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மலையக மக்களின் மேம்பாடு தொடர்பில் நாம் அதீதமான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தோம்.

அந்த வகையில் இந்திய வசம்சாவளி மக்களுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழாக தனிவீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அந்த திட்டம் அவ்வாறே முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். மாடிவீட்டுத்திட்;டங்களால் எமது மக்களின் நில உரிமைகள் இல்லாது போகும் ஆபத்துக்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்தோம்.

அச்சமயத்தில், இந்திய அரசாங்கத்தின் தனி வீட்டுத்திட்டம் அவ்வாறே தொடரும் என்று குறிப்பிட்டார். அத்தோடு அம்மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பு தொடரும் என்றும் உறுதியளித்தார்.

அதனையடுத்து நாம் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் உள்ள  இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் கீழாக முன்னெடுக்கப்படும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கான புலமைப்பரிசில்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்துடன், குறித்த அறக்கட்டளையின் ஊடாகவே மலையகத்துக்கான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

மேலும், மலையகத்தில் பெண்களுக்கான தாதியர் பயிற்சிக் கல்லூரியொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியொன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

குறித்த ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பயிற்சியாளர்கள் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டு நவீன பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

இதனைவிடவும், விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் இந்தியப் பல்கலைக்கழமொன்றின் வளாகத்தை முதற்கட்டமாக அங்குராட்பணம் செய்வதோடு தொடர்ச்சியான காலத்தில் அதனை இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அத்தோடு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான பிரஜாவுரிமையை வழங்குவதில் காணப்படுகின்ற தாமதமான நிலைமைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளோம். அண்மையில் மொரியஸுக்கான விஜயத்தின் போது இந்த விடயத்தினை கருத்திற்கொண்ட பிரதமர் மோடி உரிய அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கைளை விரைந்து எடுத்திருந்த நிலையில் அதையொத்த வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

இதனைவிடவும், நாட்டின் பொருளாதாரத்தினை மையப்படுத்தி இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை வரவேற்பதோடு, உலகின் ஐந்தாவது பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவுடன் இலங்கை கைகோர்த்துப் பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அமெரிக்காவின் தீர்வை வரி அறிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதையும் வெளிப்படுத்தினோம்.

மேலும், மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்வதையே விரும்புவதை வெளிப்படுத்திய நாம், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கும்போது, இந்தியா அரசாங்கத்துடன் காணப்படுகின்ற நல்லுறவை பயன்படுத்தி எமது நியாயமான உரிமைகள் உள்ளீர்க்கப்படுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம் என்றார்.

இதேவேளை, ஜீவன் தொண்டமான் எம்.பி தெரிவிக்கையில்,

இந்திய அரசினால் இலங்கைவாழ் இந்திய சமுதாயத்தினருக்கும், இலங்கை நாட்டிற்கும் தொடர்ச்சியாக வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியா அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 14ஆயிரம் வீட்டுத்திட்டம், மலையக பாடசாலைகளுக்கான திறன் வகுப்பறை, மலையக மாணவர்களின் கல்வி நலனிற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்து மலையக பெந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கியமைக்கு நன்றிளை தெரிவித்துள்ளோம்.

மேலும் இந்தியாவிற்கும் இலங்கைகக்கும்  இடையிலான நுவுஊ ஒப்பந்தம் அமுல்படுத்துவது தொடர்பாகவும் வலியுறுத்தினோம். அத்தோடு இந்திய பிரதமரிடம் மலையக மக்களுக்கு நிரந்தர தீர்வாக காணி உரிமை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

அத்தோடு  டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை மலையகத்தின் சுகாதாரத்துறையை மேன்படுத்துவது தொடர்பாக குழுவொன்றை நியமிப்பது தொடர்பாகவும் பாரத பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்குவதற்கும் கவனம் செலுத்தினோம். அத்தோடு 1964 ஆண்டு இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையில்  கொண்டுவரபட்ட  சிறீமாசாஸ்திரி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தம் ஒன்று தற்போதைய காலத்தில் கைச்சாத்திடல் அவசியம் என்றும் இதில் மலையக மக்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளடக்கபடவேன்டும் எனவும் கேட்டுக்கொண்டேன்.

மலைய மக்களுக்கு சலுகையை விட உரிமை அத்தியவசியமானது அதனால் தான் மலையக மக்களுக்கு காணி உரிமை தொடர்பாக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29