(இராஜதுரை ஹஷான்)
அமெரிக்க புதிய வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவுடனான எமது வர்த்தக பற்றாக்குறையை குறைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். சீனாவை போன்று புதிய வர்த்தக சந்தைகளை தேடிக் கொண்டு புதிய பண்டங்களை ஏற்றுமதி செய்யும் சந்தைகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல் கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் பெருமளவிலான சந்தை வாய்ப்பினை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்கா வருடாந்தம் 3200 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பண்டங்களை ஏற்றுமதி செய்கின்ற நிலையில், 4100 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பண்டங்களை இறக்குமதி செய்கிறது.
இதனால் வருடாந்தம் 900 பில்லியன் டொலர்களை அமெரிக்கா இழக்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறையினால் அமெரிக்கா ஒருபுறம் தொடர்ந்து கடனடைவதுடன், மறுபுறம் தொழிலின்மை பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது.
இந்த நெருக்கடியான வர்த்தக பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மேலும் புதிதாக தீர்வை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது குறிப்பிட்டிருந்தார். தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெரும்பாலான நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி தற்போது அதிகரித்துள்ளார்.
இலங்கைக்கு 44 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கம்போடியா, லாவோஸ், மடகஸ்கார்,லெசேதோ ஆகிய நாடுகளுக்கு இலங்கையை காட்டிலும் அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய தீர்வை வரி ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும்.
ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிகளில் 25 சதவீதமானவை அமெரிக்காவை பிரதானமாக கொண்டுள்ளது. ஆகவே இது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணாவிடின் பொருளாதார வளர்ச்சி மறைபெறுமானத்தை அடைவதுடன்,பொருளாதார வளர்ச்சி ஒடுக்கநிலையடையும்.
இலங்கையின் உற்பத்திகளில் ஆடை, தேயிலை , தேங்காய் உட்பட பெருமளவிலான பண்டங்களுக்கு அமெரிக்கா 44 சதவீத தீர்வை வரி விதித்துள்ளது.இவ்வாறான நிலையில் இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் தீர்வை வரி குறைவாக உள்ள நாடுகளுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் ஏற்றுமதி வருமானம் குறைவடைவதுடன், டொலர் கையிறுப்புக்கு பற்றாக்குறை ஏற்படும்.பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும்.இலங்கையின் மொத்த ஆடை உற்பத்தியில் 42 சதவீதமானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.புதிய வரி விதிப்பால் ஆடைக் கைத்தொழிலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும்.
ஆடை கைத்தொழிலாளர்கள் தமது கைத்தொழில் நடவடிக்கைகளை பிறிதொரு நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும். தேயிலை , தேங்காய் உட்பட இதர உற்பத்திகளின் நிலை என்ன ? ஆகவே மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்.
அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்படும் பண்டங்களின் அளவை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதேபோல் புதிய சந்தை வாய்ப்புக்களுக்கான வழிமுறைகளை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய சந்தை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது குறித்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை.
இந்தியா அமெரிக்காவின் ஆயுத கொள்வனவு மற்றும் இயற்கை எரிவாயு கொள்வனவின் பற்றாக்குறையை குறைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் சீனா புதிய வர்த்தக சந்தைகளை தேடிச் செல்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவின் புதிய தீர்வை வரியால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தியாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவுடனான எமது வர்த்தக பற்றாக்குறையை குறைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதேபோல் சீனாவை போன்று புதிய வர்த்தக சந்தைகளை தேடிக் கொண்டு புதிய பண்டங்களை ஏற்றுமதி செய்யும் சந்தைகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM