பயிற்சி நடவடிக்கையின் போது வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கே-8 பயிற்சி விமானம் மார்ச் 21 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தின் போது பயிற்சி நடவடிக்கையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் விமான விபத்திற்கான உண்மையான காரணிகளை கண்டறிவதற்காக விமானப்படை உத்தியோகப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது.
தனி குழு அமைத்து இந்த விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொண்டு வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், விமானியின் தவறினாலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மார்ச் 23 ஆம் திகதி தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ விசாரணைகளை விமானப்படை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதாவது விபத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிவதை திசைத்திருப்பும் வகையில் அமைச்சர் பிமல், அடிப்படையற்ற விதமாக விமானிகளை சாடியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துறைசார்ந்த அறிவின்றி விமானப்படையின் விசாரணை அறிக்கை வெளிவரும் முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எவ்வாறு விமானிகள் மீது குற்றம் சுமத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தெளிவுப்படுத்தல் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. விபத்துக்குள்ளான கே-8 விமானத்தின் சீன உற்பத்தியாளர் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு சீன தரப்பை அவதானத்திற்கு உட்படுத்துவதை திசைதிருப்ப இத்தகைய கூற்றுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றது.
இத்தகைய செயற்பாடுகள் இலங்கை விமானப்படையின் தொழில்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்த கவலைகளை எழுப்புகிறது. ஏனெனில் விபத்து நடந்த தினத்தன்று இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.
இராணுவ விமான விபத்து விசாரணைகளின் போது பொதுவாக இடிபாடுகள் ஆய்வு, விமானத் தரவு மதிப்பீடு மற்றும் விமானிகள் வாக்குமூலம் என்பவை ஊடாக விரிவான பகுப்பாய்வு செய்யப்படும். ஆனால் வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளான கே-8 பயிற்சி விமான விபத்து குறித்து இவ்வாறானதொரு விரிவான விசாரணைக்கு முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமானிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவின் ஹோங்டு விமானப் போக்குவரத்துத் தொழில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கே-8 விமானங்கள், பாக்கிஸ்தான், சிம்பாப்வே மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தொடர்புடைய விபத்துகளை எதிர்க்கொண்டுள்ளன.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையிலும் இடம்பெற்ற கே-8 விமானத்தின் விபத்து குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும். ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிற பயிற்சி விமானங்களுடன் இலங்கை விமானப்படையின் முந்தைய சிக்கல்கள் பல உள்ளன.
இதேவேளை விமானப் பாதுகாப்பு கவலைகளுக்கு அப்பால், இவ்வாறான விபத்துக்கள் குறித்து அரசாங்க அதிகாரிகளின் முன்கூட்டிய அறிவிப்புகள் விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன.
எனவே விசாரணை குழுக்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எவ்வாறாயினும் எந்தவொரு நாட்டையும் பொறுத்த வரை, தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை விட வேறு எதுவும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM