கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி தொடர்பில் இதுவரை தகவல் இல்லை எனவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் இதனுடன் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவர் என சந்தேகிப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தது.
அத்துடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர், மாணவர் கடத்தலுடன் நேரடியாக தொடர்புபட்ட குழுவுடன் இணைந்து செயற்பட்டவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று மன்றுக்கு தெரியப்படுத்தியது.
இதனிடையே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க கைதாகி பிணையில் உள்ள நிலையில், மற்றைய பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி நாட்டை விட்டு தற்சமயம் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் நேற்று இது தொடர்பிலான வழக்கு விசாரணை கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது ஹெட்டி ஆரச்சி நாட்டில் உள்ளாரா அல்லது தப்பிச் சென்றுவிட்டாரா என இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என புலனாய்வுப் பிரிவு நீதிமன்றிடம் தெரிவித்தது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று மீளவும் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகர உதவி பொலிஸ் அத்தியட்சர் தெசேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர். இது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் நிலையில் நேற்றும் அது குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.
நேற்றைய விசாரணையின் போது இக்கடத்தல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க மன்றில் ஆஜராகியிருந்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கமாண்டர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக் ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ ஆகியோருடன் புதிதாக கைது செய்யப்பட்ட கித் சிறியும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
விசாரணையாளர்கள் சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்ஹ, உப பொலிஸ் பரிசோதகர் சுனில் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
மேலதிக பீ அறிக்கை ஒன்று நீதிவானுக்கு இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. இந் நிலையிலேயே புதிய சந்தேக நபர் தொடர்புபட்ட குற்றம் மற்றும் ஹெட்டி ஆரச்சி தொடர்பிலான விடயம் நீதிவானின் கேள்விக்கு அமைய மன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதனைவிட சட்ட மா அதிபரின் பிரதி நிதித்துவம் தொடர்ச்சியாக மூன்று தவணை விசாரணைகளில் இல்லாத நிலையில் அது தொடர்பில் நீதிவான் நேற்று ஞாபகப்படுத்தல் கடிதம் ஒன்றினையும் சட்ட மா அதிபருக்கு அனுப்பினார். பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான அச்சலா செனவிரத்னவின் கோரிக்கையை ஏற்றே அவர் இதனை அனுப்பினார்.
அத்துடன் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தனவின் கோரிக்கையை ஏற்று அடுத்த தவணையின் போது 2,3,4,5 ஆவது சந்தேக நபர்கள் தொடர்பிலான குற்றம், சாட்சி உள்ளிட்டவையும் அவை தொடர்பிலான விசாரணைகளும் தனித்தனியாக மன்றில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டதுடன் வழக்கை ஜூலை 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM